Thursday, June 16, 2011

Distilled Waters

சென்னை பைபாஸ் என்றொரு நெடுஞ்சாலை இருக்கிறது. புழலுக்கும் தாம்பரத்துக்கும் இடையே சென்னையை வேண்டா வெறுப்பாய் புறந்தள்ளி நீட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சாலையில், அம்பத்தூர் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்து தினமும் தாம்பரம் செல்கிறேன், பணம் சம்பாதிக்க. செவ்வாய் அன்று ஸ்கூட்டரை உதைத்து தாம்பரத்திலிருந்து வீடு நோக்கி முப்பது கிலேமீட்டர் தீர்த்த யாத்திரை (அதாவது பெட்ரோல் தீர்த்த யாத்திரை) யைத் தொடங்கினேன்.

தாம்பரத்திலிருந்து புறப்பட்ட நானும், கார்மேகத்திலிருந்து புறப்பட்ட இரண்டேமுக்கால் கோடி மழைத்துளிகளும் வெளிப்படையாக மோதிக்கொண்ட இடம் திருநீர்மலை. ஹெல்மெட்டுக்கடியில் காதுகளின் ஓரம் கிசுகிசுப்பாய் பாடிக்கொண்டிருந்த பேலா ஷேண்டே கொஞ்சம் பதற்றமானார். அப்புறம் ம்யூட் ஆனார்.ஒவ்வொரு மழைத்துளியும் பாராங்கல்லாய் பறந்தன. எனது ஹோண்டா ஆக்டிவா மணிக்கு எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருந்ததாலும் மழைத்துளி உத்தேசமாக 9.8 மீட்டர் பர் செக்கண்ட் என்ற கணக்கில் விழுந்து கொண்டிருந்ததாலும், அந்த மோதல் மிகவும் வலிமையாக இருந்தது.. அதாவது, எனக்கு வலித்தது. சுரீர் சுரீர் என்று கூர்மையான ஈட்டிகள் போலப் பாய்ந்து தோலைத் துளைக்க எத்தனித்தன.

சென்னை பைபாஸ் சாலையில் ஒதுக்குப்புறம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. ஓரமாக ஒரு பப்ஸ் கடையில் நிறுத்தி மழைக்கு ஒதுங்கிய சாக்கில், ஒரு வெஜிடபிள் பப்ஸையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கபளீகரம் செய்து மழை நிற்காது என்று அரைமணி நேரம் கழித்து உறுதிப்படுத்திக்கொண்டு நனைந்தபடியே செல்வது வழக்கம். ஆனால், இந்தச் சாலையில் அது நடக்கப்போவது இல்லை. அப்போது சம்பந்தமே இல்லாமல் இரண்டு மகாபாரத நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன.

குருக்ஷேத்திரத்தில் காண்டீபன் எய்த அம்புகள் மழையாய் எழுந்து பீஷ்மர் உடம்பைத் துளைத்தது முதலில் நினைவுக்கு வந்தது. அதுவும் குறிப்பாக பி.ஆர். சோப்ரா ஞாயிற்றுக்கிழமைகளில் காண்பித்த மகாபாரதத்தில், அம்புகள் புறப்பட்டு சுமார் இருபது மாத்திரை அளவுக்கு வானத்தில் பறந்து வர்ண ஜாலங்கள் காட்டி புகைகக்கி, நெருப்பு உமிழ்ந்து, நீர் தெளித்து பொறி பறந்து கடைசியாக பீஷ்மரின் மார்புக் கவசத்தைத் துளைத்து நிற்கும். தனியாக காலியாக இருக்கும் நீண்ட நெடிய சாலைகளில் செல்கையில் இம்மாதிரி கற்பனைகள் கைகொடுக்கின்றன. அந்த நிமிடத்தில் பீஷ்மர் அம்பு மழையில் நனைவதைப்போல எனக்குத் தோன்றியது.. பீஷ்மர் மாதிரியே வாயைத் திறந்தால் வாயில் நீர் தெளித்தது.. ரியர் வ்யூ மிரரைப் பார்த்து "ஆயுஷ்மான் பவ: !" என்று தனக்குத்தானே ஆசிர்வதித்துக்கோண்டேன்.

இனிமேல் நனைவதில் தடையில்லை. ஆனால், மடியில் கனம். செல்போன், வாட்ச், பர்ஸ் போன்ற வஸ்துக்களை ஓரமாக இறங்கி வண்டிக்குள் வைத்தேன். ஹேராம் படத்தில் கமலஹாசன் காசிக்குப்போய் சன்யாசம் வாங்குவாரே.. அந்த மாதிரி, ஒரு பற்றற்ற நிலை.. இனிமேல், இழப்பதற்கு ஏதும் இல்லை.. "ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வதே சாக்ஷி பூதம் !" எல்லாம் அந்த திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் காப்பாற்றுவார் என்று total surrender ஆகிவிட்டேன். பரிபூரண சரணாகதி.. ! த்ரௌபதி துகிலுரியப்பட்டபோது இரண்டு கைகளையும் இழுக்கப்பட்ட புடவையைப் பிடித்து இழுக்காமல், சரணாகதியாய் மேலே தூக்கி அந்தப் பரம்பொருளைப் ப்ரார்த்தனை செய்தாளே !! Now thats what i call a total surrender !

அப்படி ஒரு நிலை.. ஓரத்தில் தேங்கியிருந்த நீரை அரக்கத்தனமான வேகத்தில் வந்த லாரி வான்மார்க்கமாக தெளித்து, அருவியில் குளிப்பாட்டுவது போல் குளிப்பாட்டிவிட்டுச் சென்றது.. சாதாரணமான நாளாக இருந்திருந்தால் கோபம், அருவறுப்பு எல்லாம் வந்திருக்கும்.. இப்போது சிரிப்பு வந்தது.. பேரின்பமாய் இருந்தது.. கட்டுப்பாடற்ற எல்லையற்ற கவலையற்ற நிலை.. சட்டை பேண்ட் எல்லாம் தாண்டி உள்ளாடைகள் வரை தொப்பமாய் நனைந்தாகிவிட்டது.. ஹெல்மெட்டுக்குள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று கேட்டது அனேகமாக ப்ரமைதான்.

மழை விட்டது. வீடு வந்து சேர்ந்தபோது, ஈரம் பிசு பிசுவென உடம்பில் ஒட்டியது கடுப்பாக இருந்தது. !

Thursday, December 09, 2010

விமர்சனப் படம்

படம் பார்த்தபின் விமர்சனம் செய்வது ஒரு வகை.. படம் பார்த்த்துக்கொண்டிருக்கும்போதே, டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குறு-விமர்சனம் செய்வது ஒரு வகை.. படம் வருவதற்கு சில நாட்கள் முன்பே ஊகத்தில் கருத்து தெரிவிப்பது ஒரு வகை.. படம் தயாரிக்க தயாரிப்பாளர் நோட்டு அச்சடிக்க உட்காரும்போதே ஸ்பெக்குலேட் செய்து, இவள்தான் கதாநாயகி, இது அந்த ஆங்கிலப்படத்தின் தழுவல், தெலுங்கு பட உல்டா என நாமாக கதையளப்பது ஒரு வகை..

சும்மா இருக்காமல், இன்னும் ஒரு வகை செய்வோம்..அதற்குமுன், lets hold that thought. !


சினிமா விமர்சனம் என்கிற ஈக்குவேஷனில் மூன்று entityக்கள் உள்ளன. முதலில் சினிமா (சினிமா என்கிற வஸ்து, அதன் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் பயன்).. அடுத்து விமர்சகர்.. அடுத்து வாசகர் அல்லது விமர்சன நுகர்வோர்.


இதில் மிக முக்கியமான இரு variables - விமர்சகர் & வாசகர்.

பெரும்பாலான விமர்சகர்களின் வரிகளைப் படிக்கும்போது, ஒரு அதிமேதாவி தன் பூதக்கண்ணாடியால் பலகோடி ரூபாய் பெருமானமுள்ள, பல பேரால், பல நாட்களாக  செதுக்கப்பட்ட முயற்சியை, தனது வாழ்க்கைத் தரம், தனது மன நிலை, தனது அனுபவ அறிவு, தனது கற்பனை, தனது ஆசை, தனது விரக்தி, தனக்குத் தெரிந்த "வெகுஜன" விருப்ப/வெறுப்பு - ஆகிய மட்டக்குறிகள் கொண்டு அளக்கப்பட்ட தேர்ந்த அல்லது தேறாத கருத்தாகத் தோன்றுகிறது.

சில விமர்சகர்கள், அந்தப் படம் தனக்கென ப்ரத்யேகமாக எடுக்கப்பட்டதாக பாவித்து, சிலாகித்தோ அல்லது சின்னாபின்னமாக்கியோ எழுதுகிறார்கள்.
 சிலர், "மக்கள்" என்ற பெயர்ச்சொல்லுக்கு "தன்னைத் தவிர உள்ள இதர உயிரினங்கள்" என்ற பொருள் கொண்டு ஒரு படத்தை "மக்கள்" எவ்வாறு க்ரஹிக்கிறார்கள் என்று க்ரஹிக்கிறார்கள்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். "சினிமா விமர்சனம்" என்ற ஒரு கோட்பாடு எவ்வாறு உட்கொள்ளப்படுகிறது.. Contrary to the popular belief, விமர்சனத்துக்கும் பட வெற்றிக்கும் பெரிய சம்பந்தம் இல்லை (என சில பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன). Metacriticல் அதிக மார்க் வாங்கிய படங்கள் எல்லாமே வெற்றிபெற்ற படங்கள் இல்லை. ஆனந்தவிகடனில் நாற்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்று டெப்பாசிட் இழந்த பல படங்களும் அதற்கு ஆதாரம்.

அடிப்படையில் சினிமா என்பது சீரியசான ஒரு விஷயம் இல்லை என்பதால், அதன் தரம் "அளவிடப்பட்டு" நுகரப்படுவதில்லை. விளம்பரம் என்னும் மாயைதான் இன்னும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. விமர்சனம் அளவுகோல் இல்லை - வெறும் Arguement தான் (என்பது என் கருத்து). இன்னும் ஒரு பரிமாணத்தில், ஒரு சுய பரிசோதனையாகத் தோன்றுகிறது. படம் பார்த்தபின் விமர்சனம் படிப்பது இதில் சேர்த்தி. விமர்சகர் அறிவைத் தட்டிக்கொடுப்பதோ அல்லது முகவாயில் விளாசுவதோ - நாம் எப்படி அவருடைய கருத்தோடு ஒப்பிட்டுப் போகிறோம் என்பதைப் பொறுத்து உள்ளது.

சரி, lets bring back the thought. இன்னும் ஒரு வகை.

எனது பழைய பாஸ் கூப்பிட்டு எல்லார் முன்னிலையில் மேனி கூச அளவில்லாமல் பாராட்டி, அடுத்த காரியத்தை கையோடு பணித்து சிரமேற்று செய்யச்சொல்லுவார்... - "I've given you the Oscars.. go make the movie !" என்பார்.

அப்படிச் செய்தால் என்ன.. ? ஒரு மகத்தான சினிமா.. மாசற்ற தயாரிப்பு.. - இன்னும் அப்படி ஒரு படம் வரவில்லை என்ற ஊகத்தின் அடிப்படையில் - ஒரு விமர்சனம் எழுத வேண்டும். A review of a perfect movie, that is still a pre-concept. யோசிப்போம்.. !

அதற்குப் பிறகு சினிமா எடுக்கலாம்.

Friday, November 12, 2010

Unstoppable



UnStoppable.. நம்ம ஸ்பீட் படம் மாதிரி விறுவிறுவிறுவிறுப்பான படம்.  லாஜிக் புடலங்காய் எதுவும் கவனிக்காமல், ஒரு லார்ஜ் கொக்க கோலாவை சப்பிக்கொண்டே பார்த்தால் படம் முடியும்போது பாத்ரூமுக்கு ஓடுவீர்கள்.. அதாவது, நடுவில் நகர முடியாமல் கட்டிப்போடும் "High Octane" திரைக்கதை.. டோனி ஸ்காட் (டென்ஸல் வாஷிங்டனின் ஆஸ்தான டைரக்டர் - க்ரிம்ஸன் டைட், மேன் ஆன் ஃபையர், டேக்கிங் ஆஃப் பெல்ஹாம், டேஜாவூ) நம்ம ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ண ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்..

என்ன நடந்தாலும் நம்ம டென்ஸல் வாஷிங்டன் காப்பாத்திவிடுவார் என்று நம்பினார் கைவிடப்படார். இப்பொழுதெல்லாம் ஆபீஸில் ப்ரொடக்ஷன் இஷ்யூ வந்தால் கூட, அடுத்த லிஃப்ட்டில் டென்ஸல் வாஷிங்டன் வந்து அபயஹஸ்தம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.. !


ஒரு ரயில் இஞ்சினீயரின் சின்ன சொதப்பலில் ஒன்றரை மணி நேரப் படம் ஆரம்பிக்கிறது.. இப்படி எல்லாம் நடக்குமா ? இவ்வளவு கவனக்குறைவாக யாராவது இருப்பார்களா ? என்ற லாஜிக் எல்லாம் வீட்டுக்கு வந்த பிறகுதான்.. தியேட்டரில் " நிவந்தன புருவம், நல் நுதலில்".. !

ஆளில்லாத ரயில், நம்ம ஊர் வியாசர்பாடி ரயில் மாதிரி வேகம் எடுக்கிறது.. கூடவே திரைக்கதையும்.. அந்த ரயிலை அதிக சேதம் இல்லாமல் எப்படி நிறுத்துவது.. அட.. அதற்கென்ன ?! ஹெலிகாப்டரில் ஆளை இறக்கி இண்டிகேட்டர் போட்டு ப்ரேக்கை அமுக்கினால் போச்சு.. ஆனால் மனித மனம் வித்தியாசமாக யோசிக்கிறது.. இப்பொதானே பத்து நிமிஷம் ஆச்சு.. அதெல்லாம் வேண்டாம்.. என்று ஓரமாக ஒரு விருப்பம் எழுகிறது.. இயக்குனர் நமக்கு அடிபணிந்து டாப் கியரில் "அமுக்குடா ஆக்ஸலேட்டரெ !!" என்று தூக்கு தூக்குகிறார். Sheer adrenaline !

படத்தின் பின்னனி இசை.. வாவ் !! முதல் சில சீன்களில் ப்ரிட்ஜின் மீது வெறும் இஞ்சினில் டென்ஸல் வாஷிங்டன்னும், க்ரிஸ் பைனும்  நகர்கின்ற காட்ச்சிகளில் இனிமையோ இனிமை.. ! அதே போல படத்தின் திரைக்கதையோடு போட்டி போட்டு ரத்த நாளங்களில் படபடப்பை ஏற்படுத்துகிறது - பின்னனி இசை.. டாப் க்ளாஸ் !

கேமரா, எடிட்டிங் எல்லாமே பக்கபலம்.. இன்ஃபாக்ட்,  சில பல சொதப்பல்கள் தெரியாமல் இருக்கவும்,  நடு நடுவில் இரண்டு நிமிட இடைக்கதை செறுகல்களால் படம் தொய்வடையாமல் இருக்கவும் கேமராவும் எடிட்டிங்கும் உதவுகின்றன..

ஆக மொத்தத்தில் another hollywood action movie.. just a class apart !

Sunday, November 07, 2010

Whats the difference between Villain and Super Villain ?

PRESENTATION !!!!!!

--------------------------------------------


All men must choose between two paths. Good is the path of honour, friends and family. Evil... well, it's just cooler. Hit it!

Saturday, October 30, 2010

Saturday, October 02, 2010

எந்திரன் - தோற்ற மயக்கங்களோ .. இல்லை காட்சிப் பிழைதானோ !

நல்லவேளையாக இருபத்தைந்து டாலர் செலவழிக்காமல், இரண்டாம் நாளே இருநூறு ரூபாயில் "எந்திரன்" பார்த்தாகிவிட்டது.

சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கர் என பெயர்ப்பட்டியல் பூராவும் பெருஞ்சம்பளக்காரர்கள். தமிழ்த் திரை உலகின் வர்த்தகவட்டத்தை விஸ்தாரமாக்கக்கூடிய ப்ரம்மாண்டம். 2007ன் சிவாஜியைக் காட்டிலும் பல மடங்கு பரபரப்பு.. இப்படி படம் வெளிவருவதற்கு முன்னரே வெற்றியின் வாசனையுடன் கம்பீரமாக வெளியாயிருக்கிறது - எந்திரன்.

எதிர்த்த ரோவின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ரோமங்கள் சிலிர்த்தெழுந்து அனிச்சையாக விசிலடித்து கைதட்டி ரசிக்கும்  ஒரு ரஜினி ரசிகனுக்கும், "ரஜினி படம்னா குழந்தைகளோட போலாம்" என்ற எண்ணத்தில் குடும்ப்பத்தோடு வந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கி சுவாரஸ்யங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் "Mr. வெகுஜன"த்திற்கும், "அட.. இது பைசென்டினியல் மேன் உல்டா... அ வெரி பேட் ஐ ரோபோ ரிப் ஆஃப்.." என தன் சுய அறிவுத்திறனை அளந்துபார்க்கும் விக்கிப்பீடியா ப்ரஜைக்கும் - ஒரு உண்மையான சத்திய சோதனை "ரோபோ" என்கிற "எந்திரன்".

விஞ்ஞானி ரஜினி படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திற்குள் ரோபோவை உருவாக்கி முடிக்கிறார்.. அது ஒரு ரோபோ.. அதற்கு எல்லா மொழிகளும் தெரியும்.. நடனம், நாட்டியம், ஓவியம், சமையல், சண்டை - எல்லாம் தெரியும் - மனிதன் பணிக்கும் காரியங்களைச் செய்து முடிக்கும் - என்று இத்தனை நாட்களாக குறைத்து மதிப்பிட்டிருந்த "சராசரி" தமிழ் ஆடியன்ஸுக்கு  கற்றுக்கொடுப்பதுபோல் சொல்லாமல், "இதெல்லாம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிஞ்சது தானே ?" என்பதுபோல் காண்பிக்கிறார்கள். "இதெல்லாம் சூப்பரா+ சுலுவா புரிஞ்சுது தலைவா.. ! நீ மேட்டருக்கு வா !!!" என்று ரசிகன் அடுத்த லெவலுக்கு டக்கென்று தாவிச்சென்று கைதட்ட கைகளை ரெடியாக வைத்துக்கொண்டு நிற்கிறான்.

இங்கேதான் சிக்கல். படத்தில் விஷயம் இவ்வளவுதான்.

காலை உதைத்து தொடையைத் தட்டி தலைமுடியில் தெறித்துப் பறக்கும் நீர்த்துளிகளுக்கு மத்தியில் கண்களில் வெறியுடன் "மலே டா !" என்று சவால் விட்டு REVENGE - பழிவாங்கல்படலம் எடுக்க இன்டெர்வெல் விடும் ரஜினிகாந்த் படம் - எந்திரன் இல்லை.

ரோபோ ரஜினிக்கு "உணர்ச்சிகள்" கற்பிக்கப்பட்டவுடன் விஞ்ஞானி ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யா ராயை காதலிக்க ஆரம்பிக்கிறது. சோ, அது வில்லனாகின்றது. ப்ரச்சனை என்னவென்றால், நாம் இனிமேல் அந்த வில்லன் ரோபோவை கைதட்டி ஆரவாரப்படுத்தவேண்டும் என்ற "சொல்லப்படாத" நிர்பந்தம் நம்மை "ethical dilemma"வில் கொண்டுவிடுகிறது.

தியேட்டரில் குழப்பம் ஆரம்பிப்பதும் இங்கேதான். சில பேர் கைதட்டுகிறார்கள்... சில பேர் தயங்குகிறார்கள்.. Not well established !! விஞ்ஞானி ரஜினி - அதாவது நல்ல ரஜினியும் போஷாக்கான ஹீரோவாக இல்லை.. சோகமாவே + சோர்வாகவே காணப்படுகிறார். கெட்ட ரஜினி செய்யும் ரகளைகள், கொலைகள், கோரத்தாண்டவங்களுக்கு கைதட்டுவது நம் பண்பாட்டில் இல்லை.. அட.. ஒரு ரஜினி படத்துக்கு வந்துவிட்டு கைதட்டவில்லை என்றால் எப்படி.. ? ஸ்டைல், மேனரிசம், பன்ச் டையலாக் என எல்லாமே கவனமாக அடக்கிவாசிக்கப்பட்டிருப்பதால் திருவிழாவில் கோலாகலம் குறைவு. Just not a Rajinikanth style.

படத்தின் முன்பாதி கவனிக்கத்தக்கது. வசனங்களும், ஒப்பனைகளும், உடைகளும் ரிச் ! நல்லத்தனமாக இருக்கும் வரை ரோபோ ரஜினியின் காஸ்ட்யூம்கள் அட்டகாசம்.. கடந்த இருபது வருடங்களில் இளமையான ரஜினியின் தோற்றம் - ரோபோ. சந்தானம் என்ன முயற்சி செய்தும் பெரிய காமெடி எதுவும் இல்லை.. சில இடங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை அட்டகாசம்.  பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - ம்ம்ம்ம்.. ஓகே !!

முன்பாதி - கொஞ்சம் நல்ல கதை என்றால் பின்பாதி - வதை. ரொம்பவும் கொஞ்சமாகவே ரஜினியை ரசிக்கமுடிகிறது.. அதாவது வில்லன் ரஜினியை.. நூற்றுக்கணக்கில் ரஜினியை திரையில் தோன்றவிட்டு கதையை இழுத்தடிக்கிறார்கள். விறைப்பாகத் தோன்றும் ரஜினியின் டைட் க்ளோசப் காட்சிகள் முன்பாதியில் வெகு அழகாக காண்பிக்கப்பட்ட ரஜினிக்கு த்ரிஷ்டி.

கடைசி சண்டைக் காட்சி - பேத்தல். Sphere formation, Snake formation என்று ஹை ஸ்கூல் மாஸ் ட்ரில் கணக்காக நூற்றுக்கணக்கான ரஜினி ரோபாட்டுகள் சண்டை போடுவது அறுபது செக்கண்டுகளுக்கு மேல் நீடிப்பதால் கொட்டாவி விட வைக்கிறது. அது சரி.. ஷங்கர் படம் தானே.. ! கடைசியில் ரோபோ ரஜினி தன்னைத் தானே டிஸ்மேன்டில் செய்து கொள்வதுடன் படம் முடிகின்றது.. அட்லீஸ்ட் ஒரு அரை மணி நேரம் லேட்டாக !

ரஜினிகாந்த் படம் என்றால் என்ன ? ரஜினி நல்லவராக காண்பிக்கப்பட வேண்டும்.. பின், அவருக்கு கெட்டது நடக்க வேண்டும்.. பின், அவர் சோர்விலிருந்து சிலிர்த்தெழுந்து பழிவாங்கி, "நல்லது செய்தால் நல்லது நடக்கும்" என்ற உயர் தத்துவத்தை விளக்கும் விதத்தில் செயல்பட வேண்டும்.. சிவாஜி மாதிரி.. ஆனால், இன்னும் பவர்ஃபுல்லாக..

எந்திரன்.. ரஜினிக்காக செய்யப்பட்ட கதையாக எனக்குத் தோன்றவில்லை. ரஜினிக்கு இன்னும் மெருகேற்ற வேண்டும்..எந்த ரோலும் - ஹீரோவாகட்டும், வில்லனாகட்டும், didn't have the weights for Rajinikanth. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதையை / படத்தை மாபெரும் வெற்றியாக்கக்கூடிய ஒரே லேபிள் - ரஜினிகாந்த்.

டாட்.

Monday, September 20, 2010

நிச்சயதார்த்தம்

PUMPKIN:A lot of people go to restaurants
YOLANDA:A lot of wallets
PUMPKIN:Pretty smart, huh?
YOLANDA: Pretty smart. I'm ready, let's go, right here, right now
PUMPKIN:Remember, same as before, you're crowd control, I handle the employees
YOLANDA:Got it.
YOLANDA:I love you, Pumpkin.
PUMPKIN:I love you, Honey Bunny.
PUMPKIN:(yelling to all) Everybody be cool this is a robbery
--
Getting engaged today with Srilakshmi

Friday, August 06, 2010

ரோபோ - சூப்பர்



முதலில் சகிக்கவொண்ணாமல் தோன்றி, மனது ஆறாமல் ஓயாமல், தேயாமல் கேட்டு - பின் பச்சக்கென்று பதிந்து போகும் வழக்கமான ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் ரோபோவில் இரண்டு நாட்களுக்குப் பிறகு காதுக்கும் கழுத்துக்கும் வேலை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

கிளிமஞ்சாரோ பாடல் அட்டகாசம்.. இரும்பிலே பாடலில் வரும் "எந்திரன்"  என்ற ஹம்மிங் வரும்போது மெய் சிலிர்க்கிறது.. பூம் பூம் ரோபோடா பாடலின் ரீமிக்ஸ் ஸ்லம்டாக் படத்தில் வரும் பாடலை ஒத்து இருந்தாலும் அதிர்கிறது.

வைரமுத்து சில இடங்களில் ஆஹா போட வைக்கிறார். பாக்கி இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார் (சில வரிகள் ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கிறது)..

புதிய மனிதா பாடலில் வைரமுத்து ஜொலிக்கிறார்.
"ஈரல் கனையம் துன்பமில்லை
இதயக்கோளாரேதுமில்லை
...
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி.. "

அதே வைரமுத்து
"செந்தேனில் ஒஸ்ஸாபி
மேகத்தில் பூத்த குலாபி" என்னும்போது நெளிய வைக்கிறார்..

"கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு.. " - எனும்போது கார்க்கி (புதுசோ?) புன்னகைக்க வைக்கிறார்..


ஆல் இன் ஆல், ரோபோ ம்யூசிக் சூப்பர் !!!

-------------------

பிகு - நண்பன் ஸ்ரீகாந்த் சொல்லி "கிளிமஞ்சாரோ" பாடலில் சின்மயியின் குரல் நுணுக்கத்தை வியந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. 

Friday, July 30, 2010

Wednesday, July 28, 2010

அமுக்குடா ஆக்ஸலேட்டர.. !



படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால்.. மயக்கத்திலிருந்து விடுபட்ட உணர்வு.. அத்தனை நேரம் கிராமத்தில் இருந்துவிட்டு வந்த "கனவு கலைந்த" நிலை. தெரிந்தோ தெரியாமலோ,.. ஒரு அன் - ஆர்தொடாக்ஸ் படம். சூப்பர்.
சினிமாவின் "கிராமப் படம்" ஃபார்முலாவை உடைத்தெரிந்து பல படங்கள் வர ஆரம்பித்துள்ளன.. எல்லாவற்றையும் பார்த்ததில்லை என்பதனால் அவற்றோடு இந்தப்படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் தெளிவு என்னிடத்தில் இல்லை.

இந்தப் படத்தில் பல பேரின் நடிப்பு, அபாரம்.. unfortunately overlook செய்யப்படும். அதிகபட்சம் விகடனில் படத்துடன் பேட்டி வரும். அவ்வளவே..

கதை... தெரிந்தகதை.. சுமாராக ஊகிக்கக்கூடிய கதை.. என்றாலும் ஊகிக்க விடாமல், கதையோடு கவனம் சிதறாமல் கூட்டிச்செல்லும் திரைக்கதை.. க்ளாஸ் ! இன்டர்வெல் இல்லாமல் கூட பார்க்கலாம்.. (பாட்டு மட்டும் கொஞ்சம் கைகொடுத்திருந்தால்)

எனக்கு வியப்பாக இருப்பது.. இந்தப் படத்தில் அனாயாசமாக + அனிச்சையாக இருக்கும் perfections. எல்லா கதாபாத்திரங்களையும் நாமே எடை போடுகிறோம்.. அவர்களோடு பழகி அவர்களைப் பற்றி தெரிந்துகொள்கிறோம்.. The movie is open.. and lets us to be judgemental. யாரையும் "நல்லவன்" "கெட்டவன்" என்று சாயம்போட்டு, BGM கொடுத்து பில்டப் தரவில்லை.. நாமாக தெரிந்துகொள்கிறோம்..மெல்லிதான காமெடி இழையோடியபடியே நகரும் இடத்தில், கஞ்சா கறுப்பு நுழையும் போது இடியுடன் கூடிய மழை.. வெல் தாட் !

A. சற்குணம் - இயக்குனரின் முதல் படம். அவருக்கு ஒரு ஷொட்டு ! ஹீரோ.. ஹீரோயின் தவிர்த்த அத்தனை நடிகர்களும் அபாரம்.. ஒளிப்பதிவு ப்ரமாதம்.. எடிட்டிங் - கச்சிதம்.. இசை - சுமார்.. கதை - சுமார்.. திரைக்கதை - ஓஹோ !

இயக்குனர்.. அடுத்த படத்தை "காதல்" இல்லாமல் எடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பேன்.. நம்ம தமிழ் சினிமா உடனடியாக வெளியே வரவேண்டிய விஷயங்கள் - காதல், கிறுக்கு (அ) பொறுக்கி ஹீரோ சப்ஜெக்டுகள்...

நம்ம ஊரில் "களவானி" இன்னும் ஓடுகிறதா ? நன்றாக ?

Tuesday, July 13, 2010

செப்டம்பர் மாதம்

வாழ்வின் துன்பத்தை, தொலைத்து விடுவேன்..

ஒரு மாதம் விடுமுறையில் சென்னைக்கு வருகிறேன்..

ஏரோப்ளேன் டிக்கெட் வாங்கிவிட்டு இப்பொழுதுதான் வந்தேன். இப்பொழுதே மிதக்க ஆரம்பித்துவிட்டேன்.

இராமன், இராவணனை வதை செய்து சீதையை மீட்டு, ரிட்டர்ன் வருவதற்காக புஷ்பக விமானத்தில் ஏறி நின்றபோது, அவர் பொலிவு எப்படி இருந்ததாம் ? இப்படி..

அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ.

அப்படிப்பட்ட பொலிவு.. நிச்சயம்.

Saturday, July 10, 2010

Despicable Me



Despicable Me  - வெகு நாள் கழித்து மகிழ்ந்து மனதாற ரசித்து சிரித்து இன்புற்றிருந்த ஒன்றரை மணி நேரம் - இந்தப்படம்.

பாக்கியம் இருந்தால் பாருங்கள்.

Saturday, June 19, 2010

பொம்மை படம்



பார்த்தாயிற்று.. IMAX 3D திரையரங்கில் பார்த்தாயிற்று.. அவ்வளவு ஒன்றும் அபாரமாக இல்லை என்றாலும், அச்சுப்பிச்சுத்தனமாக இல்லை..

இங்கே, நிறைய பேர் "ராவணன்" படத்துக்கு செல்ல ஆசைப்பட்டதாலும், நான் அதைப் பார்க்கக் கூடாது என்ற முடிவில் இருப்பதாலும், துணைக்கு யாரும் இல்லை என்றாலும், கஷ்டப்பட்டு, கொளுத்தும் வெய்யிலில் பஸ் பிடித்து, "Toy Story 3" பார்க்க திரையரங்கில் நுழைந்தேன். குழந்தைகளும், அவர்களைக் கூட்டிவந்த (அனேகமாக) பெற்றோரும் க்யூ கட்டி நின்று கொண்டிருந்தனர். நல்ல வேளையாக கடைசி வரிசையில், நடுவாந்தரத்தில் இடம் கிடைத்தது.. படம் ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

பக்கத்தில் க்யூட்டாக ஒரு சிறுமி உடகார்ந்து கொண்டு Ring Pop (மோதிரம் மாதிரி மாட்டிக்கொண்டு சப்பிச் சாப்பிடவேண்டிய லாலி பாப்) சப்பிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் அவள் தோப்பனார், என்னைப் பார்த்து, "Man, the tickets costing almost like a vacation.. !" என்றார். தலைக்கு பதினைந்து டாலர் என்ற கணக்கில் ஏழு பேரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். ஒன்று தனித்தனியாக "சிங்கிள்"ஆக அலைகிறார்கள்.. இல்லையென்றால் ஒன்று கூடி வத வத என்று பெற்றுத் தள்ளுகிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் ஓடினால், அங்கிருந்த தகப்பன்கள் எல்லாடும் பெருமூச்சு விடுவார்களோ என்று எண்ணியபடியே, கொக்கொ கோலாவை உரிஞ்சினேன்.

பக்கத்து சிறுமி பேச ஆரம்பித்தாள். "i'm scared of 3d.. ya know.. they come closer to your face.." - குழந்தைகளின் பயம் எல்லாம் நமக்கு சிரிப்பாக இருந்தாலும், எங்கிருந்தோ ஒரு பரிதாப உணர்ச்சி சுரப்பது விந்தையாக இருக்கிறது.

"oh.. no.. sweety, you dont have to be scared.. it will be fun.. now, who's your favourite character ? woody ? or buzz light year ?"
"woody's sister, Jessie" என்றாள். அட, ஆமாம்லே.. பெண் குழந்தை அல்லவா ?

"i've seen toy story part 1.. and we have a dvd of part 2.. and we have come to see part 3.. will there be a part 4 ? Rey tells me there is a part 4.. Rey tells  me part 3 is very good.. is it good ?"
அவள் மழலையாகப் பேசவில்லை என்றாலும், அழகாக இருந்தது.. என்னுடைய அக்காவின் குழந்தை தேஜாவின் ஞாபகம் வந்தது..

"Yes.. it is going to be good.. you are going to love it.. aren't you ?" என்றேன்.. அப்பா பாப் கார்ன் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்.

டிரெய்லர் போட ஆரம்பித்தார்கள். நான் கோக் வைத்திருப்பதைப் பார்த்து, அவள் தன் இன்னொரு கையில் இருந்த செர்ரி ட்ரிங்கை காண்பித்து, அதன் ஸ்ட்ராவையும் ring popபையும் ஒன்றாக வாய்க்குள் விட்டபடி, "See, I can do both.." என்றாள்.  "Great !!"  என்றபடி டிரெய்லரில் மூழ்கினேன்.

"Toy Story 3"க்கு முன் "Day & Night" என்ற குறும்படம் போட்டார்கள். அப்போதும் பேசிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. கஷ்டப்பட்டு கவனிக்காமல் இருந்தேன். குறும்படம் அபாரமாக இருந்தது. 2டியையும் 3டியையும் ஒன்றாகக் கலந்து நமக்கு சுகமாக+ ரொம்பவும் வித்தியாசமாகக் கதை சொல்கிறார்கள். Simply wonderful. கூடிய சீக்கிரம் யூட்யூபில் வரும்.. அப்போது லின்குகிறேன்.

படம் ஆரம்பித்தது. பக்கத்து சிறுமி 3D கண்ணாடி போடாமல் படம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தந்தை அதை கவனிக்கவில்லை.. கண்ணை இடுக்கி சிரமப்பட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.
"Wear your glasses, dear..." என்றேன்..
"No, im scared.. i dont want to see this movie" என்றாள்.

எனக்கு இதில் ஏதாவது கடமை இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். இந்தக் குழந்தை யாரென்றே தெரியாது. அவள் தலையை லேசாகக் கோதிவிட்டுவிட்டு.. "Dont be scared... it will be fun.. it will be colorful.. go ahead.. " என்று சொல்லும்போது Woody கதாபாத்திரம் பேச ஆரம்பித்திருந்தது.. அப்பொழுதுதான் இயல்பான அக்கரைக்கும் போலித்தனமான அக்கரைக்கும் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. கவனம் படத்தின் மீது பதிந்து அதில் மூழ்கினேன்.

பத்து வருடத்துக்கு முன் பார்த்த படம் என்றாலும், பசுமையான நினைவுகள் செட்டென நிகழ்வுக்கு வந்தது. சுவாரஸியமான கதை.. விறு விறுப்பான திரைக்கதை.. துல்லியமான வடிவங்கள், கண்ணைப் பறிக்கும் நிறங்கள்.. (3டி - மன்னிக்கவும், சுத்த வேஸ்ட்) என வழக்கமான பிக்ஸார் பட அம்ஸங்கள் இதிலும். சுகானுபாவம். குழந்தையாக மாறி ரசித்து, சிரித்து, (கொஞ்சமாக) அதிசயித்து மகிழ்ந்திருந்தேன்.

முதல் இரண்டு படங்களைப் பார்த்தவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். புதிதாகப் பார்ப்பவர்களுக்கு கதை புரியாமல் போக வாய்ப்புள்ளது.

ஒரு பெட்டி நிறைய பொம்மைகள் வைத்து விளையாடி வந்த "Andy" காலேஜுக்கு செல்லும் பருவம் வந்துவிட்டதால், பரனுக்கு செல்ல பொட்டலம் கட்டப்படுகிறது. தவறுதலாக, அந்த பொம்மைகள் ஒரு டே கேர் சென்டருக்கு தானமாக வழங்கப்படுகிறது. அங்கே அந்த பொம்மைகள் படும் அவஸ்தையும், வீடு திரும்ப அந்த பொம்மைகள் போடும் திட்டமும் தான் கதை.

ஆனால் தொய்வில்லாமல் நகர்கிறது.  ஜாலியாக !

படம் வழக்கமான சுபத்துடன் முடிந்தது. பக்கத்து சீட்டு சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். பாவம் !

Saturday, June 05, 2010

அமெரிக்-கோயில்

"கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று எப்போதோ படித்த / கேள்விப்பட்ட ஒரு வாக்கியம் டேலஸ் செல்வதற்கு முன் நினைவுக்கு வந்தது.. உடனே நண்பனிடம் தொலைபேசியில் கேட்டேன்..

"டேய்.. நான் இருக்கப்போற வீட்டுக்குப் பக்கத்துல கோயில் ஏதாச்சும் இருக்கா ? "
"ம்ம்.. இருக்கே !"
"ஆஞ்சனேயர் கோயில் ?"
"இருக்குடா.. நீ தோசைக்கல்லும் மிக்சியும் மறக்காம எடுத்துண்டு வா" என்று போனை வைத்துவிட்டான்.

இங்கே வந்து பார்த்தபோது, நல்லவேளையாக நிறைய கோயில்கள் இருக்கின்றன. Dallas / Fortworth - DFW Hindu Temple Society என்று ஒரு பெரிய கோயில் இருக்கின்றது. (பார்க்க படம்)


DFW Hindu Temple Panorama

இங்கே சகல விதமான தெய்வங்களும் சங்கமித்து அருள்பாலிக்கிறார்கள். வட இந்திய சாமிகளுக்கு வாசலில் ஜிப்பாவும் சாக்ஸும் மாட்டிக்கொண்டு "பண்டிட்"கள் பாதாம் பருப்பும், முந்திரிப்பருப்பும் (அவ்வப்போது மோதி லட்டுவும்) ப்ரசாதம் தருகிறார்கள். நம்ம ஊர் சாமிகளுக்கு பனியன் போட்டு பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு குருக்கள் மாமா இருப்பார். பெரும்பாலும் நம்ம ஊர் ஆட்கள்தான் வேதம் சொல்லிப் பார்த்திருக்கிறேன். இந்தக் கோயில் நல்ல ப்ரசித்தி.. ஆரத்தி, மற்றும் முக்கிய நாள் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் தவறாமல் நடைபெறும். ஃப்ரீயாக கேலண்டர் கொடுக்கிறார்கள். இங்கே பெரிய பார்க்கிங் இடம் இருந்தாலும் சனி ஞாயிறில் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். கூடிய சீக்கிரம் "டிரைவ் இன் தர்ஷன்" என்று கண்டுபிடிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை..

இது தவிர "ஸ்ரீ கணேஷ் டெம்பிள்" என்ற கோயில் ப்ளேனோ என்ற இடத்தில் இருக்கிறது.. "காரிய சித்தி ஹனுமான்" என்ற கோயில் சனி ஞாயிறில் அன்னதானத்தோடு ஃப்ரிஸ்கோ என்ற இடத்திலும், இர்விங் / ப்ளேனோ இடங்களில் நம்ம ஷீரடி சாயிபாபா கோயிலும் இருக்கின்றன. வெப் சாப்பல் ரோடில் ஒரு சத்ய நாராயணர் கோயில் இருக்கிறது.


சில வட இந்தியக் கோயில்களுக்கு செல்வதில் என்ன ப்ரச்சனை என்னவென்றால், அங்கே எப்படி சாமி கும்பிடுவது என்றே தெரியாது. வெள்ளை வெளேர் சலவைக்கல்லில் சாமி அழகாக இருந்தாலும், பழக்கம் இல்லாததால்,... "ஹாய் ஹவ் ஆர் யூ ! நைஸ் மீட்டிங் யூ !!" என்று வெளியே வந்து விடுவேன்.. என் வழக்கத்தில் தீபாராதனை காமித்தால்தான் முகம் தெரிய வேண்டும்..

இங்கே பெரும்பாலான கோயில்களில் "ஆரத்தி" பாடுகிறார்கள். எல்லாருக்கும் ஸ்லோகங்கள் அச்சடித்த பேப்பர்களைக் கொடுத்து பாட வைத்துவிடுகின்றனர்.  கோரஸாகப் பாடினால் குரல் வளம் கிண்டலக்கப்படாது என்ற தைரியத்தில் பக்தி மார்க்கத்தில் பயணிக்கலாம்..பயணத்தின் முடிவில் ப்ரசாதம் நிச்சயம்.

தட்சனையாக தட்டில் பெரும்பாலும் "ஒரு டாலர்" நோட்டு போடப்படும். பத்து டாலர் அரிது.. ஃப்ரிஸ்கோ ஆஞ்சனேயர் கோயிலில் $25000 க்கு மேல் உபயமளித்தவர்களும் இருக்கிறார்கள்.

அங்கே இருக்கும் பெரியவர்கள் குனிந்து நிமிர்ந்து சேவை செய்கிறார்கள். அனைவரும் உட்காருவதற்கு ஒரு குஷன் மேட் இருக்கிறது.. (எதற்கென்று தெரியவில்லை). அதை எல்லாருக்காகவும் போட்டு விடுகிறார்கள். எழுந்து சென்றவுடன் எடுத்து ஓரமாகப் போடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கையில்தான் ப்ரசாதம் இருக்கும்.

"நீ எல்.ஏ பஞ்ச்சாபகேசன் பையனா ?"
"இல்லையே நான் டெக்ஸாஸ் தாண்டினது கிடையாது.. "
"ஓ !.. எல். ஏ வுல உங்களைப் பார்த்தாமாதிரி ஞாபகம்.. இங்க வரதுக்கு முன்னாடி அங்கேதான் இருந்தேன்.. "
"ஓ !! ஓ.கே.. இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் போடுங்கோ !" என்று தட்டைக் காமிப்பேன்..

எல்லா இடங்களிலும் இப்படித்தான் நிலமையா என்று தெரியாது.. ஆனால், டேலஸைப் பொறுத்த மட்டில், கோயில் பஞ்சமே இல்லை.
இந்தியா திரும்புவதற்குள் ஹூஸ்டன் கோயிலுக்கு சென்றுவிட வேண்டும் என்று ஆசை.. மீனாக்ஷி அருள் புரியட்டும் பார்க்கலாம்.

Tuesday, May 18, 2010

நாணயம்

DSC_0002

மேலே காண்பது போல, இந்த தேசத்தின் ஐம்பது மாநிலங்களின் பெயரோடு ஐம்பது வகையான நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன. "50 State Quarters" என்ற முனைப்பில் இங்கே உள்ள 25 cent நாணயங்களின் பின்னால் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும், அந்த மாநிலம் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட வருடமும் பொறிக்கப்பட்டிருக்கும். நடுவில் , அந்த மாநிலத்தின் சிறப்புத் தன்மையோ, அங்கே புகழ் பெற்ற ஒரு இடமோ இடம்பெற்றிருக்கும்.

நான் உட்பட நிறைய பேர், ஐம்பது நாணயங்களையும் சேகரிக்க முற்பட்டுள்ளோம். எக்கசக்கானோர் (புது வார்த்தை) ஏற்கனவே சேகரித்து முடித்து ஃப்ரேம் போட்டு மாட்டிவிட்டனர். நான் இதுவரை பத்து பீராய்ந்துள்ளேன். இங்கே மொத்தமாக நூறு மில்லியனுக்கு மேலோர், இந்த நாணயங்களை சேகரித்துள்ளனர்.

கொஞ்சம் கணக்கு போடுவோம்.

இந்த 25 cent தயாரிப்பதற்கு 5 centக்கும் குறைவாகவே செலவாகும். மொத்தமாக 39 பில்லியன் நாணயங்கள், இந்த வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தை நீங்கள் சேகரிக்கிறீர்கள் என்று வைத்துக்கோள்வோம் - அதை சேகரிப்பதால், சுற்றாடலிலிருந்து அதை நீக்கிவிடுகிறீர்கள். ஆக cost price ஐ விட ஐந்து மடங்கு லாபகரமான Selling Price. அமெரிக்க அரசுக்கு இதுவரை - இந்த முனைப்பினால் உருவாகிய நிகர லாபம் - 4.6 பில்லியன். பேஷ் !

உட்கார்ந்த இடத்தில் அத்தனை நாணயங்களையும் இன்டர் நெட்டில் வாங்கலாம். ஆனால் அதில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கிறது. அதனால், மெதுவாக பாக்கெட்டில் அடிதட்டும் சில நாணயங்களில், இவ்வகைகள் தட்டுப்பட்டால் தனியாக சேர்த்துவைத்திருக்கிறேன்.

அங்கே, சென்னையில் பள்ளி நாட்களில் H, M T என்று தனித்தனியாக பொறிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்களைச் சேகரித்துக் கொடுத்தால் HMT வாட்ச் கிடைக்கும் என்று யாரோ கிளப்பிவிட்ட புரளியில் சுகமாக மாட்டிக்கொண்டு சூடா மிட்டாய் வாங்கக் கொடுத்த ரூபாய் நாணயங்களை மிச்சம் பிடித்து சேர்த்து வைத்த ஒரே தடவைதான், நான் இந்தப் பழக்கத்தில் இருந்த ஒரே காலம்.

அப்புறம் இங்கே அமெரிக்கா வரும் வழியில் பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் ஏர்போர்ட்டில் சாக்லேட் வாங்கும் போது சில்லறையாக மாற்றிய யூரோக்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. பத்திரமாக சேர்த்து வைத்திருக்கிறேன். அப்புறம் இந்த ஐம்பது.

நம்ம ஊரில் அபூர்வமாக சில நாணயங்கள் வித்தியாசமாகத் தென்படும். புது ஒரு ரூபாய் காசுகளில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன..

இந்தியாவில், ஒரு விதமான ப்ரச்சனை இருக்கிறது. நம் ரூபாய் நாணயங்களைத் தயாரிக்க ஒரு ரூபாய்க்கு மேலே செலவாகிறது. அதனால்தான் அந்த நாணயம் மலிவாகி புழக்கத்திலிருந்து மெதுவாகத் தேய்ந்து வருகிறது. பத்து பைசாவும், நாலணாவும் பார்ப்பதே அரிது. எட்டணா எப்போதாவது கிடைக்கிறது.. எனது ஊகத்தில் இந்த நாணயங்கள் அச்சடிப்பது நிறுத்தப் பட்டிருக்கிறது.

இதில் இன்னுமொரு ப்ரச்சனை.. உதாரணத்திற்கு ஓரு ரூபாயை எடுத்துக்கொள்வோம். ஒரு ரூபாய் நாணயத்தை அச்சடிக்க ஒரு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. மேலும், ஒரு ரூபாய் நாணயத்தின் உலோகம்(எஃகு) ஒரு ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டது. எனவே, சிலபேர் இந்த ஒரு ரூபாய்க்களை கையகப்படுத்தி, உருக்கி ப்ளேடு செய்து ஏற்றுமதி செய்து லாபம் கொள்கின்றனர். இன்னும் என்னென்ன எல்லாம் நடக்கிறதோ..

-..

அடுத்த பதிவிற்கும் இதே போட்டோ தான். பதிவின் பெயர் டெக்ஸாஸ்.

Friday, May 07, 2010

யாரடி நீ !



இன்றைக்கு எப்படியாவது அவளிடம் கேட்டுவிட வேண்டும். இரண்டரை வருடம் தவியாய்த் தவித்து.. அவளின் கவனத்தை ஈர்த்து, கண்ட மேனிக்கு இம்ப்ரெஸ் செய்திருக்கிறேன்.. எல்லாம் அவள் சம்மதத்திற்காக..அவளுக்கும் என் அனுகுமுறை பிடித்திருந்தது. அவள் "உம்" என்ற ஒற்றை வார்த்தையில் சம்மதம் தெரிவித்தால் போதும். வாழ்க்கை ஸுவர்க்கமாகும். புது அர்த்தம் பிறக்கும்..

ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது.. என்னதான் இரண்டு வருடப் பழக்கம் என்றாலும், இந்த விஷயம் கொஞ்சம் டெலிகேட், இல்லையா ? தைரியம் வேண்டும்.. முடிவு தெரியாமல் எவ்வளவு தூரம்தான் பயணிக்க முடியும் ?

தோள்களைக் குலுக்கி தைரியம் வரவழைத்துக் கொண்டேன்.. ஆமாம் என்றால் சந்தோஷம்.. இல்லை என்றால்... ? "தாவணி போனால் சல்வார் உள்ளதடா !!" என்ற பாடல் ஞாபகம் வந்தது.. அதானே !!

சாரதா சுப்ரமணியம் என்ற பெயர்ப்பலகை எழுதியிருந்த கதவில் மெதுவாக தட்டினேன்.

"யெஸ் ?" என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் உள்ளே வரச் சொன்னாள்.

"ஹை ! சாரதா.." மெதுவாக இளித்தேன்..

"வாட்ஸ் அப்.."..

இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வேன் ? எப்படி ஆரம்பிப்பேன்.. நாக்கு தழுதழுக்க ஆரம்பித்தது.. வெளியே போய்விடலாமா ?

"நத்திங் மச்.. !" என்று ஈனஸ்வரத்தில் சொன்னதில், அவள் கவனம் என் மேல் விழுந்தது.. புருவத்தை நெறித்து கூர்மையாகப் பார்த்தாள்..

"வெல்.. ! ஜஸ்ட் வாண்டட் டு நோ.. இஃப் ஐ ஹேவ் பீன் நாமினேட்டட் இன் திஸ் ப்ரமோஷன் சைக்கிள் ?"

கேட்டுவிட்டேன். அவள் ஒற்றை வார்த்தை பதிலில் இனி, வாழ்க்கை திசை மாறும்.

Monday, April 26, 2010

Dallas 75240




அவங்களால முடிஞ்சத அவங்க செஞ்சாங்க..
என்னால் முடிஞ்சதை நான் செஞ்சேன் !

Saturday, April 24, 2010

Back to my innocent wait

நான் திருந்தாத ஒரு விஷயம்.. எதிர்பார்ப்பு !

Sunday, April 18, 2010

S Ve Shekar

"டாக்டர் ! கொஞ்ச நேரம் ஆச்சுன்னா திடீர்ன்னு ட்ரஸ்ஸையெல்லாம் கிழிச்சிட்டு ஒட்டுத்துணியில்லாம ரோட்டுல ஓடனும்ன்னு தோணுதே.. !! இதை எப்படியாவது குணப்படுத்தங்களேன்.. !"

"பயப்படாதீங்க.. ! இது ஒரு வகையான Mania !!"

"ஓ.. அப்படியா.. !"

"ஆமாம்.. ! பிறந்தமேனியா !"


-------

Friday, April 16, 2010

Tamil is a sweet language most of the times. But the irony is முரண் நகை.

Tuesday, April 06, 2010

San Antonio செலவு

செலவு என்றால் பயணம்..

Thursday, April 01, 2010

நீராவி

இன்று காலை ஏழு பதினொன்றுக்கு எனக்கு வானத்தில் பறக்க கற்றுக்கொடுத்த வாத்தியார் இறந்துபோனார். அன்று மாலை துக்கத்துடன் மொட்டை மாடியின் மதில் சுவரில் நின்று கொண்டிருந்தேன். வாத்தியாரின் குடும்பத்தினர் அழுததை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்தேன். சோகம் - எனக்குக் கற்றுத்தரப்படாத ஒரு சொல். உணர்ச்சிகளுக்கு அப்பார்ப்பட்ட நிலைகள் மட்டுமே பாடம். கற்பனைக்கும் நிச்சயத்துக்கும் நடுவே ஒரு பயணம். நீண்ட பயணம்.. வாத்தியார் இட்டுச் சென்ற ஒரு பயணம். அந்த கற்பனைகளின் எல்லைகள் முடிவது போல எழுந்தது. அந்தப் பயணத்தை வழி நடத்திய வாத்தியார் ஒரு வெள்ளை ஒளிவெள்ளத்தில் மறைவது தெரிந்தது.. அந்த ஒளி மறைந்து சூழ்ந்த இருட்டில் பயணம் முடிந்தது.

வாத்தியாரின் மனைவி மார்பில் அடித்துக்கொண்டு குரல் எழாமல் தழுதழுத்து அழுதது கண்ணில் தெரிந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால், அதிலிருந்து ஒரு பாடம் சொல்லிக்கொடுத்திருப்பார் என்று தோன்றியது. Hypothesis.. உயிருடன் இருந்திருந்தால்.. எங்கள் பாடங்களின் சூட்சமமே அதில்தான் அடங்கியிருந்தது. "நீராவி பற்றி உங்கள் கருத்து என்ன ?" என்று வாத்தியாரின் குரல் முதல் பாடத்திலிருந்து இன்னும் உயிருடன் செவிப்பறையில் கேட்டது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன் என் மேஜைக்கு காப்பி கொண்டுவந்து கொடுத்த ஆனந்தன் - அவன் தான் அவர் ஆனான். வெள்ளிக்கிழமை பாருக்கு சென்றபோது துவங்கிய உரையாடல் வரலாறு ஆனது. அன்றையிலிருந்து நான்காவது நாள் எனக்குப் பறக்கக் கற்றுக்கொடுத்தார் வாத்தியார். கரும்பலகையில் ஒரு வட்டத்தைப் போட்டார். பின்னர் எங்கள் கற்பனையில் அந்தக் கோட்டை அழிக்கச் சொன்னார். முதலில் சிரித்தோம். பின்பு கால்களை நேராக வைத்து, க்ளாஸை மேஜையில் வைத்து மனதை ஒரு நிலைப் படுத்தி புருவங்களை நெருக்கிப் பார்த்தோம்.. நிஜம் என்பது நிச்சயமான, அளவுள்ள, பரிணாமங்கள் கொண்ட கற்பனை. என்பதை உணர்ந்தோம். வெள்ளைக் கோடு மறைந்தது. அடுத்த பாடம் நாளைக்கு.

அமானுஷ்யம் எதுவும் இல்லாத சூட்சமங்கள். மனித மனம் தனக்குத்தானே விதைத்துள்ள கட்டுப்பாடுகளை கடந்தால், அளவு இல்லாத வெளி. அந்த வெளியில் கற்பனையின் தீற்றத்தின் திறன் மனிதனின் இப்பொழுதைய சக்தியைக் காட்டிலும் பல மடங்கு பெரியது. Belief and imagination are perpendiculars. Reality meets at ninety degrees. எனக்கும் வாத்தியாரின் அக்கா பையனுக்கும் தான் பாடம். தினமும்.

நான் வானத்தில் பறந்த நாளை என் வாழ் நாளில் மறக்க முடியாது. இறக்கைகள் என்பது அப்பட்டம். ஒரு எல்லைக் கோடு. அந்த எல்லையை எட்ட முடியாததால்தான் அதைத் தாண்டிய நிலைக்குச் செல்ல முடியாத சிறையில் அடைபட்டுக் கிடக்கிறோம். எல்லைக் கோட்டை கற்பனையில் அழித்தோம். அந்த எல்லை அடைய அடைய, அதைத் தாண்டிச் செல்லச் செல்ல - பறந்தோம். கைகள் விரிக்காமல், காலை அகட்டாமல்... பறப்பதற்கு அடையாளமாக நாம் கற்பனை செய்யும் எந்த விஷயத்தையும் செய்யாமல், பறந்தோம்.. காற்று முகத்தில் அடித்தது.. தலைமுடி பறந்தது.. சுதந்திரம்.. புவி ஈர்ப்பு அற்ற நிலை. எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலை.. freedom. பற்றற்ற நிலை.

நான் வசித்துவந்த அப்பார்ட்மென்டில் ஒரு முதியவர் பார்த்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் நாங்கள் செய்து வந்த படிப்பு பொதுக்கருத்துக்கு அப்பாற்பட்டது. முதலில் "நீங்களா ?" என்ற கேள்வி, பின்பு "சிறுவர்கள் பயப்படுவார்கள்.. இல்லையென்றால் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.. அது ஆபத்தில் முடியலாம்" என்ற போதனைகள் ஆனது. அவர்கள் பேசியதெல்லாம் வார்த்தைகளாக மட்டுமே உணரப்பட்டது. அதன் அர்த்தங்கள் உயிரில்லாதவை என்ற உண்மை தெளிவாகத் தெரிந்தது. சுதந்திரத்துக்கு தடை என்பது non-existing. கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

குடும்பம், பந்தம், பாசம் எல்லாம் போலித்தனம் என்பது தெரிந்தது. உணர்வுகள் என்பது வெறும் interpretation. உண்மை நிலை அல்ல. வாத்தியாரின் போதனைகள் அத்தனையும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தன.

அவர் மனைவி அழுதது மறுபடியும் தெரிந்தது. நானும் அவர் அக்கா பையனும் அவரைத் தேற்றினோம். "குடிகார நாய்களா... கொண்ணுட்டீங்களே.. !".. உணர்வுகளின் அடிமைகள் சொல்லும் வார்த்தைகள்.. வாத்தியார் இறந்துவிட்டார். நீர். ஆவி. மொட்டை மாடியில் மெல்லிதாக ஒரு காற்று வீசியது.. பாட்டிலை மூடிவிட்டு பறக்க ஆரம்பித்தேன்..

தொப்.

Saturday, March 13, 2010

பட்டாபிஷேகம் முற்றிற்று .. !

நிகழும் மாசி மாதம் ஒரு சுக்ரவாரத்தில், கிழக்கே சூலம் இருக்கையில், சுபயோகம் கூடிய சுபதினத்தில் சிகைத்திருத்தம் நடைபெற்றது. பதினாறு டாலர்களை க்ரெடிட் கார்டிலிருந்து பிதுக்கி எடுத்துக்கொண்டார்கள் என்பதைத் தவிர ஸ்வாரஸியமாக எதுவும் இல்லை. நவநாகரீக நங்கையர் நாவிதர்களாக நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

நம்ம ஊர் மாதிரி அரசியல் சினிமா எதுவும் பேச்சுக் கொடுக்கவில்லை. "ஒபாமா ஹெல்த்கேர் எல்லாம் எங்க ஊர் பே கமிஷன் மாதிரி உல்லுலாங்காட்டி போல ஆயிடும் போல இருக்கே !" என்று பேச்சு கொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கு முடி வெட்டுக்கொண்டிருந்த டீனா, "ஓ ! வுட் யூ லுக் அட் தட் ?" என்று டி.வியை காட்டினார். மைக் டைசனுக்கும் ஹோலிஃபீல்டுக்கும் சண்டை நடக்குமா நடக்காதா என்று ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. "வாட் டூ யூ திங்க் ?" என்று திமிர்ந்த ஞானச்செருக்கோடு கேட்டாள்.

"தீஸ் பீப்பிள் ஆர் க்ரேஸி !" என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னேன். "யூ ஆர் ரைட் !" என்றாள். அந்தப் பாராட்டில் சிலிர்த்தெழுந்த என் கழுத்து ரோமங்களை கத்திரிக்கோல் வெட்டிச் சாய்த்தது.

நான்கு நிமிடத்தில் நான்கு மாத சாகுபடி அறுவடையானது. காதுக்கும் கழுத்துக்குமிடையே மூடப்பட்டிருந்த தென்றல் நெடுஞ்சாலை திறக்கப்பட்டு போக்குவரத்து ஜிலீரென்று ஆரம்பமானது. பெரும்பாரம் தலையிலிருந்து இறக்கிவைக்கப்பட்டது போன்றதொரு புத்துணர்வு.


பகை இழந்தானும் - நெடு நாள் வளர்த்த
சிகை இழந்தானும் - பாரம் குறைந்து புத்
தகை கொள்வார்.. என்றும் எதிலும்
மிகை என்பது நன்றன்றன்றோ !

எப்புடி ?

Saturday, January 23, 2010

பட்டாபிஷேகம்

அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நாட்கள் எல்லாம் நத்தை வேகத்தில் சென்றாலும் மாதங்கள் மனோவேத்தில் பறக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி மாதிரி.. ஆனால் மல்டி லெவல் ரிலேட்டிவிட்டி.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், பணம் செய்யப் பணம், செல்போன், லேப்டாப், இன்டெர்னெட், பக்திக்கு பிள்ளையார் படம், குளிருக்கு க்ளவுஸ், தலைவலிக்கு டைகர்பாம், மக்குக்கு பதிலாக காலியான தயிர் டப்பா.. என ஜபர்தஸ்தாக ஒருவழியாக சென்னையில் வாழ்ந்த வாழ்க்கைமுறையை இங்கேயும் நிலை நாட்டிய நேரத்தில்... தலைமுடி கண்ணை மறைத்தது.

பள்ளி நாட்களில் அதிகப்படியாக முடி வளர்த்து வாயின் நுணியைக் குவித்து, மூக்குக்கு வெளியே நகர்த்தி மேல் நோக்கி ஊதினால், ஒரு கொத்து மயிர்கள் காற்றில் இலகுவாக பறந்து மறுபடி வந்து கண்ணை மறைக்கும்.. கொஞ்ச நாட்களுக்கு அது பேஷனாக இருந்தது. பயாலஜி மாஸ்டர், முன்னம் பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனை, முடியைப்பிடித்து தூக்கி பளேரென்று அறைந்த அடுத்த நாளிலிருந்து க்ளோஸாக முடி வெட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். பேஷனை விட தற்காப்பு முக்கியமானது.

"தலைக்கு மேல வேலை" என்று சும்மா வெறும் ஜோக்காக இருக்கும் சிகை திருத்தும் செயல், கொஞ்சம் சீரியசானது என்பது சிலபேருக்கு மட்டும் தெரிந்தது. அம்பட்டனின் (இது ஏன் இழிசொல்லாக மாறியது என்பது எனது உண்மையான வருத்தம்) ஒரு தவறான கீரலில் ஒரு மாதம் நரகமாகும். One bad whip of a Scissor and there's no going back... unless there's a fast growing back.

சலூன் என்பது சுடுகாடு மாதிரி. "சமரசம் உலாவும் இடமே !"... அதாவது, நான் போகும் சலூன்கள்... அதாவது, வட சென்னையில் இருக்கும் சலூன்கள்..

டிப்பிக்கல் (அருமையான ஆங்கில வார்த்தை) சலூன் எப்படி இருக்கும் ? ஒரு பத்துக்குப் பதினைந்து அடி ரூம்.. துரு பிடித்த ஷட்டருக்குப் பின்னால் ஒரு சன் ஸ்க்ரீன் கண்ணாடி தடுப்பு, அதன் ஒரு ஓரத்தில் கதவு... எப்பொழுதும் திறந்தே இருக்கும்.. உள்ளே நுழைந்ததும் ப்ரதானமாக இரண்டு சுழல் நாற்காலிகள் (அதில் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஃப்ளோர் இருக்கும்.. ஷேவிங் செய்கையில் தலை சாய்த்துக்கொள்ள ஒரு வசதி.. உள்ளங்காலை அமர்த்திக்கொள்ள ஒரு குஷன் சீட் என பிரமாத சொகுசாய் இருக்கும்), அதன் முன்னேயும் பின்னேயும் பூதாகாரமான கண்ணாடிகள்... அதில் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் படங்கள்.. (ஆண்கள் மட்டுமே வரும் சலூனில் ஸ்த்ரீக்களின் படங்க்ள் வைப்பது ஒரு மிகப்பெரிய சைக்காலஜி ட்ரிக்).. சுவற்றில் ஒட்டினாற்போல் நீள வாக்கில் அலமாரி.. அதன் மேல், பத்துப் பதினைந்து சீப்புகள், (ஒன்றிரண்டு பளிச்சென்று இருக்கும்.. பாக்கி எல்லாம் ஹரப்பா மொஹஞ்சதாரோ காலத்தவை).. அப்புறம் தலையில் தண்ணீர் தெளிப்பதற்கென்று கொக்கு மாதிரி கழுத்து வளைந்த பச்சைக்கலர் பாட்டில் (தலைமுடி வெட்டும் வைபவத்தில் எனக்குப் பிடித்தது இந்த தண்ணீர் தெளிக்கும் விளையாட்டு).. பவுடர் டப்பி, அப்புறம் சின்னச்சின்னதாய் பாரின் டப்பாக்கள்.. என்ன இருக்குமோ தெரியாது.. அதை யாருக்கும் பயன்படுத்திப் பார்த்ததில்லை.. ஈசான்ய மூலையில் ஒரு டி.வி இருக்கும்.. ரொம்பவும் வசதி குறைந்த சலூனில் ரேடியோ இருக்கும்.. இடது ஓரத்து கப்போர்டுதான் கல்லாப் பெட்டி.. வலது ஓரத்தில் சரைக்கும் கத்தி + டோபாஸ் பிளேடு பேக்கட்..

பின்னங்கண்ணாடியின் கீழே நீளமான பென்ச்.. கொஞ்சம் வசதியான சலூன்களில் குஷன் போட்ட பென்ச்.. அதன் மீது குவிந்து கிடக்கும் தினத் தந்தி பேப்பர்... சினிமா மலர்.. தினத்தந்தி செய்திகள் எல்லாம் எமோஷனலாக இருக்கும்.. 'கதறக் கதறக் கற்பழிப்பு !!".. "கத்தியால் கோரமாக வெட்டிப் படுகொலை !!" (ஒரு செய்தியை மிக அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால், வல்லின மெய்களை பயன்படுத்திப் பாருங்கள்).. இப்படி சில பேப்பர்கள்.. முழு பக்கத்துக்கு சினிமா நடிகைகள் பொஸ்டர் நிறைந்த பேப்பர்கள்.. ஆண்டியார் பதில்கள் என்று கேனத்தனமான பேப்பர்கள் என்று .. தினத் தந்தி கலர்ஃபுல்லாக இருக்கும்.. மக்கள் இப்படியும் செய்தி வாசிக்கிறார்களா என்று தோன்றும்..

பெஞ்சின் மெறுமூலையில் ஒரு அட்டைத் தடுப்பு.. அதற்கு அந்தப்புறத்தில் ஒரு தண்ணீர் டாங்க்.. ஷேவிங் செய்யும்போது, க்ரீமையும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரையும், ஒரு கெமிக்கல் ப்ராஸஸ் மாதிரி தயார் செய்யும் இடம் அது... நடுவில் ஒரு ஷெல்ப்.. அதில்தான் ப்ரேதங்களைப் போர்த்தும் போர்வைகளன்ன துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சன்னமான வேகத்தில் சுழலும் ஃபேன்.. காற்றில் பறக்காத துண்டிக்கப்பட்ட ப்ரோட்டீன் முடிகள்.. வளைவு வளைவாய்... கொத்துக் கொத்தாய்..

இப்படித்தான் இருக்கும் - எங்க ஊர் சலூன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை என்பது சலூன் கடைக்காரருக்கு தீபாவளி மாதிரி.. எவ்வளவு வேகமாக வெட்டினாலும், குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் எடுக்கும்.. "என்ன சம்முகம்... லேட்டாகுமா.. வெளியூருக்கு போனும்" என்று ஒருவர் எட்டிப்பார்த்து விசாரிப்பார்.. சலூன்காரர், பெஞ்சில் இருப்பவர்களை ஒரு நோட்டம் விடுவார்.. தலைக்கு இருபது நிமிடம் (literally) என்ற கணக்கு போட்டு ஒரு எஸ்டிமேஷன் கணக்கு போடுவார். நானும் சில சமயம் இந்த மாதிரி நோட்டம் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.. இல்லையானால், ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தினத் தந்தி படிப்பதிலேயே கழிந்துவிடும்.. சிறுவர்கள் இருந்தால்.. தக்குனூண்டு மயிருக்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது என்று தப்புக்கணக்கு போடக்கூடாது... அவர்கள் அரங்கேறினால் ஒவ்வொரு கீறலுக்கும் முடிந்துவிட்டது போலவே தோன்றும்.. ஆனால், பெரியவர்களுக்கு ஆகும் அதே நேரம்தான் இவர்களுக்கும்.. லேசாக வழுக்கை விழுந்தவர்களுக்கு, ironically, வழக்கத்தைவிட அதிக நேரம் பிடிக்கும்..

எல்லாம் முடிந்துவிட்டது.. அப்பாடா.. அடுத்து நாம்தான் என்று நினைக்கும்போது, சலூன்காரர் ஒரு business proposition செய்வார்.. "ன்னா.. சொற சொறன்னு இருக்கு... ஷேவிங் பண்ணிக்கலாமா.. ?" என்று என்னமோ கூட்டுமுயற்சி மாதிரி கேட்பார்.. முடி வெட்டிக்கொண்டவர், அந்த "மாயக்கண்ணாடியில்" ஒரு சினிமா நட்சத்திரம் தன் ஒப்பனை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு.. "எழவு... ஆமாம்லே.. செஞ்சிடு" என்று உத்தரவிடுவார்.. வெட்டப்படும் ஒவ்வொரு ரோமத்துக்கும் ரோமாஞ்சனமாகும் சலூன்காரர் (மன்னிக்கவும்.. கொஞ்சம் அதிகப்படியாக எதுகை மோனையில் எழுதிவிட்டேன்),... குஷியாகி க்ரீமை குழைக்க ஆரம்பிப்பார்.. நாம் நேற்றைய தினத்தந்தியை படிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான்.

நிற்க.. இந்தப் பதிவிற்கு ஏன் பட்டாபிஷேகம் என்று நாமகரணம் சூட்டினேன் ?

சலூன்கடையிலிருந்து வெளியே வந்து வீட்டுக்கு நடக்கும்போது, ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும்.. காதுக்கு இடுக்கில் அதிகமாக காற்று வீசுவதுபோல இருக்கும்.. எங்கோ வலிப்பது போல இருக்கும்... சட்டையில் முடி பிசுபிசுப்பாய் ஒட்டி இருக்கும்.. முடிவெட்டிக்கொண்டு வீடு திரும்பும் நாட்கள் மட்டுமே, அழுக்காய் தெருவில் நடமாடும் உரிமை கொண்டவை. You have a right to remain dirty.

அப்படி ஒரு நாளில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, எதிர்த்தவீட்டு மாமா எட்டிப்பார்த்துக் கேட்டார் - "என்னப்பா.. பட்டாபிஷேகமா ?" என்று.. வினோதமாக இருந்தது.. சலூனுக்குப் போய் வந்த சர்வ லட்சண அடையாளங்களைப் பார்த்துப் புரிந்துதான் கேட்டார் என்பதால், .. " ஹெ ஹெ ! ஆமாம் மாமா !" என்றேன்.. "அமாவாசையாச்சே ! அம்மா சொல்லலையா ?" என்று கலாச்சாரக் கேள்வி கேட்டார்.. அதற்கு என்ன சொல்லி மழுப்பினேன் என்று நினைவில்லை.. ஆனால், முடிவெட்டிக்கொள்ள செல்வதற்கு இன்னுமொரு நிக் நேம் கிடைத்தது அங்கேதான்.

மறுபடி, விட்ட இடத்துக்கு வருவோம். ஷேவிங் எல்லாம் செய்து முடித்தபின் அவரை விடுதலை செய்துவிட்டு, அவர்மேல் போர்த்தப்பட்ட துணியை உதறுவார்.. இந்த சமயத்தில்தான், பெஞ்சில் இருப்பவர்கள், அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் பார்ப்பார்கள்.. யார் அடுத்து, என்று.. அடுத்து நாம்தான் என்றால், thats the moment of truth ! பேப்பரை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு மஹாராஜா அரியணையை நோக்கி நடக்கும் கம்பீரத்தில் நடந்து எந்தக்காலை வைத்து ஏறுவது என்று தயங்கி, ஒரு மாதிரியாக ஏறி, கொஞ்சம் வளைந்து நெளிந்து சிம்மாசனத்தில் அமர்ந்தபின் எதிரே தெரியும் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.. என்னதான் நல்லதாக கண்ணாடி வாங்கி வீட்டில் வைத்தாலும், அந்த சலூன் கண்ணாடியில் தெரியும் முகம், அந்தப் பொலிவு, வீட்டில் நிச்சயமாக இருக்காது. மஹாராஜவின் அங்கியை போர்த்திவிட்டு மந்திரியின் பணிவுடன் "ஷார்ட்டா, மீடியமா ?" என்று கேட்பார்.

கிட்டத்தட்ட புதிதாக ஒரு மன்னனுக்கு முடிசூட்டு விழா நடந்து முடிந்தது போல இருக்கும்.. நல்ல பொருத்தமான பெயர்தான் - பட்டாபிஷேகம்.

மீடியம் என்று சொன்னால், முடி வெட்டியதே தெரியாது.. சும்மா காதுக்கு அருகில் கத்திரிக்கோலால் சப்தம் எழுப்பிவிட்டு, "போதுமா சார் !" என்று கேட்டால், நிஜம்மாக மீடியமாக வெட்டியது போல்தான் தோன்றும்.. ஒருதடவை அப்படி ஏமாந்தபின், எப்பொழுதுமே "ஷார்ட்" அல்லது "நல்லா ஷார்ட்" அல்லது "சம்மர் கட்".

கொஞ்ச நேரத்துக்குத்தான் மஹாராஜோபசாரம் எல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை தேய்ந்து மோவாய்க்கட்டையில் கைவைக்கப்படும்.. அதற்கப்புறம் சலூன்காரரின் கைப்பாவையாக மாறியாகவேண்டும்.. அஃதே நலம்.

ரொம்ப நேரம் நம்மை கண்ணாடியில் தோன்றும் நம் சுந்தர வதனத்தைப் பார்க்க விட மாட்டார்.. கன்னத்தில் கைவைத்து இடது மூலையைப் பார்க்கவைத்துவிட்டு வலது பக்க ரோமங்களை வெட்டிக்கொண்டிருப்பார்.. இப்பொழுதுதான் ஸ்ரீதேவிக்கும் மாதுரி தீக்ஷித்துக்கும் வேலை.. சலூன் கடையில் மட்டும் பெண்களின் படங்களை வெறித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்கப்போவதில்லை.. ஆனால் அச்சிற்றின்பமும் சொற்ப நேரத்துக்குத்தான்.. இடதுபக்கம் வெட்ட வருகையில் வலது பக்கம் திருப்பினால், பார்ப்பதற்கு எதுவுமே இருக்காது.. வெறுமென கத்திரிக்கோலின் வீச்சை காதில் வாங்கியபடி உட்காரவேண்டியதுதான்..

உங்கள் வயதையும், அந்த சலூனில் அனுபவத்தையும் பொறுத்து, உரையாடல் ஆரம்பமாகும்.. "ஜாப்ல இருக்கீங்களா ?".. "ஆமாம்... !" .. "கம்ப்யூட்டரா.. ?" .. "ஆஹ்.. ஆமாம்.. !".. "எம் மச்சான் பொண்ணுகூட அதுல தான் வேல செய்யுது.. காலேல போனா.. ராத்திரிக்குதான் வருது.. புழியறானுங்கல்ல ?" என்று உரையாடல் நீளும்.. கொஞ்சம் வயதானவராக இருந்தால் அரசியல்.. "பே கமிஷன் எல்லாம் ஐவாஷ் சார்.. சொம்மனாங்காட்டிக்கு வோட்டு வாங்க.. ".. வட சென்னை சலூன் கடைக்காரர்கள் எல்லாரும் Politically active.

எல்லாம் முடிந்தபின் முகம் பேயறைந்தார்ப்போல் இருக்கும்.. இப்பொழுதுதான் பவுடர் போட்டு ஸ்பாஞ்சால் மூஞ்சியைத் துடைப்பார்.. பின்னர், நம்மைக் கட்டிப்போட்ட அந்த துணியிலிருந்து விடுதலை செய்வார்.. வேட்டி கட்டிக்கொண்டு செல்லும் சில நாட்களில், இந்த துணியை எடுக்கும்போது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இனிமேல் மஹாராஜா பதவி விலக வேண்டியதுதான்.. "போதுமா சார் ?".. மெதுவ்வாக இறங்கி முன்னும் பின்னும் பார்த்து.. நம்ம லட்சணம் அவ்வளவுதான் என உணர்ந்துகொண்டு, பாக்கெட்டில் கைவிட்டு இருபத்து ஐந்து ரூபாயை (1996) எடுத்து கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக்கொள்வார்.. நாவிதர் !

இங்கே !! ?

நாளைதான் செல்கிறேன்.. Wish me luck !

Monday, January 18, 2010

ஐ ஹேவ் அ ட்ரீம்

Rosa Parks

இன்று அமெரிக்காவில் "மார்டின் லூதர் கிங் ஜூனியர் தினம்". விடுமுறை.

படத்தில் நீங்கள் காண்பது "ரோஸா பார்க்ஸ்" என்ற பெண்மணியின் முழு உருவச்சிலை. டேலஸ் டௌன்டௌனில் நிறுவப்பட்டிருக்கும் இந்தச் சிலைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

1955 வருடத்தில், நிறபேதங்களின் உச்சக்கட்ட நாட்களில், ரோஸா பார்க்ஸ் என்பவர் மான்ட்கோமரி என்ற அலபாமா நகரத்தில் ஒரு பஸ்ஸில் ஏறினார். அமர்ந்தார். அவர் அமர்ந்த இருக்கை, கறுப்பு நிற மக்களுக்கா ஒதுக்கப்பட்டது.. பேருந்தின் முன் பக்க இருக்கைகள் பத்து - வெள்ளை நிற மக்களுக்கானது.. அவர் ஏறியபின் பேருந்து நின்ற மூன்றாவது நிருத்தத்தில் சில வெள்ளை மக்கள் ஏறியதில் சிலருக்கு இருக்கை இல்லாமல் நிற்க நேர்ந்தது.. இதனால், அந்தப் பேருந்தின் நடத்துனர் ரோஸா அமர்ந்திருந்த இருக்கை வரிசை முழுவதையும் எழுந்திருக்கச் சொன்னார். மூன்று பேர் எழுந்துகொண்டனர். அந்த நொடியிலிருந்து வரலாற்றின் பக்கங்களிலிருந்தும், அந்த இருக்கையிலிருந்தும் பிரிய மறுத்தார் - ரோஸா பார்க்ஸ்.

"When that white driver stepped back toward us, when he waved his hand and ordered us up and out of our seats, I felt a determination cover my body like a quilt on a winter night."

அந்த நிகழ்வின் பின்விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு முன்னால் பல கறுப்பு மக்கள் இதே போல கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த நிகழ்வு பெரிது படுத்தப்பட்ட அளவினால் வரலாறாகின்றது.

இந்தப் ப்ரச்சனைகளுக்கு குரல்கொடுக்கப் புதிதாக ஒரு எழுச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது - மான்ட்கோமெரி இம்ப்ரூவ்மென்ட் அசோசியேஷன் என்ற அந்த இயக்கத்துக்கு புதிதாக அங்கே குடிபெயர்ந்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க காலத்தின் பாதையில் இந்நிகழ்வுகள் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தன.

இந்த நிகழ்வின் எதிரொலியாக கறுப்பு மக்கள் பேருந்தில் பயணிப்பதை புறக்கணித்தனர். சும்மா ஒன்றிரண்டு நாட்களுக்கு இல்லை... முழுதாக முன்னூற்று எண்பத்தோரு நாட்கள். அதன் அதிர்வலையாக நடந்த பல சட்ட மாற்றங்கள், மன மாறுதல்கள், சமுதாய மாறுதல்கள் - இன்றைய அமெரிக்காவை செதுக்கின.

மார்டின் லூதர் கிங் - நம்ம ஊர் மஹாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதே மாதிரி சுதந்திர ய்த்தத்தை அமெரிக்காவில் அரங்கேற்றினார். Non-violent resistance !

இவரது சொற்பொழிவுகள் வரலாற்று சிறப்புவாய்ந்தவை. வாஷிங்டன்னில் இவர் அரங்கேற்றிய "I have a dream" என்ற உரை இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதில் எனக்குப் பிடித்த வரி - ""I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character.""

இவரது உரைகள் பிரபலமாக ஆரம்பித்தன.. இவர் உரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது.. ஊடகங்களின் கவனம் அதனால் கிடைத்தது.. அதன் மூலம், அமெரிக்க தேசத்தையே அவர் கருத்து சென்றடைந்தது. இந்த கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கியமான சட்ட சீரமைப்புக்கள் அமைய உதவின.. அந்த சட்ட மாற்றங்கள், கறுப்பு நிற மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தின..

இன்று பேரக் ஒபாமா என்ற கறுப்பர் அமெரிக்காவை ஆள்கிறார்.

இவர் தேர்தலுக்காக போட்டியிட்டபோது யாரோ ஒருவர் எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது.

Rosa Parks sat so Martin Luther King could walk
Martin Luther King walked so Obama could run
and Obama is running so our children can fly

சுபம்

Thursday, January 07, 2010

குளிர்

டேலஸ் நகரில் குளிர் வாட்டி எடுக்கிறது, குறைந்தபட்சம் என்னை. அவஸ்தை என்பதை விட, போர் அடிக்கிறது என்றே சொல்லவேண்டும். சுளீர் என்று வெய்யில் பார்த்து ரொம்ப நாளாகிறது. இதை டைப் செய்யும்போது வெளியே -14 டிகிரி... வெளியே சென்று லேப்டாப்பை வைத்தால், குளிரில் தானாக டைப் அடித்துக்கொள்ளும். இந்த ஊரில் எல்லாரும் ஃபாரன்ஹீட் கணக்கில் டிகிரியை குறிக்கிறார்கள். அப்படிச் சொன்னால் எனக்கு உறைக்க மாட்டேன் என்கிறது. 7 டிகிரி ஃபாரென்ஹீட் என்பதைவிட -14 டிகிரி செல்சியஸ் தான் உண்மை நிலையை குறிப்பதுபோல உணர்கிறேன்.

சும்மானாச்சும் வெளியே போய்விட்டுவந்தால், முகம் சில்லிட்டுக்கிடக்கிறது. சிரிக்க முடியவில்லை.. வாய் திறக்கமுடியவில்லை... இப்பொழுதெல்லாம் வெளியே பனியில் போய்விட்டுவந்தால், கண்ணாடிமுன் நின்று பார்த்து எல்லா ரியாக்ஷன்களும் வேலை செய்கின்றனவா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறேன்.

இந்த ஊர்க்காரர்களுக்கு இது பழக்கமான விஷயம் என்றாலும், இந்த வருடம் போல் எப்போதும் இருப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். "செ ! இந்த வருஷம் வெய்யில் பிளக்குது.. போன வருஷத்தைவிட இப்பொ ஜாஸ்தி" என்று மே மாதத்தின் வெகுஜன டையலாக் நினைவு வந்தது.

பனியன், ஜட்டி, சட்டை, பேன்ட், ஸ்வெட்டர், ஜெர்க்கின், ஸ்கார்ஃப், க்லவுஸ், குல்லா... எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல ரோட்டில் நடந்து செல்கிறேன். அந்த ரோட்டில் பெரும்பாலும் யாரும் நடந்து செல்வதில்லை.. இந்த ஊரிலேயே பொதுவாக நடப்பதில்லை... ஆபீஸ் வந்துவிட்டால் ப்ரச்சனையில்லை.. உள்ளே கதகதப்பாக இருக்க ஹீட்டர் முழுவீச்சில் ஓடும்.

எப்படியோ, இன்றைய சீதோஷ்ணத்திற்கு ரோட்டில் ஐஸ் தேங்கிக் கிடக்கிறது என்பதால் அலுவலகம் செல்லப்போவதில்லை. இன்னுமொரு போரிங் டே !