
இந்த ஹாலிவுட் படாதிபதிகளுக்கு உலகத்தை அழித்து அழகுபார்ப்பதே வேலை. அப்படிப்பட்ட படங்களை ஒன்றுவிடாமல் வாய்பிளந்து பார்ப்பது என் வேலை. ஆனால் இதெல்லாம் ரொம்ப அலுத்துப்போய் இனிமேல் இந்த மாதிரி படங்கள் பார்ப்பதில்லை என்று கட்டுண்டிருந்தேன். ஆனால் 2012 ரிலீஸான சில நொடிகளில் சில விமர்சனங்களைப் படித்தேன். Roger Ebert என்பவர் எனக்கு ஏற்றார்போல் விமர்சனங்கள் எழுதுவார். இவரது தர அளவுகோலுக்கு ஹாலிவுட் வட்டாரங்களில் அதிக மரியாதை உண்டு.
அவர் சொன்னது - "You think you've seen end-of-the-world movies? This one ends the world, stomps on it, grinds it up and spits it out". இது படித்த சில மணி நேரங்களில் தியேட்டரில் இருந்தேன். நேற்றுதான் ரிலீஸ் ஆகியிருந்ததால், தியேட்டரில் கொஞ்சம் கூட்டம் இருந்தது.. அதனால் நாச்சோஸ் எதுவும் இல்லாமல், மரியாதையாக சீட்டில் சென்று உட்கார்ந்துவிட்டேன்.
படம் இரண்டரை மணி நேரம்.. போனதே தெரியவில்லை.. வழக்கமான பில்ட் அப்.. வழக்கமான பிரிந்துபோன குடும்பம்.. வழக்கமான அதிபர் மாளிகை.. வழக்கமான சென்டிமென்ட்.. வழக்கமான "கடைசி நிமிட மாட்டிக்கொள்ளுதல்".. அச்சு அசல் ஒரு ஃபார்முலா படம். ஆனால், இந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இருக்கிறதே ! யம்மா !! என்ன ஒரு ப்ரம்மாண்டம். 200 மில்லியன் டாலர்களை இறைத்து, ரிலீஸான ஒரே நாளில் 23 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கக்கூடிய மார்க்கெட் உள்ளவர்கள் மட்டுமே எடுக்கக்கூடிய ரிஸ்க்.
"Earth's crust replacement" என்ற ஒரு உல்லுலாங்க்காட்டியை படம் நெடுக காரணம் காட்டி, இந்த உலகத்தையே தலைகீழாக (நிஜம்மாகவே !) புரட்டி எடுக்கிறார்கள். இந்தப் பூச்சுற்றல் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த உலகம் அழியும் அழகு இருக்கிறதே !! ஆஹா.. அபாரம். தியேட்டரில் எல்லாரும், அடுத்த காட்சியில் என்னென்ன கட்டடங்கள் விழப்போகின்றன.. எந்த முக்கியமான ஸ்தலம் சிதிலமடையப்போகிறது.. எத்தனை பேர் உயிரிழக்கப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இனிமேல், நிஜம்மாகவே உலகம் அழிந்தால் கூட.. இந்த அளவுக்கு தத்ரூபமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். "இதெல்லாம் நாங்க முன்னாடியே பார்த்தாச்சு.." என்று காலரை மடக்கிவிட்டுக்கொள்ளலாம்.
இம்மாதிரி படங்களில் நம் எதிர்பார்ப்பை கொஞ்சம் சமன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், அச்சு அசலாக என்ன நடக்கப்போகின்றது என்று காண்பித்தால் பிசுபிசுப்பாக இருக்கும்.. பேரழிவுக்கு நடுவில் ஒரு குடும்பத்தின் / குடும்பத்தலைவனின் கதை என்பது கலிங்கத்துப் பரணியிலிருந்தே ஒரு சக்ஸஸ் பார்முலா... அது சோடை போனதே இல்லை. இந்தப்படத்திலும் அப்படியே.
நல்ல effect உள்ள தியேட்டராக சென்று ரூபாயைக் கொடுங்கள். இரண்டரை மணி நேரப் பொழுதுபோக்கு - உத்தரவாதம்.