Tuesday, June 30, 2009

Requirement Traceability Matrix

சொல்லுதல் யார்க்கும் எளிய.. unfortunately, அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

Sunday, June 28, 2009

Project Execution

எண்ணித் துணிக கருமம், coz துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

Risk Management

அஞ்சுவது அஞ்சாமை பேதமை, well, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்..

Friday, June 26, 2009

Rest in peace


Born to Amuse
To Inspire, To Delight
Here One Day
Gone One Night

- from Michael Jackson's "Gone too soon"

Sunday, June 21, 2009

"ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !"
- திங்கட்கிழமைகளை வெறுக்கும் கீர்த்திவாசன்.

என்ன வயதானாலும், இந்தத் திங்கள்கிழமைகள் வந்தால் வெறுப்பாக இருக்கிறது. எல்லா இனிமையான வாரங்களும் கசப்பான திங்களன்று ஆரம்பிப்பது முரண்.

பள்ளிக்கூடமாக இருந்தால், ஞாயிறு மாலையே ஒருவிதமான சோகம் ஆட்கொள்ளும். திங்களன்று காலை பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டு கொஞ்சம் அதிக நேரம் உள்ளே இருந்துவிட்டுவந்து அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டே "அம்மா ! வயித்தை வலிக்கறது.." என்று சிவாஜி கணேசனின் தேவர்மகன் ஹார்ட் அட்டாக் லுக்கையெல்லாம் இமிடேட் செய்தாலும் "எல்லாம் சரியா போய்டும்.. நீ ஸ்கூலுக்குக் கிளம்பற வழியைப் பாரு" என்று அம்மா கௌண்டர்- அட்டாக் செய்துவிடுவாள். வாழ்வின் அத்தனை சோகங்களும் ஒரே நாளில் என்மீது அழுத்துவது போல அழுகை வரும். துக்கம் தொண்டையை அடைக்க பள்ளிக்கூடம் கிளம்புவேன்.

வயதில் முதிர்ச்சி வர வர, திங்கள்கிழமைகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வரும் என்று நினைத்தேன். ஆனால், அந்த நாள் எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையின் தெளிவுதான் அதிகமாகின்றது. அதுவும் ஒவ்வொரு திங்களும் அதன் கொடுமையின் உக்கிரம் அதிகமாவதை உணர்வது வேதனையின் உச்சக்கட்டம்.

சே !

Saturday, June 20, 2009

Tuesday, June 16, 2009

கிளி ஜோஸ்யம்

என் வருங்காலம், உன் கையிலே !

(எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்க)

Saturday, June 13, 2009

ட்ரெய்ன் ஆப் தாட்ஸ்

சாயம் ஐந்தரை.

ஜன்னல் வழியாக க்ரோம்பேட் ஸ்டேஷன் ப்ளாட்பாரமும், அவசர மனிதர்களின் பரபரப்பும் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. மந்தமான சாயங்கால வேளை. பளீரென்ற வெளிச்சமும் இல்லாமல், இருட்டும் இல்லாமல், விளக்கு போடலாமா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளடங்கிய மந்தாரச்சாயங்காலம். பொழுதின் இந்த நேரத்தில் உற்சாகம் சுத்தமாகவே இருப்பதில்லை. வெள்ளிக்கிழமைகளில் ஒரு சில பேருக்கு ஒரு வேளை இருக்கலாமோ என்னவோ. ஆனால், பாக்கி நாட்களில்.. ? பாக்கி பேருக்கு ?

குளித்து ஏழு மணி நேரத்திற்கு மேல் கடந்த வியர்வை உடல்கள் ஒன்றோடொன்று கைகள் உராசியபடி, தலைமுடி வியர்வையைப் பகிர்ந்து கொண்டு, துர்நாற்றத்தை காற்றில் தூவி விட்டுக்கொண்டே நகரும் இந்த சாயங்கால வேளைகள் சுகமானதானதாக இருக்க முடியாது. நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் படுக்கையுடன் வீடு இருக்கிறது என்ற ஆறுதல் ஒன்றுதான் சுகம்.

இரயில் மெதுவாக சென்று கொண்டிருப்பதை, பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த இன்னொரு தண்டவாளம் கோள் மூட்டிவிட்டுச் சென்றது. "இந்த இடம் வந்தாலே ஸ்லோ பண்ணிடறானுங்க.. ப்ச்ச்ச்சேய் !" என்று அலுப்புக் குரல்கள்.. ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஜன்னல் வழியாக கண்ணைப் பிதுக்கி எட்டிப் பார்க்க முயலும் முகங்கள். யாரும் அந்த நொடிப் பொழுதுகளை சுகமாக அனுபவிக்கவில்லை. எப்படி முடியும்.. அவஸ்தையில் சுகம் காண யாராலும் முடியாது தான்.

என்னால் முடியும் என்று நினைக்கிறேன். இந்த ஐந்து ரூபாய் பொட்டலம் மிக்ஸர், உதடுகளின் ஓரத்தில் காரத்தால் எரியச் செய்தாலும், அடுத்த வாய் கேட்கிறது நாக்கு. க்ஷண நேர நாக்கின் துளி இன்பத்துக்காக பத்து நிமிடம் பரிதவிக்கும் உதட்டோரத்தை நினைத்துப் பார்க்கையில் பல விஷயங்கள் மனதிற்குள் ஓடின. வாழ்க்கையும் இப்படித்தானே.

மிக்ஸர் பொட்டலாமும் காலியாகிவிட்டது. கவரைக் கசக்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். யாரும் பார்த்துவிட்டார்களோ என்ற குற்ற உணர்ச்சி. ஆனால், என்னைச் சூழ்ந்துள்ள இந்த நூற்று இருபது பேர் பார்க்காத சுத்தத்தை நான் மட்டும் கடைபிடித்து என்ன கிழித்துவிடப் போகிறேன். கிழித்துவிட முடியும்.. ஆனால் எனக்குள்ளும் அவர்களுக்குள் இருக்கும் அதே அலட்சியமும் அசுத்தமும் இருக்கிறது. நான் ஒன்றும் அவர்களிலிருந்து வேறுபட்டவனில்லையே.

நான்.

நான் ஒரு சராசரி மனிதன் என்று கூறிக்கொள்வதால் நான் சராசரி மனப்பான்மையிலிருந்து விலகியிருப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைபவன்.

தாம்பரம் சானடோரியம் அருகில் இருக்கும் பல சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களில் நானும் ஒருவன். தினம் முப்பத்தைந்து கிலோமீட்டர் பயணம் செய்து அலுவலகம் வந்தடைந்து, ஓயாமல் வேலை செய்து நன்றாக சம்பாதிப்பவன். வீசிங் வரும் என்பதால் புகைப் பழக்கம் இல்லை. சகவாசம் எல்லாம் தயிர் சாத கும்பலுடன் மட்டும் என்பதால் தண்ணியும் கிடையாது. பேச்சுலர்.

எனது சிந்தனை வித்தியாசமானது என்பதில் எனக்குக் கொஞ்சம் கர்வம் உண்டு. இதோ இந்த இரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் யாரும், என்னை மாதிரி அடுத்தவர்கள் என்ன யோசித்துக்கொண்டிருப்பார்கள் என்று யோசிக்கமாட்டார்கள். எனக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் அபாரமான கவலைகள் என்று எதுவும் இல்லை. அதனால், எனது சிந்தனை யோக்யதைகளுக்கு அடிக்கடி போர் அடிக்கும் என்பதால், கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கப் பழகிக் கொண்டேன். பல பேர் என்னைவிட வித்தியாசமாக யோசிக்கக்கூடும் என்ற எண்ணத்தை நான் பெரிதாகக் கொள்வது இல்லை.

இரயில் பயணங்கள் ஒவ்வொன்றிலும் ஏழ்மையைப் பார்த்து வருத்தப்படுவது போல் யோசிப்பது என் வழக்கம். ஸ்வதேஸ் படத்தில் ஷாருக் கானுக்கு ஏற்படும் எண்ணங்கள் என் மனதிலும் தோன்றும். அதில் சிறிதளவேனும் உண்மையான எண்ணங்களாகவும் இருக்கும். பொதுவாக ஒரு பேஸிஸே இல்லாமல் அடுத்தவரைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அது தவறு என்றும் நினைப்பவன். ஆனாலும் என்னையும் மீறி ஒரு போலித்தனம் என்னுள் ஒட்டி இருப்பதை நான் உணர்கிறேன்.

இப்பொழுது சீட்டின் ஓரமாக ஒடுங்கி இருக்கும் ஒரு வயோதிகரைப் பார்க்கிறேன். அவருக்கு வயது சுமார் ஐம்பத்தி ஆறு இருக்கும். இந்த வயதில் அனேகமாக வேலைக்குத்தான் போய் வருகிறார் என்று நினைக்கிறேன். அது அவருடைய விதி. அவர் மாதம் பூராவும் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை நான் அதிகபட்சம் இரண்டு நாட்களில் சம்பாதித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். எனக்கு வயது இருபத்து ஆறு. இந்த inequality எனக்கு விந்தையாக இருக்கிறது. அதில் லேசாக பெருமைப் படுகிறேன். என்னை விடவும் அதிகமாக இந்த கம்பார்ட்மெண்டில் யாராவது அதிகம் சம்பாதிப்பார்களா என்று நோட்டம் விடுகிறேன்.

அதோ அங்கே ஒருவர் லூயி பிலிப் சட்டை அணிந்திருக்கிறார். லேப்டாப் வைத்திருக்கிறார். ஒரு வேளை என்னைவிடவும் அதிகமாகச் சம்பாதிக்கலாம். ஆனால் அவர் முப்பத்தைந்து வயது கடந்தவர் என்று சமாதானம் அடைகிறேன். நான் அந்த வயதில் மூன்றாம் லூயி பிலிப்பை அணியும் தகுதிக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

மீண்டும் அந்த வயோதிகரைப் பார்க்கிறேன். அவர் எழுந்திருக்க முற்படுகிறார். அப்பொழுதுதான் ப்ரஞ்ஙை வருகிறது.. இது என்ன ஸ்டேஷனில் வண்டி நிற்கப் போகிறது ? திரிசூலமாக இருக்கவேண்டும். இல்லையே ! ஏர்போர்ட்டைக் காணோமே... சுத்தம். இப்பொழுதுதான் பல்லாவரமே வருகிறது. இன்னும் நாற்பது நிமிடங்கள் இந்த இரயிலில் பயணம் செய்தாக வேண்டும்.

ஒரு கும்பல் முண்டியடித்துக்கொண்டு ஏறுகிறது. பெரும் இரைச்சல். இந்த இரயில் பெட்டிகள் விசித்திரமானவை. கூர்ந்து பார்த்தால் யாரோ இரண்டு மூன்று பேர் தான் பேசிக்கொண்டிருப்பது தெரியும். ஆனால் ஒரே சப்தமாக இருக்கும். இருக்கிறது.

பெண்கள் அனைவரும் முன்னாடி இருக்கும் மகளிர் பெட்டிக்கு விரைகின்றனர். யாரும் மற்ற பெட்டிகளில் பெரும்பாலும் ஏறுவதில்லை. பெண் விடுதலை... தனிமைப் படுத்திக் கொள்ளுதலில்தான் உள்ளது போலும். எனக்கு அது ஒரு சிறை மாதிரிதான் தோன்றும். விருப்பப்பட்டு சிறையில் அடைந்து கொள்வது.

பல்லாவரமும் மெதுவாக ஜன்னலுக்கு வெளியில் நகர்ந்து கொண்டிருந்தது.

அடுத்து திரிசூலம். ஏர்போர்ட். ஏரோப்ளேனில் பயணம் செய்வது எத்தனை சுகம். அதற்கும் ரயிலுக்கும் என்ன வித்தியாசம் ? ஆகாசத்துக்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம். ஆஹா.. இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன, விமானத்தில் பயணம் செய்து. கம்பெனி செலவில் அனாயாசமாகப் பறந்தது இன்னும் இனிமையான நினைவுகள். இந்த மாதிரி தள்ளு முள்ளு, வியர்வை, நெரிசல் எதுவும் இல்லை.

நான் ஏன் இந்த இரயிலில் இறங்கி ஏரோப்ளேனில் சும்மா ஒரு எட்டு பம்பாய் சென்று வரக்கூடாது ?

எனது யோசனையை நினைத்தால் எனக்கே சிரிப்பாக வருகிறது. ஆனால், என்னோரத்தில் ஒரு பயம் என்னைப்பற்றியே உண்டு. மனதில் கொஞ்சம் பலமாகத் தலைதூக்கும் எண்ணங்களை தடால் என்று செயல்படுத்துபவன். இம்பல்ஸ் என்று சொல்லுவார்களே ! பேராதிக்கத்தோடு அது செயல்படும்போது, என் எதிர்ப்புச் சக்தி செயலிழந்துவிடும் அபாயம் உள்ளது. எட்டாயிரம் ரூபாய் ஆகுமா? அவ்வளவு பணத்தை தூக்க்கி எறிந்து பொழுதை ஓட்டும் பவிசு எனக்கு இன்னும் வரவில்லை. வந்தால் நன்றாக இருக்குமா?

ஒரு கட்டம்போட்ட சட்டை வருகிறார். அங்கேயும் இங்கேயும் இண்டு இடுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்தபடியே வருகிறார். மூன்று பேர் அமர்ந்திருக்கும் ஒரு சீட்டுக்குச் சென்று நிற்கிறார். கொஞ்சம் யோசிக்கிறார். "சார் ! தள்ளி உக்காருங்க..." என்று சொல்லி அனேகமாக பக்கத்தில் உட்கார்ந்துவிட்டார். பின்னர், ஏற்கனவே அமர்ந்திருந்த மூன்று பேரும் தன் ஆக்கிரமிப்புகளை குறுக்கிக் கொண்டு இடம் விடுகின்றனர். ஒரு பத்து வினாடிகள் அந்த நால்வரும் தங்கள் இருப்பளவை சமன் செய்துகொள்வதில் செலவு செய்கிறார்கள். இதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறேன். அடுத்தவர் சௌகர்யங்களைப் பற்றி கவலைப்படாதவர். அல்லது, தன் சௌரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் சுயநலவாதியா.. இல்லையே, அங்கே நான்கு பேர் உட்கார முடிகிறதே.. கஷ்டம் என்றாலும்... ஆக அது தர்மம் தானோ ?

பழவந்தாங்கல் வந்துவிட்டது. இங்கே அத்தை வீடு இருக்கிறது. இறங்கிப்போய் பார்த்து வரலாம். அத்தைக்கும் சந்தோஷமாக இருக்கும், பின்னர் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். இரண்டு விநாடிகளில் முடிவெடுக்க வேண்டும். முடியுமா ? முடியும்.. ஆனால், அங்கே போய்விட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது இதே ரயிலின் கூட்ட நெரிசலை நினைத்துப் பார்த்தால் பயம்மாக இருக்கிறது. வேறு ஏதாவது சனி ஞாயிறில் போய்வரலாம். ஹ்ஹ்ம்ம்.. இப்பொழுது நினைத்தால்கூட முடியும்.. ஆனால், பாசத்தையும், பசியையும் சோம்பேறித்தனம் வென்றுவிட்டது. இந்த சோம்பேறித்தனம் சில சமயங்களில் சுய பச்சாதாபத்தினால் வருகிறது. நம்மைப் பார்த்து பச்சாதாபப்பட யாருமே இல்லையென்றாலோ, அல்லது அதிகம்பேர் நம்மைப்பார்த்து பச்சாதாபப்பட்டலோ, நம்முள் சுய பச்சாதாபம் ஏற்படுகிறது. Self pity kills.

தூரத்தில் பரங்கிமலை தெரிகின்றது. சின்ன வயதில் அப்பாவுடன் பயணிக்கையில் "அப்பா அந்த மலைல பரங்கிக்காய் காய்க்குமா ? அதனாலதான் இந்த ஸ்டேஷனுக்கு பரங்கிமலை பேரா ?" என்று கேட்ட ஞாபகம். ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி ஞாபகங்களில் உழல்வது சுகானுபாவம். ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கும் அனேகம்பேர், அதாவது கையில் தினமலரோ குங்குமமோ இல்லாதவர்கள், பக்கத்து தண்டவாளத்தில் தத்தம் ஞாபக ரயில்களை ஓட்டிக்கொண்டு வருகின்றனர். வயோதிகத்தின் சௌகர்யங்களில் ஒன்று, எந்த விஷயத்தை எடுத்தாலும் அதற்கேற்ப ஞாபகக் கிளைகள் மனதில் முளைக்கின்றன. வாழ்க்கையை ஸ்வாரஸ்யமாக வாழாதவர்கள் என்ன மாதிரி ஞாபகங்கள் வைத்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

கிண்டியில் பாதி ரயில் காலியாகிவிட்டது. எல்லாரும் தங்கள் அடுத்தக்கட்ட பயணத்துக்கு இறங்குகிறார்கள். ப்ளாட்பாரத்தில் அனைவரும் ஓடுவதுபோல நடக்கிறார்கள். படிக்கட்டில் ஏற அவ்வளவு தள்ளுமுள்ளு. என்னதான் நாகரீகம், புத்திசாலித்தனம் உள்ள கூட்டம் என்றாலும் இந்த கூட்ட நெரிசல் என்பது நம் மனித இனத்தில் புதைந்திருக்கும் முட்டாள்தனத்தைக் காட்டுகின்றது. இதே முட்டாள்தனம் மாம்பலம் ரயில் நிலைய மாடிப்படிகளில் நானும் சந்தித்தாகவேண்டும்.

இன்னும் அதிகக் கூட்டம் ரயிலுக்குள் புகுகின்றது. பூந்தமல்லி செல்லும் சில பேருந்துகள் போல, ரயில் ஒருபக்கம் சாய்ந்தார்போல் செல்லுமா என்று கற்பனை செய்து பார்க்கிறேன். அதெப்படி அத்துனூண்டு தண்டவாளம் இத்தனை பெரிய ரயிலை சுமக்கின்றது. உடைந்து ரயில் விழுந்துவிடாதா ? விழுந்துவிட்டால் ? நான் என்ன செய்யவேண்டும். நான் அமர்ந்திருக்கும் பக்கமாக கவிழ்ந்தால், என் மேல் எல்லாரும் விழுவார்கள்.. தலையை மட்டும் பாதுகாத்துக்கொண்டால் போதும் - கை ஃப்ராக்சருடன் தப்பித்துக்கொள்ளலாம். அந்தப் பக்கமாக கவிழ்ந்தால், கொஞ்ச நேரம் ஜன்னல் கம்பியைப் பிடித்து செங்குத்தாகத் தொங்கலாம்.. இடுப்பில் மாட்டிய செல்போன் கீழே விழலாம். அதைப் பாதுகாக்கவேண்டுமா ? சே !! ஏன் இந்த விபரீத எண்ணம்.

நல்லபடியாக வீடு போய் சேரவேணும் காரணீஸ்வரா. சைதாப்பேட்டை வந்தாயிற்று. வாழ்க்கைத் தடுமாற்றங்களில் பக்தி தானாக வந்துவிடுகிறது. சுஜாதாவின் கதையில் படித்தது ஞாபகம் வருகிறது. "நீங்கள் பென்ஸ் காரில் பயனிக்கும்போது பகவத் கீதையும் பதஞ்சலியும் தேவைப்படாது. ஆனால் அந்தக் காரின் டயர் பஞ்சராகி பதைபதைக்கும்போது மனதில் தானாக பக்தி முளைக்கின்றது.." என்பது போல் எழுதியிருந்தார். உண்மைதான். இந்த உண்மை எனக்கு ஏற்கனவே தெரிந்ததா ? அல்லது சுஜாதா சொல்லித் தெரிந்ததா ? நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மைகளை நமக்கே உணரவைப்பது ஒரு வித்தை. ஒரு புவியியல் கணக்கை புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது அதுவரை சத்தியமாக அது நமக்கு தெரிந்திருக்காது. ஆனால், இதுமாதிரி பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசும்போது "அட.. ஆமாம்லே" என்று யோசிக்கும் விஷயங்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றன என்று நினைத்துக்கொள்கிறோம். அல்லது நினைத்துக்கொள்வேன்.. அம்மாதிரி என்னை யோசிக்கவைத்த படைப்புக்களை 'யதார்த்தமானவை' என்று பெயரிட்டு என்னை புத்திசாலியாக்கிகொள்வேன்.

அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். யாருடைய காலையும் மிதிக்காமல், கதவை நோக்கி நடக்கிறேன். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவின் மீது நடந்த அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறது. மேலே பிடித்துக்கொள்ள தொங்கிக்கொண்டிருக்கும் கம்பிகளின் புத்திசாலித்தனத்தை வியக்கிறேன். மாம்பலம் ஸ்டேஷனுக்குள் நுழைந்துவிட்டது. "இறங்குங்க.." என்ற குரல்களோடு சேர்ந்து இறங்கி சில தப்படிகள் நடக்கிறேன். படிகளை நோக்கி.

ஆஹா ! இடுப்பைப் பிடிக்கிறேன். செல்போனைக் காணவில்லை. திருட்டு. ஏமாற்றம். வெட்கம். மிகப்பெரிய அழுத்தம் என்னைப் புதைக்கிறது. வயிறு இறுகுகிறது. இதற்குமேல் என்னால் யோசிக்கமுடியவில்லை.

Tuesday, June 09, 2009

ஆலிலை

ஆலிலை க்ருஷ்ணர்

இங்கு க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்

மேலே பார்ப்பது ஆலிலை கிருஷ்ணர். அதாவது, தூரத்தில் தெரிந்த ஒரு கிருஷ்ணர் சிலையை ஒரு ஆலம் இலைக்குப் பின் நிறுத்தி, அவரை ஒவுட் ஆஃப் ஃபோகஸில் வைத்து எடுத்த போட்டோ. :)

Monday, June 08, 2009

காட்ட மறந்த புகைப்படங்கள்

சில வாரங்களுக்கு முன் மாயவரம், தஞ்சாவூர், கும்பகோனம் எல்லாம் சுற்றிவிட்டு வந்தேன். சில புகைப்படங்கள் இங்கே....

Mayavaram Bus Stand

- மாயவரம் பஸ் ஸ்டாண்ட்

Tanjore Big temple

-தஞ்சை பெரிய கோபுரம்

Uppiliyappa !

- கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் பிரகாரம்

DSC04427

விரல் சூப்பும் யானை ?

-விரல் சூப்பும் யானை

The Shadow Never Touches the Ground

Tanjore Big Temple

-கோபுரத்தின் அழகை ரசிக்கும் சிறுவன்

Sunday, June 07, 2009

யூத் விகடன்

யூத்ஃபுல் விகடனில் என்னுடைய "போஸ்ட் ரிட்டையர்மெண்ட்" கதை வெளிவந்துள்ளது. (நன்றி மனுநீதி). ஏற்கனவே படிக்காதவர்கள், இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.

கடந்த காலத்தில் நான் ஆங்கிலத்தில் எழுதிய சில கதைகளை தமிழில் மாற்றம் செய்து எழுதிவருகிறேன். சென்ற பதிவில் நீங்கள் படித்த / படிக்காத "வேணு கிருஷ்ணனின் மன அமைதி"யும் அப்படி எழுதியதுதான்.

இன்னும் வரும்.

வேணு கிருஷ்ணனின் மன அமைதி

அன்றைக்கு வேணு கிருஷ்ணன் சீக்கிரமாக வீடு திரும்பியிருந்தான். வீடு பூட்டியிருந்தது. வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரம் சீக்கிரமாக திரும்பியிருந்தான். சாவித்ரி இன்று தன் தூரத்து பெரியம்மா ஒருவரின் மகனின் திருமண வரவேற்பிற்குச் சென்றிருக்கிறாள். சாவித்ரியும் வேணுவும் ஈஸ்வரன் சாட்சியாக அக்கினியை வலம் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

பக்கத்துவீட்டு காலிங் பெல்லை அழுத்தினான், வேணு. அவன் அடிக்கடி வந்திராத வீடு.. அடிக்கடி பார்த்திராத மாமி. அவரை மாமி என்று அழைப்பதா என்னங்க வாங்க போங்க என்ற பொதுப்படையில் அழைப்பதா என்று அவர் கதவைத் திறக்கும் வரையில் யோசித்தான்.

கதவு திறந்ததும், ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு "சாவி கொடுத்துட்டு போயிருக்காளா ?" என்று கேட்டான். "தோ, எடுத்துட்டு வரேன். உள்ளே வாங்க.. காபி சாப்பிடறீங்களா ?" என்றபடியே உள்ளே சென்றார்.

"இல்லை.. நோ தேங்க்ஸ்.." என்று சாவியை வாங்கிவிட்டு தன் வீட்டுக்குச் சென்றான். சென்னைக்காரர்கள், பல பேர் நினைப்பதுபோல் இல்லை. நல்ல மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான்.

கதவைத் திறந்தான். ஸூன்யம் ஆட்கொண்ட வீடு போல இருந்தது. ஆபீஸ் கடுப்பில் ஏற்கனவே உழன்றுகொண்டிருந்த வேணுவின் மன அமைதி ஒரேடியாக ஓடிவிட்டது. சாக்ஸை கழற்றி தூக்கி எறிந்தான். அவன் கோபத்தின் வீரியத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், எடை குறைவான சாக்ஸ் பக்கத்திலேயே விழுந்தது. மங்கலான வெளிச்சத்திலேயே அசிங்கமாகத் தெரிந்த ஹால், விளக்கைப் போட்டவுடன் கலவரம் நிகழ்ந்த கிராமத்து மைதானம் மாதிரி காட்சியளித்தது.

கச கச என்று இருந்ததால், காற்றாடியை சுழலவிட்டான். சோபாவின் மேல் இருந்த நியூஸ் பேப்பர் பறக்க ஆரம்பித்தது. அதை பிடிக்கப் போனபோது அந்த ஜீவாத்மாவினிலிருந்து பிரிந்த ஒரு இலவச இணைப்பு சோபாவின் அடியில் புகுந்து கொண்டது. ஆத்திரத்தில் கையில் இருந்த பேப்பரை கசக்கிக் கிழித்தான். குணிந்து சோபாவின் அடியில் இருந்த அந்த இலவச இணைப்பை, கை எட்டும் தூரத்தைவிட நான்கு இன்ச் தூரத்தில் இருந்த அதை, எட்டிப் பிடித்து இருந்த கடுப்பில் அதையும் கசக்கினான்.

மேலே எழுந்து பார்த்ததில், பெருக்காத தரையில் இருந்த, சென்னைக்கு பெருமை சேர்க்கும் மாசற்ற தூசி தன் ராசியான சட்டையில் ஐக்கியம் ஆனதைக் கண்டான். பொறுமையின் எல்லையில் இருந்தான் அவன்.

டேபிளில் ஈ மொய்த்துக்கொண்டிருந்த காபி டம்ப்ளர். காய்ந்து போன இட்டிலி தட்டில், தான் விரல்களால் சட்டினியை வழித்ததின் சுவடுகள் தெரிய காய்ந்துபோயிருந்தது. மயிர்க்கொத்துடன் சீப்பு. ஈரமாக உலர்த்தப்படாத நாற்றமான டர்க்கி டவல்.

சே !! வீடா இது.

பணம் சம்பாதித்து என்ன ப்ரயோஜனம். மன அமைதி எங்கே கிடைக்கிறது. பல்லை நற நற என்று கடித்தான். சட்டையின் அழுக்கு அவனை அதிகம் பாதித்திருந்தது. நுணிக்காலில் துளி அழுக்கு பட்டாலும் அவனுக்குப் பொறுக்காது. "சாவித்ரி.. தரை பார்.. ரொம்ப டர்ட்டியா இருக்கு.. தரையைப் பெருக்கலாம்ல.. இதுக்கு வேணும்னா ஒரு வேலைக்காரியை வெச்சுக்க வேண்டியதுதானே".. என்பான்.

ரெஸ்ட்லெஸாக இருந்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அத்தனையையும் ஒழிக்க ஆரம்பித்தான். கிழிந்த நியூஸ்பேப்பரை குப்பைத் தொட்டியில் போட்டான். காப்பி டம்ளர் டவரா, இட்லி சாப்பிட்ட தட்டு எல்லாவற்றையும் சமையல் சிங்கில் போட்டான். அங்கே இன்னொரு யுத்தகளம் காத்திருந்தது. எண்ணைப் பிசுக்குடன் பாத்திரங்கள். அப்படியே அத்தனையையும் சிங்க்கில் போட்டுவிட்டு அவற்றிற்கு ஜலக்கிரீடை செய்தான்.

ஹாலுக்கு வந்து பார்த்த்போது, இப்பொழுது கொஞ்சம் ஒழுங்காகத் தெரிந்தது. ஆனால் காலில் தூசி ஒட்டியது. விளக்குமாறை ஒரு ஐந்து நிமிடங்கள் தேடி, ஃப்ரிட்ஜுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த அதை எடுத்துவந்து குணிந்து ஹால் தரையைப் பெருக்கினான். பெருக்கப் பெருக்க அழுக்கு குமிந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெருக்கும்போது குப்பை வந்தால்தான், பெருக்கியதின் பலன்.

பனியனில் வியர்வை தோலில் ஒட்டியது. பாத்ரூமுக்குப் போய் ஷவரில் குளித்தான். வெளியே வந்தவுடன் ஸ்வாமி படத்தின்முன் நின்று கும்பிட்டான். இதெல்லாமே அவனது வழக்கமான செய்கைகளை மீறியவை. ஆகவே, புதிதாக உணர்ந்தான். விபூதி இட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்தான். பளீர் என்று இருந்தது. அவனுக்கே பெருமையாக இருந்தது. சோபாவில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.

யோசித்துப் பார்த்தான். அவன் ஆபிஸிலிருந்து தினமும் திரும்பும் போது வீடு இப்படித்தான் அழகாக இருக்கும். அவன் உள்ளே நுழைந்தபோது பார்த்த அத்தனை களேபரங்களும் தினமும் காலையில் அவன் நிகழ்த்துபவை. பாவம் சாவித்ரி. அவள் அத்தனையும் வாரிப் பெருக்கி, அலம்பி, துவைத்து என எல்லாவற்றையும் செய்து வைப்பாள். இந்த வீட்டை ரத்தினமாய் ஜொலிக்கவைப்பவள் அவள்தான். அவள் இல்லாத ஒரு நாளே எப்படி இருக்கிறது.. அவளை நினைக்கும் போது பெருமையாக இருந்தது.

இன்று அவள் பெருமைப்படுவாள். அவள் வீடு திரும்பும்போது அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கவேண்டும். காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள வேண்டும். அத்தனை நேரம் வேலைபார்த்துவிட்டு வந்த பிறகும், வீட்டு வேலைகளைச் செய்ய முடியும் என்று காண்பிக்கவேண்டும்.

இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே பசித்தது. அவள் இருந்திருந்தால், ஆபீஸிலிருந்து வந்தவுடன் ஜில்லென்று ஏதாவது கொடுத்திருப்பாள். நேற்று ஏதோ ஸ்குவாஷ் கொடுத்தாளே.. ஃப்ரிட்ஜுக்குள் இருக்குமோ ? எழுந்திருந்து சமையலறைக்குள் சென்றான். ஃப்ரிட்ஜில் அப்படி எதுவும் இல்லை. கையில் கிடைத்த ஆப்பிளையும் ஒரு மாம்பழத்தையும், தேடிப்பிடித்து ஒரு கத்தியையும் எடுத்து வந்தான்.

டி.வியைப் போட்டான். ஆப்பிளைக் கடித்தான். நடுவில் கொட்டைகளுடன் இருந்த பகுதியை ஜன்னலுக்கு வெளியில் எறிந்தான். அது ஜன்னல் கம்பியில் பட்டு சோபாவின் அடியிலேயே விழுந்ததை, டென்னிஸ் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்த வேணு கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கத்தியால் மாம்பழத்தை ஒரு கதுப்பாக நறுக்கினான். பின், அடிப்பாகத்தையும் கதுப்பாக நறுக்கி, டீப்பாயின் அடியில் இருந்த ஒரு அழுக்கான பேப்பரில் கொட்டையை வைத்தான்.

டென்னிஸில் நாடால் தோற்றுப்போன வெறுப்பில், டி.வியை அணைத்தான். ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்தை பரண் மேலிருந்து எடுத்துப் படிக்கலாம் என்று நினைத்தான். ஒரு ஸ்டூலைப் போட்டு பரண் மேலே ஏறினான்.

----------------

இரவு பதினொன்றரை ஆகியிருந்தது. சாவித்ரி ஆட்டோவைக் கட் பண்ணிவிட்டு கேட்டைத் திறந்தாள். பலவருடங்களாக சந்த்திக்காத சித்தி பெண்களோடு அளவளாவிவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பி இருந்தாள்.

காலிங் பெல்லை ஒருமுறை அடித்தாள். சில வினாடிகள் பொறுத்தாள். அவர் வந்திருக்கிறார். பைக் இருக்கிறது. ஆனால் தூங்கியிருக்கக் கூடும். சாப்பிட்டாரோ என்னவோ !

தன் கைப்பையில் இருந்த இன்னுமொரு சாவியால் கதவைத் திறந்தாள்.

விளக்கைப் போட்டாள். ஹால் முழுதும் அலங்கோலமாக இருந்தது. ஆப்பிள் கொட்டைகள்.. பாதி கடித்திருந்து பல் பதிந்த ஆப்பிள்.. மாம்பழ ரசம் வழிந்து அழுக்கான டீப்பாய்.. தரையில் விழுந்து அழுக்கு பரப்பியபடி மாங்கொட்டை.... அழுக்கான சுமீத் மிக்ஸியின் அட்டை டப்பா.. அதன் உள்ளே பழுப்பாகிப் போன பழைய புத்தகங்கள்.. சில புத்தகங்கள் சோபாவில் பரப்பிவைக்கப்பட்டு காற்றாடியின் வேகத்துக்கு படபடத்துக்கொண்டிருந்தன... தரையில் பரண் மேல் ஏறிய தூசி.. வேணு மாலை குளித்துவிட்டு துவட்டிப் போட்ட நாற்றமான டர்க்கி டவல். உள்ளே லுங்கியோடு வேணு கிருஷ்ணன் தூங்கிக்கொண்டிருந்தான்.

இந்த ஹாலின் தோற்றம் அவளுக்கு பழக்கமான காட்சிதான்...

கைப்பையை கீழே வைத்துவிட்டு, ஒரு பெரு மூச்சு விட்டாள் "ப்ச்".. என்று சலித்தபடியே.

Saturday, June 06, 2009

ஓம் ஷாந்தி ஓம்

கதை முடிவதற்குள் திலீப்பும் வசந்தியும் சந்திக்கவேண்டும். எப்படி சந்திக்க வைப்பது ? திலீப் சென்னையில் இருக்கிறான். வசந்தி ஸ்ரீவில்லிப்புத்தூரில்.

"பார்த்து ! ஜாக்கிரதையா போயிட்டுவாடிம்மா ! கோபி.. உங்களை நம்பித்தான்டாப்பா வசந்தியை தனியா மதறாஸுக்கு அனுப்பறோம். போனோன்ன பக்கத்தாத்துக்கு ஒரு ட்ரங்க் கால் பண்ணி சொல்லிடு. நம்பர் குறிச்சிண்டியோன்னோ ?" வசந்தியின் அப்பா.

"கவலைப்படாதீங்கோ பெரிப்பா. அதான் சொன்னேனோல்லியோ. ஆத்துலேர்ந்து அஞ்சு நிமிஷ நடைதான் பின்னி மில்ஸ். பொழுது சாயரத்துக்குள்ளே ஆபீஸிலிருந்து வந்துடலாம். நான் பார்த்துக்கறேன்" என்றான் கோபி. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸில் வேலை பார்க்கும் துறுதுறுப்பான இன்ஞ்சினியர். பஸ் ஸ்டாண்டில் இந்த சமயத்தில் இவன் மட்டும்தான் பேண்ட் போட்டிருந்தான் என்பதால், இவர்களைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் ஒரு நோட்டம் விட்டுச்சென்றனர்.

வஸந்தியும் அவள் அம்மாவும் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தனர். வஸந்தி அம்மா வாங்கிக்கொடுத்த மல்லிகைப்பூச்சரத்தை தலையில் சூடிக்கொண்டிருந்தாள். சிகப்புத்திலகம் இட்டு நெற்றி ப்ரகாசமாய் இருந்தது. பர்மா பவுடர் கன்னத்தில் போட்டு, கண்ணோரத்தில் மை இட்டு முகம் லட்சனமாக இருந்தது. கண்களில் மட்டும் ஒருவிதமான மிரட்சி.

"சித்தப்பா கிட்டே ஜாக்கிரதையா நடந்துக்கோ. நாழிக்கு எழுந்து வாச தெளிச்சு ஆத்து காரியம் எல்லாம் பாரு. மகாராணியாட்டம் நடந்துக்க நம்ம ஆம் இல்லே. பிரத்தியார் ஆத்துல நல்ல பேர் வாங்கிக்கொடு."

"ம்ம்.."

பஸ் வந்துவிட்டது. "போயிட்டு வரேன் பெரிம்மா. வரேன் பெரிப்பா... "

சர்வ நிச்சயமாகப் போகப்போகிறோம் என்று தெரிந்தவுடன், தொண்டையை அடைத்துக்கொண்டது துக்கம். "கடுதாசி போடுடி..." என்றாள் அம்மா. சரி என்று சொல்லக்கூட முடியாமல் தலை ஆட்டினாள். தலை கனமாக இருந்தது. அப்பா நெற்றியைத் தடவி ஆசிர்வாதம் செய்தார். "ஜாக்ரதை கொழந்தெ !"

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து பஸ் கிளம்பியது.

அப்பாடா. வசந்தி நாளை சென்னை வந்துவிடுவாள். அதற்குள் இந்த திலீப் பயல் எங்கும் சென்றுவிடாதவாறு கதையில் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. எங்கே அவன் ?

கிண்டி ஒலிம்பியா வாசலில் நின்று அரட்டைக்கச்சேரி.

"இதெல்லாம் வேஸ்டு டா. ட்ரிப்லிக்கேன் போய்ப்பாரு. க்ளாஸிக் ஃபுட் மேன்.."
"அப்போ.. அங்கே வெச்சுக்கலாம் ட்ரீட்டை"
"தோடா ! இன் யுவர் ட்ரீம்ஸ் ! மெரிடியன்ல கொடுத்தாத்தான் ஆச்சு !"
"ரிடிகுலஸ்.. !!"

ப்ரமோஷன் ட்ரீட் பற்றி பேரம் பேசிக்கொண்டிருந்தான் திலீப்.

"மச்சி. கிளம்பறேன். லாங் டே... சீ யூ கைஸ் டுமாரோ !!"
"ட்ரீட் ?"
"நாளைக்கு பீச்ல முடிவு செஞ்சுக்கலாம்.."

வெரிகுட். வஸந்தியை நாளை எப்படியாவது பீச் கூட்டிக்கொண்டு வர வேண்டும்.

-----

"வா வா வா !! பெரிய மனுஷி !" என்று வரவேற்றாள் சித்தி. பேப்பர் படித்துக்கொண்டிருந்த சித்தப்பா "வாடி !! அப்பா அம்மால்லாம் நன்னாருக்காளா !" என்று கேட்டபடியே கேட்டை பார்த்தார். "கோபி எங்கே !".. "ஆட்டோக்கு பணம் கொடுத்துண்டுருக்கான். சித்ரா எங்கே சித்தி ?"... "உள்ளே போ ! உனக்காகத்தான் காத்துண்ட்ருக்கா..."

-----
"டேய்.. வேக் அப். ஒன்பது மணியாயிடுச்சு !"
"இன்னிக்கு லீவ் பா.. அம் டையர்ட்..."
-----

"என்னிலர்ந்து ட்யூட்டி ?" கேட்டார் சித்தப்பா.
"திங்கக்கிழமை லேர்ந்து சித்தப்பா".
"ம்ம்.. பின்னி மில்ஸ் ல தான் கோதண்டபானி வேலை பார்க்கறான். சொல்லியிருக்கேன்.. செவ்வா புதன்ல அவனைப்போய்ப்பாரு.. என்ன வேலை உனக்கு"
"ஸ்டெனோக்ராஃபர்".
"ம்ம்.. பீ.யூ.சி யெல்லாம் முடிச்சாச்சோன்னோ ?"
"ஆச்சு சித்தப்பா"..
"ம்ம்ம்... பொம்மனாட்டியெல்லாம் சம்பாதிக்கற காலம் வந்துடுத்து."
யாரும் பதில் பேசவில்லை.

"உனக்கென்னடி.. இன்னிக்கு லீவுதானே ?" என்றார் சித்ராவிடம்.
"ஆமாம்ப்பா.."
"கோபி. ரெண்டு பேரையும் அழைச்சிண்டு மெரினா போயிட்டு வா.. சாரதி கோயிலுக்கும் போயிட்டுவா. சனிக்கிழமை வேற"
"இல்லேப்பா.. 'ஆரதனா' சினிமாவுக்கு... வஸந்தியும் போலாம்ன்னா"
"அதெல்லாம் நீ தனியா போய்க்கோ.. எக்கேடு கெட்டுப்போ... இவாளையும் கெடுத்துடாதே. நான் சொன்னதை மட்டும் செய் போதும்."
"சரிப்பா.."
------

பீச்.

இங்கே முடித்துவிட வேண்டும். ஏற்கனவே கதை பிசி பிசு என்று ஆகிவிட்டது. இங்கே முடித்தால்தான் சிறுகதை.. இல்லையென்றால் தொடரும் போட்டு நாளை முடிக்க வேண்டும். வஸந்தி என்ன முடிவு செய்கிறாள் என்று பார்ப்போம்.
-----

பேருந்தில் ஏறுவதற்கு முன் வாங்கிய மல்லிகைப்பூவை சரி செய்துகொண்டாள் வஸந்தி. "ஆஹா. பட்டணம் எவ்வளவு விஸ்தாரமாக, வித்தியாசமாக இருக்கிறது. அவள் ஊரில் சப்-ரெஜெஸ்திரார் மாமாதான் கார் வைத்திருந்தார். இங்கே ஜட்கா வண்டி என்ன, ப்ளைமெளத் கார் என்ன, டாக்ஸி என்ன.. ஜிவுஜிவு என்று இருந்தது.

வாழ்க்கையை வென்று விட்டோம் என்ற பெருமிதம் அவள் கண்களில் தெரிந்தது. பி.யூ.சி யில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று டைப்ரைட்டிங் ஹையர் படித்ததும் மதறாஸில் விண்ணப்பித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது. மதறாஸில் கிடைத்ததுதான் சந்தோஷம். இங்குதான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். சொந்தக்காலில் சொந்தப்பணத்தை இங்கேதான் அனுபவிக்க முடியும். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இப்படியெல்லாம் நடக்காது. ஆராதனா பார்க்கலாம் என்றானே கோபி. நம்ம ஊருக்கெல்லாம் அந்தப்படமே வராது." என்றெல்லாம் நினைத்துக்கொண்டே வந்தவள், சடாரென்று தான் நினைத்ததையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்திப்பார்த்தாள். பெருமாளை எங்கேனும் நிந்தனை செய்துவிட்டோமோ என்று. இல்லை.. இங்கேயும்தான் பெருமாள் இருக்கிறார். பார்த்தசாரதியாமே.

-------
ஐந்தே முக்கால்.
"வேர் இஸ் த பாஸ்" என்று ஹோண்டாவை ஆஃப் செய்தபடி கேட்டான் திலீப்
"வந்துக்கிட்டு இருக்கான். ஃப்ளையோவராண்ட இருக்கான்"
"ஹ்ம்ம்.. டேய் மெரிடியன் ஹோட்டல் எல்லாம் ஓவர்டா.. சிக்ஸ் ஹண்ட்ரட் ஆகும்.. பெர் ஹெட்"
"அவன் வரட்டும் பேசி முடிவு பண்ணிக்கலாம்"
------

"கோபி. பசிக்கறது. சாப்டுட்டு பீச் போலாமே !"
"கொஞ்சம் பொறுத்துக்கோ.. பீச் போயிட்டு, போலாம். இல்லேன்னா திரும்பவும் பசிக்கும்.. இங்கே சோளா பூரி நன்னா இருக்கும்.. வாங்கித்தரேன் பாரு."
குதூகலமான மனோனிலையில் மிகச்சந்தோஷமாக இருந்தாள் வஸந்தி.

------
"ரெண்டு பேரும் பின்னாலே வாங்கோ. சித்ரா.. வாடி பின்னால.. எனக்கு பயம்மா இருக்கு"
"நீயும் வாட கோபி. கடற்கறை பார்த்து எவ்வளோ நாளாச்சு.. "
அலைகளைப்போலவே வசந்தியின் மனதிலும் துள்ளல் அதிகமாக இருந்தது. முன்னே முன்னே மார்பளவுக்கு முழுகும் வரை சென்றுவிட்டாள். சித்ரா கூட பயந்து பின்னே சென்றுவிட்டாள். சுதந்திரத்தின் உச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள் வஸந்தி.

போதும் என்ற கட்டத்துக்கு வந்தபின் திரும்பி கோபியையும் சித்ராவையும் பெருமிதத்துடன் பார்த்தாள். "நீயும் வா சி"........ ராட்சஸ அலை ஒன்று மண்டையில் விழுந்து அமுக்கியது.

-----

திலீப் கனுக்கால்வரை மட்டும் நனைத்துக்கொண்டு, கையில் ரீபாக் ஷூவுடன் நின்று கொண்டிருந்தான். இன்னுமொரு அலைவந்தது. முகத்தில் அமைதியாக ஒரு காற்று வந்து அடித்தது. சட்டென குணிந்து பார்த்தான். கால் கட்டைவிரலில் ஏதோ மாட்டிக்கொண்டிருந்தது. பட்டம் பறக்கவிடும் மாஞ்சா கயிறோ.. அல்லது, பூ தொடுக்கும் நாறாக இருக்கும்.

-----
"ஏண்டா உம்முன்னு இருக்கே.. "
திலீப்பும் நண்பர்களும் ட்ரிப்லிக்கேன் மெஸ்ஸில் உட்கார்ந்திருந்தனர்.
"சரிடா.. உனக்கு எங்கே தோனுதோ அங்கே குடு போதும்.. இப்பொ என்ன சாப்புடுறே?"

"சோளா பூரி" என்றான் விறைப்பாக.
"மச்சி.. இது சரவண பவன் இல்ல.. சங்கரன் மெஸ்.. இட்லியா தோசையா ?"
"சோளா பூரீ !!!!" என்று கத்தி கண்களால் மிரட்டினான் திலீப். பார்வையில் குரூரம் இருந்தது.

திலீப்பும் வஸந்தியும் சந்தித்து ஒன்னேகால் மணினேரம் ஆகிவிட்டது.

---
சுபம்.