பிரம்மிப்பாக ஆரம்பித்தது "அயன்". ஆனால் கடைசியில் சீஸ் போட்ட பாப்கார்ன் தான் நன்றாக இருந்தது.
இந்தப் பதிவை நீங்கள் படிப்பதற்குள் ஏற்கனவே படம் பார்த்திருக்கக் கூடும். அதனால் படத்தைப் பற்றி சற்று விரிவாகப் பேசலாம். பார்க்கவில்லை என்றாலும் ஒன்றும் கெட்டுப்போகப்போவதில்லை. சுவாரஸ்யம் எதுவுமே இல்லாத படம்தான் அயன்.
சூர்யா. M.Sc படித்த பட்டதாரி ஸ்மக்ளர். புதுப் பட சி.டி, தங்க பிஸ்கட், வைரம் முதல் வயாகரா வரை சென்னைக்கு இறக்குமதி செய்யும் கொள்ளைக்காரர். இவரை ஏர்போர்டிலிருந்து வீட்டுக்கும், வீட்டிலிருந்து ஏர்போர்டுக்கும் கொண்டு விடும் டிரைவர் உத்தியோகம் பிரபுவுக்கு. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, படம் நெடுக பிரபுவை எல்லாரும் பாஸாகவும் ஸ்மக்ளராகவும் பாவிக்கிறார்கள். ஒரு போட்டி ஸ்மக்ளர் வருகிறார்.. இவர்தான் வில்லன். இவர் திரையில் தோன்றினாலே கொட்டாவிதான்.
தொழில் பேதங்களில் ஒருவரை ஒருவர் சென்னையில், காங்கோவில், மலேஷியாவில் என உலகெங்கும் போய் சண்டை போட்டு பரஸ்பரம் மாட்டிக்கொடுத்து கடைசியில் வில்லனைக் கொன்று நம்ம சூர்யா ஸ்மக்ளர் கஸ்டம்ஸ் வேலைக்கு விண்ணப்பிப்பதுடன் படம் நிறைவு பெருகிறது.
ப்ச்சேய் ! ஜெய்ஷங்கர் காலத்துக் கதை. ஏதோ கமர்ஷியல் மசாலா என்றால் கூடப் பரவாயில்லை. மருந்துக்குக் கூட காமெடி இல்லை. கமர்ஷியல் டைப் வில்லத்தனங்களும் இல்லை. ஹீரோயிசங்களும் இல்லை. அப்புறம் என்ன கமர்ஷியல்..
ஒரு இன்டர்வியூவில் கே.வி.ஆனந்த் வருத்தப்பட்டிருந்தார் -
"I am actually not too happy to hear that and I feel guilty to be called as a masala commercial director, which I am not".. நான் சொல்கிறேன்.. நிச்சயமாக கே.வி.ஆனந்த் கமர்ஷியல் டைரக்டர் இல்லை. அதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும்.
"I believe that Ayan is a realistic film with logic in every scene" என்றும் சொல்லியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இவர்களையெல்லாம் சந்தித்து நேரில் உரையாட வேண்டும் போல இருக்கிறது. கொஞ்சமாக சிரித்துவிட்டு இவரைப் பற்றி அப்புறம் வருவோம். முதலில் சூர்யா.
சூர்யா பார்ப்பதற்கு நோஞ்சான் போல் இருக்கிறார். விதம் விதமான கிருதா, விக், மீசை, தாடியுடன் வலம் வருவதால், இவர் மனதில் பதியவே இல்லை. நடிப்புக்கு இந்தப்படத்தில் அவசியம் இல்லாததால் நடனத்திலும், சண்டைக் காட்சிகளிலும் மட்டும் தெரிகிறார். சிக்ஸ் பேக் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்.. அந்த வசீகரமான புன்னகை முகத்திலிருந்து மறைந்து போய்விட்டதே..
பிரபு - பாவம். என்ன கொடுமை இது சரவணன். ஷேவிங் செய்யக்கூட நேரமில்லாத ஸ்மக்ளிங் தொழில் போலும். இல்லாத அயோக்யத்தனங்களையெல்லாம் செய்துவிட்டு "கோடி ரூபாய் கொடுத்தாலும் கஞ்சா கடத்த மாட்டேன்" என்று யோக்கியன் மாதிரி சொல்லும்போது கைதட்டி விசிலடிக்கலாம் என்று பார்த்தேன்.. ஆனால் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த ஆடியன்ஸை நாம் எழுப்புவானேன் என்று விட்டுவிட்டேன்.
தமன்னா - இவர் நடித்ததாகச் சொல்லப்படும் படங்களில் நான் பார்க்கும் முதல் படம் இது. அடிக்கடி டி.வி. பார்ப்பதாலும், அதில்வரும் பத்து விளம்பரங்களில் நான்கில் இவர் வருவதாலும்... இவர் ஹீரோயினாகப் பார்ப்பது நெருடுகிறது... எங்கே முப்பது செக்கண்ட் முடியும் போது கையை ஆட்டி "சரவணா ஸ்டோர்ஸ்" என்று சொல்வாரோ என்று தோன்றுகிறது.. ஆனால் அம்மணிதான் இப்பொழுது திரைக்கு வரும் அத்தனை படத்திலும் ஹீரோயினாமே... ! ரிசெஷன் ? எப்படி இருந்தாலும் இவர் படத்தின் மூன்று பாடல்களுக்குத் தேவைப்படுகிறார்.
பாக்கிபேரெல்லாம் - "மற்றும் நமது அபிமான நட்சத்திரங்கள்" அபிமானமில்லாத வேடங்களில்.
கதை - சுபா மற்றும் கே.வி.ஆனந்த். உண்மையில் கதை - கொஞ்சம் ஆங்கிலப்பட டி.வி.டிக்கள், சில ஜெய்ஷங்கர் பட சி.டி.க்கள்
நிஜம்மான உண்மையில் கதை - பழைய கள் - அதே பழைய மொந்தையில்.
மறுபடி கேவி.ஆனந்துக்கு வருவோம். பணம் சம்பாதிப்பது உங்கள் இலட்சியம் என்றால், நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்க வேண்டாம். எவ்வளவு சாதாரணமாக படம் எடுத்தாலும் அதை பெரிய ஹிட் ஆக்கக்கூடிய திறமை "சன் பிக்சர்ஸ்"ஸுக்கு உண்டு. நல்ல படம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், Ayan is certainly not the direction to progress
ஒளிப்பதிவு - பிரமாதம். ஆனால் பல இடங்களில் கலர் கரெக்ஷன் மாதிரி ஏதாவது செய்ததால் பிசிறடிக்கிறது. ஒரு பாடலில் நேரே தமன்னாவைக் காண்பித்து அப்படியே தலைகீழாகப் போகும் இடத்தில் பிரமிப்பு வந்திருக்க வேண்டும். ஆனால், பாடல் சுகமானதாக இல்லாததால் அந்த உழைப்பு வீணாகப்போய்விட்டது. மகாநதி கமல் மாதிரி சொல்லவேண்டுமென்றால் "ஒரு நல்ல படத்துக்கு கிடைக்கவேண்டிய டெக்னாலஜியெல்லாம் ஒரு மொக்கை படத்துக்கு கிடைக்குதே... !" என்று அங்கலாய்க்கலாம்.
பிண்ணனி இசை கொல்கிறது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது இசை. ரொமான்ஸ் காட்சிகளில் "வாரணம் ஆயிரமும்", சண்டைக் காட்சிகளில் "வேட்டையாடு விளையாடுவும்" ஞாபகம் வந்து அந்தப் படங்களில் ஹாரிஸ் ஜெயராஜை பாராட்டாமல் விட்டதை நினைவூட்டுகிறது.
தமிழ்த்திரையில் மிகக்கொடுமையாக சித்தரிக்கப்படும் உச்சரிப்புகளில் முக்கியமானது "பிராமணர்கள்" பேசும் தமிழ். இன்னொன்று "சேட்டு" மக்கள் பேசுவதாக இவர்கள் எண்ணும் தமிழ். இந்தப் படத்தில் சேட்டு வில்லன். பயங்கர காமடி போங்க ! மெனக்கெட்டு தியேட்டரில் சென்று பார்க்கும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை..
முரண் - வெள்ளியன்று "யாவரும் நலம்" பார்த்தேன். தியேட்டரே காலியாக இருந்தது. காரணம் படம் சூப்பர். அதுபற்றி, அடுத்த பதிவில்...