
நிர்மலா ஆபிஸிலிருந்து திரும்ப வரும்போது டி.வி. உச்சஸ்தாயியில் அலறிக்கொண்டிருந்தது. அப்பா முன்னதாகவே வந்திருக்கிறார் போலும். செருப்பை கழட்டிவிட்டு கூடத்துக்குள் நுழைந்தாள். சோபா திண்டில் சாய்ந்துகொண்டு தூங்கிக்கொண்டிருந்தார் வரதன். ஓருவேளை இன்று ஆபிஸ் போகவில்லையோ... ஓஹோ.. மறந்தே போய்விட்டது.
நேற்றோடு வரதன் ரிட்டையர் ஆகிவிட்டார். வாலன்டரி ரிட்டையர்மென்ட். முப்பதிமூன்று வருடமாய் போய் வந்த அலுவலகம், ஒரே நாளில் அன்னியமானது. வரதனுக்கு இரண்டு வருடங்களாகவே அலுவல் செல்வது அலுத்துப்போய் விட்டது. நெடு நாள் நண்பர்கள் எல்லாரும் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு, அமெரிக்கா பையனுடன் போய் தங்கிவிட்டனர். மேனேஜரிலிந்து பியூன் வரை எல்லாம் இளம்ரத்தம்.. அவருக்கு என்று வேலையே இல்லாமல் போய்விட்டது. அலுவலகத்தில் தன் கடைசி நாட்களில் வரதன் அதிகமாக பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்துத் தர மட்டுமே பயன்பட்டார். அல்லது ஜாதகப் பரிவர்தனை.. சென்ற வருடம் வரை இன்கம் டாக்ஸ் அறிவுரையாவது வழங்கிவந்தார். இப்பொழுது அக்கவுண்டன்ட் முரளியிடம் நூறு ரூபாய் கொடுத்தால் மொத்தமாக ஃபைல் செய்தே கொடுத்துவிடுகிறான்.
எப்பொழுது முடிவு செய்தார் என்று அவருக்கே தெரியாது.. சென்ற வாரம் ஒரு நாள் இரவு.. டைனிங் டேபிளில் நிர்மலாவும் அவரும் உணவருந்திக்கொண்டிருந்தபோது, "நாளக்கு வி.ஆர்.எஸ் எழுதிக் கொடுக்கலாம்னு இருக்கேன்.. " என்றார். நிர்மலா நிமிர்ந்து அவரை உண்ணிப்பாகப் பார்த்தாள்.
"நல்லா யோசிச்சிட்டியா ?"..
"ம்ம்ம்.. "
இரண்டு நிமிடங்கள் மௌனம் நிலவியது. யார் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்று ஒத்திகை பார்ப்பதுபோல இருவருக்கும் தோன்றியது.
"சரி. கோ அஹெட்.." என்று சொல்லிவிட்டு கை கழுவிவிட்டாள் நிர்மலா.
அப்புறம் ஒரு வாரம், அதைப் பற்றியே மறந்தாகிவிட்டது. இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. ஹால் மேஜையில் ஒரு வாட்ச் டப்பா, ரிட்டையர்மென்டுக்கு அடையாளமாக இருந்தது. முப்பத்து மூன்று வருடங்களின் ஞாபகப் பெட்டகம் அந்த வாட்ச்.
தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பாமல் டி.வியை அணைத்துவிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.. பின்னர், கொஞ்ச நேரம் சமையலறையில் சமைத்தாள். இன்னும் சோபாவிலேயே அயர்ந்திருந்தார், வரதன். டைனிங் டேபிளில் தட்டு போட்டுவிட்டு கூடத்திற்குள் வந்தாள். தோளைப்பிடித்து கொஞ்சம் மெதுவாக உலுக்கினாள்.
"சாப்பிட வாப்பா.. " என்றாள்.
வரதன் சுய நினைவுக்கு வர நேரமானது. டி.வி அணைக்கப்பட்டிருக்கிறது. பூட்டிய வீட்டுக்குள் மகள்.. அவளிடமும் ஒரு சாவி இருக்கிறது. அவள் ஆபீஸிலிருந்து வந்து சமைத்து முடித்தாகிவிட்டது. மணி எட்டு. ஆறு மணி நேரம் தூங்கியிருக்கிறார். இப்படி தனது சுற்றுப்புரங்களை கணக்கிட்டபடியே எழுந்துவந்து டைனிங் டேபிள் முன் அமர்ந்தார்.
"மத்தியானம் எங்கே சாப்பிட்டே ?" என்றாள்.
அவளைப் பார்க்காமல் உதட்டைப் பிதுக்கினார். சாப்பிடவில்லை போலும். நிர்மலாவுக்கு லேசான ஒரு குற்ற உணர்வு தோன்றி, தோன்றிய வேகத்தில் மறைந்தது. சாதாரனமாக இருவரும் தனக்குத் தானே பறிமாறிக்கொள்வது வழக்கம். இன்று, அகால வேளையில் தூங்கி எழுந்ததினால் வரதன் சாப்பிடும் மன நிலையில் இல்லை.
"மத்தியானமும் சாப்பிடலே.. இப்பொ சாப்பிடு.. நான் வேன்னா போடட்டுமா ?" என்றாள் நிர்மலா. எதற்கும் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார். ஒரு விதமான சூனியம் அவரை ஆட்கொண்டிருந்ததைப் போல காட்சியளித்தார். கண்களில் வெறுமை.
"எனக்கு இன்னும் தூக்கம் வர்ரது.. நான் தூங்கறேன்.." என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே டைனிங் டேபிளில் தட்டை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தார்.
"சரிப்பா.. போய் படுத்துக்கோ.. டப்பர்வேர்ல போட்டு வைக்கறேன். ராத்திரி பசிச்சா மைக்ரோவேவ்ல வைச்சு சுடபண்ணி சாப்பிடு.. ".
நிர்மலா ஆச்சரியத்துடன் யோசித்துக்கொண்டிருந்தாள். கடந்த நான்கு வருடங்களில், இருவருக்குமான உரையாடலில் இன்றுதான் மூன்று வாக்கியங்களுக்கு மேல் பறிமாறப்பட்டிருக்கின்றன.
தூக்கக் கலக்கத்தில் தள்ளாடி நடந்து சென்ற வரதனைப் பார்க்கையில், படிப்படியாக இல்லாமல் திடீரென்று ஒரு க்ஷண வினாடியில் அவரை முதுமை தொற்றிக்கொண்டுவிட்டதாக எண்ணினாள் நிர்மலா. இன்றிலிருந்து அவரது ரிட்டையர்மெண்டினால், தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும் என்று தோன்றியது. சிந்திக்க விருப்பமில்லாமல், கடகடவென பத்துப்பாத்திரங்களைத் தேய்த்துவிட்டு படுக்கப் போனாள். தூங்கிவிட்டாள்.
--------------
'மூப்பும் பிணியும் இனி பொழுதுபோக்காம் - வாழும்
நாளில் தனிமை மட்டுமே உறுதுணையாம் - தினமும்
கோயில் மணியும் கரண்டு பில்லும் பணியாம்.. இனிமேல்
உறுதி கனியும்.இரக்கம் வழியும். பயம் கூடும் - கூடிய
சீக்கிரம் முடியும்.'
--------------
வரதன் அதிகாலையில் விழித்தெழுந்து காப்பி போட்டு நிர்மலாவுக்கும் கலந்து கொண்டுவந்து கொடுத்தார். நிர்மலா நன்றி சொல்லலாமா என்று யோசித்தாள். பின் புன்னகைத்தாள். கண்ணாடிக்குள் இருந்து அவர் கண்கள் அந்தப் புன்னகையை படமெடுத்தன. இருவரில் யாரோ ஒருவர் தோற்றுவிட்டதால், அவர்களது யதேச்சையான இயல்புகளில் மாற்றங்கள் தென்பட்டன.
சப்போர்டிவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள் நிர்மலா. ஆனால், என்றும் இல்லாமல் இன்று திடீரென்று கரிசனத்தில் ஓவர் டூ செய்யக்கூடாது என்பது அவள் எண்ணம்.
"சோ.. ! என்ன ப்ரோக்ராம் ?" என்று பொத்தாம்பொதுவாக கேட்டாள் நிர்மலா. அவரது எதிர்காலத்தைப் பற்றி கேள்வி கேட்கவே பயமாக இருந்தது அவளுக்கு. அவரது எதிர்காலம் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் காரணத்தினால்கூட அப்படி இருக்கும்.
வரதன் வெறுமன தோள்களைக் குலுக்கி கண்களை மூடிக்கொண்டார். அவருக்கு ஒன்றும் அந்த நொடியில் தோன்றவில்லை. முப்பத்துமூன்று வருடங்கள் அலுப்பு சலிப்பில்லாமல் வேலைசெய்தும், "அதற்குப் பிறகு" என்ற எதிர்கால நிலையை யோசிக்காமல் போனதும், அந்த நிலை இவ்வளவு சீக்கிரமாக வந்ததும் அவருக்கு விந்தையாக இருந்தது. ஹி வாஸ் காட் பை சர்ப்ரைஸ்.
"போஸ்ட் ஆபீஸ் போய் ஒரு பாலிஸி எடுக்கப்போறேன்.. ஐ திங்க் இன்னிக்கு ஃபுல்லா அதுலே ஓடிடும்.." என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்வதுபோல சொன்னார்.
"ஓகே.."
ரிட்டையர்மென்ட் பணம் எவ்வளவு வந்தது என்று அவர் சொல்லவுமில்லை. அவள் கேட்கவும் இல்லை. டிபன்பாக்ஸ் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
"போயிட்டுவரேன்.." என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் சென்றாள்.
வரதன் சோபாவில் உட்கார்ந்தார். ரிட்டையர்மென்டுக்குப் பின் இருக்கும் காலம் முழுவதும், ரிட்டையர்மென்டுக்கு முன் வாழ்ந்த காலத்தை மெள்ள அசை போடுவதற்காகத்தான் என்று உரைத்தது. அது ஒரு சுய பரிசோதனை முயற்சி. Afterall, One's past is what one is...
நிர்மலா... தகப்பன் பெண் மாதிரி அவர்கள் இருவரும் நடந்துகொள்ளாமல் இருக்க ஆரம்பித்த நாள் நினைவுக்கு வந்தது. அந்த நாட்களின் வாசனைகூட அவருக்கு ஞாபகம் வந்தது.
--------------
"என்ன லஞ்ச் இன்னைக்கு ?" என்றபடி நிர்மலா உட்கார்ந்திருந்த டேபிளுக்கு வந்தான் குணசேகர் என்கிற குணா.
"ஹாய்.. குணா.. கம் கம்.. வெந்தய குழம்பு இன்னிக்கு. யுவர் ஃபேவரைட்.."
ஃபெண்டாபுலஸ்.. லெட் மீ ஹாவ் சம் !". உரிமையுடன் அவள் டிபன் பாக்ஸை அகப்படுத்திக்கொண்டான்.
"சோ ! வாட்ஸ் அப் ?"... சம்பிரதாயமாக கேள்வி கேட்டான்.
"யூ நோ வாட் ?! எங்கப்பா ரிட்டையர் ஆயாச்சு.. " அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் தண்ணீர் குடித்தாள்.
"ஓ.. குட்.. !" என்றவன், சிறிது மௌனத்திற்குப் பிறகு கூர்மையாக அவளைப் பார்த்து, "or, is it ?" என்றான்.
"தெரியலை.. இப்பொதிக்கு.. இல்லேன்னா மே பீ !...கொஞ்சம் டையம் ஆகும்.. செட்டில் ஆக."
"ஹ்ம்ம்..".
"குழம்பு பிரமாதம். யூ ஆர் அ கிஃப்டட் குக்."
மெல்லிதாக சோகம் இழையோட புன்னகைத்தாள்.
"லுக், உன் குழப்பம் எனக்குப் புரியுது.. பட், இது நானோ நீயோ இல்ல உங்க அப்பாவோ ரிசால்வ் செய்ய முடியாது.. நீ சொன்ன மாதிரி, டையம் வரனும்". அவன் சொன்னது வெகுசாதாரனமான மூனாவது மனித ஆறுதல் என்று அவனுக்கும் உரைத்தது.. ஆனால் வேறு பொருத்தமான ரியாக்ஷன் அவனுக்குத் தோன்றவில்லை.
"ஐ அன்டர்ஸ்டாண்ட்.. ஆனால், நான் கவலைப்படறதே வேற.. நான் அப்பா வீட்டுக்குத் திரும்ப வந்து கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆகப்போறது. இந்த நாலு வருஷம், அவரும் நானும் பேசினதே சொற்பம். ஹீ ஹாஸ் நோ ரிகார்ட் ஃபார் மீ.. அண்ட் சோ வாஸ் ஐ !".
"ஐ நோ.. இதெல்லாம் மாறப்போறதுன்னு நினைக்கிறியா ?"
"மே பி.. இன்னிக்கு கார்த்தாலே திடீர்னு காப்பி போட்டுக் கொடுத்தார். எனக்கு தாங்க்ஸ் சொல்லனும்னு வாய் வரைக்கும் வந்திடுத்து.. ஆனா, ஆர்டிஃபிஷியலா இருக்கும்னு சொல்லலை.."
குணா சிரித்தான்.
"ஏன் சிரிக்கறே ?"
"இல்லே.. நீ சொல்லாம இருந்ததுதான் ஆர்டிஃபிஷியல். உனக்கு சொல்லனும்னு தோனினதுதான் நாச்சுரல் ஃபீலிங்... ஏன் பயந்துசாகறே ? உங்கப்பாகிட்டே தோக்க உனக்கு பயமா ?"
"இதில தோல்வின்னு ஒண்ணும் இல்ல.. எனக்கு வைராக்கியம் எதுவும் இல்லப்பா.. என்னோட பேசக்கூடாதுன்னு முடிவெடுத்தது அவர். அதுக்கு மரியாதை கொடுத்து நானும் இருக்கேன். தட்ஸ் ஆல். இன்ஃபாக்ட் அதுதான் கம்ஃபோர்டபிள், ரெண்டு பேருக்கும்."
"ஹ்ம்ம்.."
"வாட் டூ யூ திங்க்.. நான் தனியாப் போலாமான்னு கூட யோசிச்சிட்டு இருக்கேன்."
"வாட் ? ஆர் யூ க்ரேஸி... தப்பா நினைச்சுக்காதே.. சரியான லூஸு குடும்பம் உன்னோடது."
"கான்ட் அக்ரீ மோர்" என்று சிரித்தாள், நிர்மலா.
"ஹ்ம். பின்ன.. உங்கப்பா சொந்த பொண்ணோட பேசறதில்லை.. பொண்ணும் அப்பாகிட்ட பேசறதில்ல.. ஆனா ஒரே வீட்டுல இருக்கீங்க.. அது என்ன மாதிரி லைஃப் ? ரேதர் என்ன ரிலேஷன்ஷிப் ? ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிறீங்க.. அவ்ளோதான்"
"முதல் சில நாட்கள் நானும் அப்படித்தான் நினைச்சேன். நான் வீட்டை விட்டு போய் வினோத்தை கல்யாணம் செஞ்சுக்கிட்டது அவருக்கு முதல் ஷாக்.. அப்புறம் ஆறு மாசம் கழிச்சு டைவோர்ஸ் அப்ளை செஞ்சிட்டு திரும்பவந்தது இன்னொரு ஷாக். கூடவே டிஸ்ஸப்பாயின்ட்மென்ட், கவலை, விரக்தி, அனுதாபம் எல்லாம். இன்ஃபாக்ட் வீ போத் ஷேர்ட் தி சேம் ஃபீலிங். எல்லாத்தையும் தாண்டி அவருக்கு தன்னை மீறி நடந்துண்டேன்கிறதுல அவருக்கு கோபம் மட்டும் ஜாஸ்தியா இருந்துது.. அதனால பேசலை.. பாக்கி கரிசனங்களினால வெளில போகச் சொல்ல முடியலை.. அது எனக்கும் கம்ஃபர்டபிளா இருந்துது. சோ, ஐ பிகேன் லிவிங் வித் இட். சோ ஃபார், சோ குட்".
"இப்பொ என்ன ஆச்சு அந்த கம்ஃபர்டுக்கு.."
"தெரியலை.. என்ன ஆகும்னு. ஆனால்...".. யோசனைகளுக்கும் வார்த்தைகளுக்கும் பாலம் போட முடியாமல் தவித்தாள்.
"வெல்... ! ரொம்ப யோசிக்காதே.. சில விஷயங்களை யோசிக்காமலே விட்டுடனும்.. life sucks if you are prepared for it"
உண்மைதான். எல்லாவற்றிர்க்கும் ப்ளான் போட்டால் எதிர்கொள்வதில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கிறது.
"நீ சொல்றதும் சரிதான்.."
"எஸ்.. இப்பொ பார், உன் வெந்தயக் குழம்பு காலி.. இப்பொ உன் மத்யான சாப்படு லேது. சாப்பாட்டுக்கு திண்டாடப்போறியே, அதுதான் த்ரில்.. இல்லையா ?" என்றான் சிரித்தபடியே.
-----------------------
சாயங்காலம்.
டி.வி ஓடவில்லை. டைரியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் வரதன். அவ்வப்போது கவிதை எழுதுவார்.
"அப்பா பேசலாமா ?".. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள். அவளை அதிர்ச்சியாகப் பார்த்தார்.
அவர் எதிரில் ஒரு மோடா ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு, காஃபி மக்கை இரண்டு கைகளிலும் பற்றிக்கொண்டு அவரின் பதிலை எதிர்பார்ப்பதாக புருவத்தை நெருக்கினாள். வரதன் பதில் சொல்லவில்லை.
"தோ பார். எப்படியும் பேசித்தான் ஆகனும். எனக்கு ரெண்டு கேள்வி இருக்கு. ஒன்னு உன்னைப்பத்தினது.. இன்னொன்னு என்னைப் பத்தினது. உன்னைப்பத்தி சொல்லனும்கிறது அவசியம் இல்லை.. ஆனா சொல்லனும்னு தோனித்துன்னா சொல்லலாம்.. ஆனா, நான் முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டியது என்னைப் பத்தி.."
டைரியை மூடி வைத்தார். பேனாவை பாக்கெட்டுக்குள் கவனமாக செருகிக்கொண்டார்.
"எனக்கும் காப்பி கொடு" என்றார். சமயலுள் சென்று காப்பி கலந்து கொண்டுவந்து கொடுத்தாள்.
"ம்ம்.. சொல்லு.. என்ன தெரிஞ்சுக்கனும்".
"இப்பொ நீ ரிட்டையர் ஆயாச்சு. வாட் ஹாப்பன்ஸ் நௌ ?". இன்னும் ஓப்பன் க்வெஸ்டின்ஸ்களே கேட்டுக்கொண்டிருந்தாள், நிர்மலா.
"புரியலை.."
"நீ மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு இருக்கே !".
"ஹெ !" சிரித்தார் வரதன். "நீ காலேஜ் முடிச்சப்புறம் நான் கேட்ட கேள்வி. இப்பொ நீ கேக்கற....".
"இதுதான் டெலிகேட்டா இருக்கு. நான் உன்னை இன்டிமிடேட் செய்யலை. உண்மையா தெரிஞ்சுக்கனும். முக்கியமா எனக்கு என்ன ப்ளான் வெச்சிருக்கேன்னு தெரிஞ்சுக்கனும்"
"இன்னும் புரியலை".
காப்பியை முழுதாக குடித்து முடித்து, கோபத்துடன் ஓங்கி வைத்தாள்.
"போஸ்ட் ரிட்டையர்மென்ட், நீ இங்கேயே, இந்த வீட்டிலேயே இருக்கப்போறியா ? இல்லே தஞ்சாவூர் வீட்டுக்கு போகப்போறியா ? நீ இங்கேதான் இருக்கப்போறேன்னா, நான் இங்கே இருக்கறிதிலே உனக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கா.. தஞ்சாவூர் வீட்டுக்குப் போறேன்னா நான் இங்கே இந்த வீட்டைப் பாத்துக்கலாமா"
அவள் கேட்டது அத்தனையுமே விந்தையாக இருந்தது வரதனுக்கு.
"என் உயில் பத்திரத்தை கேட்கிற மாதிரின்னா இருக்கு. I hope im not dead already"
நிர்மலாவிற்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. இன்று பேசியிருக்கவே கூடாது. முகத்தை திருப்பிக்கொண்டாள்.
கோபப்படாதே.. உன் கேள்வியோட நோக்கம் எனக்குப் புரியலை.. தட்ஸ் ஆல்".
நிர்மலா பேசவில்லை. மௌனம். நான்கு வருடங்கள் நிலவிய இந்த மௌனம், இப்பொழுது ஒரு சண்டை வந்ததும் அசௌகர்யமாக இருந்தது. யாரேனும் ஒருவர் அதை உடைத்தால் தேவலை என்று மற்றொருவர் எண்ணிக்கொண்டிருந்தனர்.
"இப்பொ என்ன தெரிஞ்சுக்கனும் ஒனக்கு. பணத்தை பேங்கிலே போட்டுட்டேன். மாசா மாசம் ஏழாயிரத்து ஐனூறு வரும். எல்லா கடனையும் அடைச்சாச்சு. ஏழாயிரத்தில என் செலவுகளை சமாளிச்சுக்கலாம். இதுதான் என் ஃபைனான்ஷியல் ப்ளான். மத்தபடி, எப்படி பொழுதை ஓட்டறதுன்னு இன்னும் முடிவு பன்னலே. நீ இங்க இருக்கறதுலே எனக்கு எந்தப் ப்ரச்சனையும் இல்லை.. ஆனால் என்ன விநோதமா இருக்குன்னா... முதல் தடவையா எனக்கு ஆட்சேபனை இருக்கான்னு நீ கேட்டதுதான்" என்று சொல்லி நிறுத்தினார்.
நிர்மலாவிற்கு அவர் ஏளனம் புரியாமல் இல்லை. ஆனால், வினோதுடன் கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்கிறாரா.. அல்லது திரும்ப வந்து வீட்டில் இருப்பதைச் சொல்கிறாரா ? நியாயமாக இரண்டு சமயங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல்தான் அவள் செயல்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.
"ஐ டோன்ட் ஃபீல் சாரி ஃபார் நெய்தர்" என்று நினைத்துக்கொண்டாள். "இப்பொ பழசை குத்திக்காமிக்க வேண்டாம்" என்றாள்.
"தெரியுமே.. உனக்கு தோல்வி பிடிக்காது. ஆனால், வினோத் விஷயத்தில நீ தோத்துப்போனது உன்னால மறுக்க முடியாது. நான்கு வருடங்களுக்கு முன்னால் நடக்கவேண்டிய சண்டை இப்பொழுது ஆரம்பித்திருப்பதாகத் தோன்றியது.
"சே !! நாலு வருஷமா அந்த மௌனம் சந்தோஷமா இருந்திச்சு.. இப்பொ பேச ஆரம்பிச்சா, பழசை எல்லாம் கிண்டி, தேக்கி வெச்சிருந்த கோபத்தையெல்லாம் என்மேல கொட்டறியா ? so much for residual anger".
"Residual anger எல்லாம் இல்லை. தினம் தினம் உன்னைப் பார்க்கறச்சே வரும். Fresh ones. என் கனவுகள் எல்லாத்தையும் குமிச்சு வெச்சு ஓங்கி காலாலே ஒதச்ச மாதிரி... ஒரே நாளிலே,..."
"ஜஸ்ட் ஸ்டாப் இட். எல்லாம் முடிஞ்சு மூட்டை கட்டிப் போட்டாச்சு."
"லுக்.. இப்பொ உனக்கு உன் ஆன்ஸர் கிடைச்சாச்சு. ஸ்டே பேக், இஃப் யூ லைக் டு".
"நீங்க என்ன பன்னப்போறேள் ?"
"தட்ஸ் லீஸ்ட் ஆஃப் யுவர் பாதரேஷன்".
"குட்."
கையில் கிடைத்த தலையணையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனாள் நிர்மலா.
வரதன் யோசித்தார். நிர்மலா கூறியதுபோல் பழைய கோபக்குட்டையில் இன்னும் ஏன் மூழ்கிக்கிடக்கிறோம். தன் கோபம் எந்த விதத்திலும் அநியாயம் இல்லை. பணத்தை கொட்டி படிப்பு கொடுத்து, புத்திசாலியாக உருவாக்கி, கனவுகளைத் தேக்கி வைத்திருந்தால்.. அதையெல்லாம் நிர்மூலமாக ஆக்கியது அவள் தவறு என்றால், அவளைக் கோபிப்பது அனிச்சைதானே. அது எத்தனை வருடங்கள் ஆனால் என்ன. தந்தை என்ற ஸ்தானத்தில் ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் வார்த்தையை மீறிய ஏமாற்றம்... அந்த நிலையை எதிர்கொள்ள முடியாமல் போன அவரது இயலாமை.. தன் அனுமதி இல்லாமல் தனக்கும் தன் மகளுக்கும் இடையில் புகுந்துவிட்ட இன்னொருவன் மேல் ஏற்பட்ட எரிச்சல்..முக்கியமாக இது அத்தனையும் அவள் உணர்ந்திருந்தாள் என்பதுதான் அத்தனை உணர்ச்சிகளையும் அவரை உள்ளடக்க வைத்தது.
வெளிப்படுத்தாத கோபம் வெறுப்பானது. வெறுப்பு வெறுமையானது. ஆறு மாதம் கழித்து அவள் திரும்ப வந்தபோதும் அதே கதைதான். பாவம். அவள் என்ன செய்வாள். அவள் புத்திசாலித்தனத்துக்கும் முற்போக்குக்கும் யாராலும் அடிபணிந்து இருக்கமுடியாது.. அதிகபட்சம் ஈடுகொடுக்க முடியாது..
இப்பொழுது கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறாள். தன்னுடைய ஆட்சேபத்தையெல்லாம் கேட்கிறாளே.. ஒரு வகையில் அவள் இளகிப்போனது அவருக்கு வருத்தமாக இருந்தது. தனியாக உலகை எதிர்கொள்பவளுக்கு தைரியம் முக்கியம். வரதன் அவளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முயலவில்லை. எல்லாம் தெரிந்தவளுக்கு தனக்கு என்ன செய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிந்திருக்கும். மறுபடி ஒரு ஏமாற்றத்திற்கு அவர் தயாராக இல்லை.
"வாட் ஹாப்பன்ஸ் நௌ ?" என்றாளே... என்ன அர்த்தத்தில் கேட்டாள். தன்னுடைய இயலாமையை நோக்கித்தானே கேட்டாள். இனிமேல் என்னடா பன்னப்போறே ? வேலை வெட்டி இல்லை.. சுடிதார் இஸ்திரி போட்டு, டிபன்பாக்ஸ் அலம்பி, மழை நாட்களில் பஸ் ஸ்டாண்டுக்கு குடை எடுத்துக்கொண்டு ஓடவேண்டும்.. இப்படி எல்லாம் எதிர்பார்க்கிறாளா ?
சே சே ! அப்படி எல்லாம் நினைக்க மாட்டாள். ஆனால், இவற்றையெல்லாம் அவர் செய்த காலத்தை நினைத்துப்பார்த்தார். காலம் குரூரமானது. ஒரே சம்பவத்தை ஒரு சமயத்தில் சுகமானதாகவும், வேறொரு சமயத்தில் கசப்பானதாகவும் மாற்றிக் காட்டுகிறது.
நியாயமான அக்கரையில்தான் கேட்டிருக்கிறாள். அக்கரை கரிசனம் அனுதாபம், இவையெல்லாம் இனிமேல் அதிகம் தேவைப்படுமோ..
இல்லையில்லை.. யாருக்கு வேண்டும். இருக்கவே இருக்கிறது ஏழாயிரத்து ஐனூறு.. புதிதாய் வாழ்வை ஆரம்பிக்கவேண்டும். மனதில் முதுமையை அமர்த்தினால், உடம்பில் முதுமை தானாக ஆட்கொண்டுவிடும். படித்த அறிவும், அனுபவித்த அறிவும் துணை இருக்கிறது. வரதன் யோசித்தபடியே தூங்கிவிட்டார். ஒருவேளை யோசிப்பதை வெறுத்தும் தூங்கியிருக்கலாம்.
-----------------
மறு நாள் காலை காப்பி போட்டுக்கொண்டு வந்தார். நிர்மலா வாங்கிக்கொண்டு குடித்து முடித்தாள். "தேங்க்ஸ்".. என்றாள் புன்னகையோடு..
என்ன ஆகிவிட்டது இவளுக்கு.."டோன்ட் பீ ஆர்டிஃபிஷியல்" என்றார் வரதன்.
அவள் கோபப்படவில்லை. அவளுக்குத் தெரியும், அவள் வார்த்தைகளில் போலித்தனம் இல்லையென்று.
"ஒவ்வொரு வார்த்தையையும் சைக்கோ அனாலசிஸ் பன்னிப்பார்க்காதே.. வாழ்க்கையில் ஸ்வாரஸ்யமே போயிடும்." என்றாள்.
"வாழ்க்கை ஸ்வாரஸ்யமா இருக்கா என்ன ?"
"டிபெண்ட்ஸ்.. காப்பி பிரமாதம்." என்றாள். பல வருடங்கள் கழித்து தன் மகளை நோக்கி புன்னகைத்தார், வரதன்.
ஒரு மணி நேரத்தில் ஆபீசுக்கு கிளம்பினாள், நிர்மலா.
"போயிட்டு வரேன்.. " என்றாள்.
"ஜாக்கிரதையா போயிட்டுவா" என்றார், வரதன்.