அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நாட்கள் எல்லாம் நத்தை வேகத்தில் சென்றாலும் மாதங்கள் மனோவேத்தில் பறக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி மாதிரி.. ஆனால் மல்டி லெவல் ரிலேட்டிவிட்டி.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், பணம் செய்யப் பணம், செல்போன், லேப்டாப், இன்டெர்னெட், பக்திக்கு பிள்ளையார் படம், குளிருக்கு க்ளவுஸ், தலைவலிக்கு டைகர்பாம், மக்குக்கு பதிலாக காலியான தயிர் டப்பா.. என ஜபர்தஸ்தாக ஒருவழியாக சென்னையில் வாழ்ந்த வாழ்க்கைமுறையை இங்கேயும் நிலை நாட்டிய நேரத்தில்... தலைமுடி கண்ணை மறைத்தது.
பள்ளி நாட்களில் அதிகப்படியாக முடி வளர்த்து வாயின் நுணியைக் குவித்து, மூக்குக்கு வெளியே நகர்த்தி மேல் நோக்கி ஊதினால், ஒரு கொத்து மயிர்கள் காற்றில் இலகுவாக பறந்து மறுபடி வந்து கண்ணை மறைக்கும்.. கொஞ்ச நாட்களுக்கு அது பேஷனாக இருந்தது. பயாலஜி மாஸ்டர், முன்னம் பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனை, முடியைப்பிடித்து தூக்கி பளேரென்று அறைந்த அடுத்த நாளிலிருந்து க்ளோஸாக முடி வெட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். பேஷனை விட தற்காப்பு முக்கியமானது.
"தலைக்கு மேல வேலை" என்று சும்மா வெறும் ஜோக்காக இருக்கும் சிகை திருத்தும் செயல், கொஞ்சம் சீரியசானது என்பது சிலபேருக்கு மட்டும் தெரிந்தது. அம்பட்டனின் (இது ஏன் இழிசொல்லாக மாறியது என்பது எனது உண்மையான வருத்தம்) ஒரு தவறான கீரலில் ஒரு மாதம் நரகமாகும். One bad whip of a Scissor and there's no going back... unless there's a fast growing back.
சலூன் என்பது சுடுகாடு மாதிரி. "சமரசம் உலாவும் இடமே !"... அதாவது, நான் போகும் சலூன்கள்... அதாவது, வட சென்னையில் இருக்கும் சலூன்கள்..
டிப்பிக்கல் (அருமையான ஆங்கில வார்த்தை) சலூன் எப்படி இருக்கும் ? ஒரு பத்துக்குப் பதினைந்து அடி ரூம்.. துரு பிடித்த ஷட்டருக்குப் பின்னால் ஒரு சன் ஸ்க்ரீன் கண்ணாடி தடுப்பு, அதன் ஒரு ஓரத்தில் கதவு... எப்பொழுதும் திறந்தே இருக்கும்.. உள்ளே நுழைந்ததும் ப்ரதானமாக இரண்டு சுழல் நாற்காலிகள் (அதில் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஃப்ளோர் இருக்கும்.. ஷேவிங் செய்கையில் தலை சாய்த்துக்கொள்ள ஒரு வசதி.. உள்ளங்காலை அமர்த்திக்கொள்ள ஒரு குஷன் சீட் என பிரமாத சொகுசாய் இருக்கும்), அதன் முன்னேயும் பின்னேயும் பூதாகாரமான கண்ணாடிகள்... அதில் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் படங்கள்.. (ஆண்கள் மட்டுமே வரும் சலூனில் ஸ்த்ரீக்களின் படங்க்ள் வைப்பது ஒரு மிகப்பெரிய சைக்காலஜி ட்ரிக்).. சுவற்றில் ஒட்டினாற்போல் நீள வாக்கில் அலமாரி.. அதன் மேல், பத்துப் பதினைந்து சீப்புகள், (ஒன்றிரண்டு பளிச்சென்று இருக்கும்.. பாக்கி எல்லாம் ஹரப்பா மொஹஞ்சதாரோ காலத்தவை).. அப்புறம் தலையில் தண்ணீர் தெளிப்பதற்கென்று கொக்கு மாதிரி கழுத்து வளைந்த பச்சைக்கலர் பாட்டில் (தலைமுடி வெட்டும் வைபவத்தில் எனக்குப் பிடித்தது இந்த தண்ணீர் தெளிக்கும் விளையாட்டு).. பவுடர் டப்பி, அப்புறம் சின்னச்சின்னதாய் பாரின் டப்பாக்கள்.. என்ன இருக்குமோ தெரியாது.. அதை யாருக்கும் பயன்படுத்திப் பார்த்ததில்லை.. ஈசான்ய மூலையில் ஒரு டி.வி இருக்கும்.. ரொம்பவும் வசதி குறைந்த சலூனில் ரேடியோ இருக்கும்.. இடது ஓரத்து கப்போர்டுதான் கல்லாப் பெட்டி.. வலது ஓரத்தில் சரைக்கும் கத்தி + டோபாஸ் பிளேடு பேக்கட்..
பின்னங்கண்ணாடியின் கீழே நீளமான பென்ச்.. கொஞ்சம் வசதியான சலூன்களில் குஷன் போட்ட பென்ச்.. அதன் மீது குவிந்து கிடக்கும் தினத் தந்தி பேப்பர்... சினிமா மலர்.. தினத்தந்தி செய்திகள் எல்லாம் எமோஷனலாக இருக்கும்.. 'கதறக் கதறக் கற்பழிப்பு !!".. "கத்தியால் கோரமாக வெட்டிப் படுகொலை !!" (ஒரு செய்தியை மிக அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால், வல்லின மெய்களை பயன்படுத்திப் பாருங்கள்).. இப்படி சில பேப்பர்கள்.. முழு பக்கத்துக்கு சினிமா நடிகைகள் பொஸ்டர் நிறைந்த பேப்பர்கள்.. ஆண்டியார் பதில்கள் என்று கேனத்தனமான பேப்பர்கள் என்று .. தினத் தந்தி கலர்ஃபுல்லாக இருக்கும்.. மக்கள் இப்படியும் செய்தி வாசிக்கிறார்களா என்று தோன்றும்..
பெஞ்சின் மெறுமூலையில் ஒரு அட்டைத் தடுப்பு.. அதற்கு அந்தப்புறத்தில் ஒரு தண்ணீர் டாங்க்.. ஷேவிங் செய்யும்போது, க்ரீமையும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரையும், ஒரு கெமிக்கல் ப்ராஸஸ் மாதிரி தயார் செய்யும் இடம் அது... நடுவில் ஒரு ஷெல்ப்.. அதில்தான் ப்ரேதங்களைப் போர்த்தும் போர்வைகளன்ன துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சன்னமான வேகத்தில் சுழலும் ஃபேன்.. காற்றில் பறக்காத துண்டிக்கப்பட்ட ப்ரோட்டீன் முடிகள்.. வளைவு வளைவாய்... கொத்துக் கொத்தாய்..
இப்படித்தான் இருக்கும் - எங்க ஊர் சலூன்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை என்பது சலூன் கடைக்காரருக்கு தீபாவளி மாதிரி.. எவ்வளவு வேகமாக வெட்டினாலும், குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் எடுக்கும்.. "என்ன சம்முகம்... லேட்டாகுமா.. வெளியூருக்கு போனும்" என்று ஒருவர் எட்டிப்பார்த்து விசாரிப்பார்.. சலூன்காரர், பெஞ்சில் இருப்பவர்களை ஒரு நோட்டம் விடுவார்.. தலைக்கு இருபது நிமிடம் (literally) என்ற கணக்கு போட்டு ஒரு எஸ்டிமேஷன் கணக்கு போடுவார். நானும் சில சமயம் இந்த மாதிரி நோட்டம் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.. இல்லையானால், ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தினத் தந்தி படிப்பதிலேயே கழிந்துவிடும்.. சிறுவர்கள் இருந்தால்.. தக்குனூண்டு மயிருக்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது என்று தப்புக்கணக்கு போடக்கூடாது... அவர்கள் அரங்கேறினால் ஒவ்வொரு கீறலுக்கும் முடிந்துவிட்டது போலவே தோன்றும்.. ஆனால், பெரியவர்களுக்கு ஆகும் அதே நேரம்தான் இவர்களுக்கும்.. லேசாக வழுக்கை விழுந்தவர்களுக்கு, ironically, வழக்கத்தைவிட அதிக நேரம் பிடிக்கும்..
எல்லாம் முடிந்துவிட்டது.. அப்பாடா.. அடுத்து நாம்தான் என்று நினைக்கும்போது, சலூன்காரர் ஒரு business proposition செய்வார்.. "ன்னா.. சொற சொறன்னு இருக்கு... ஷேவிங் பண்ணிக்கலாமா.. ?" என்று என்னமோ கூட்டுமுயற்சி மாதிரி கேட்பார்.. முடி வெட்டிக்கொண்டவர், அந்த "மாயக்கண்ணாடியில்" ஒரு சினிமா நட்சத்திரம் தன் ஒப்பனை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு.. "எழவு... ஆமாம்லே.. செஞ்சிடு" என்று உத்தரவிடுவார்.. வெட்டப்படும் ஒவ்வொரு ரோமத்துக்கும் ரோமாஞ்சனமாகும் சலூன்காரர் (மன்னிக்கவும்.. கொஞ்சம் அதிகப்படியாக எதுகை மோனையில் எழுதிவிட்டேன்),... குஷியாகி க்ரீமை குழைக்க ஆரம்பிப்பார்.. நாம் நேற்றைய தினத்தந்தியை படிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான்.
நிற்க.. இந்தப் பதிவிற்கு ஏன் பட்டாபிஷேகம் என்று நாமகரணம் சூட்டினேன் ?
சலூன்கடையிலிருந்து வெளியே வந்து வீட்டுக்கு நடக்கும்போது, ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும்.. காதுக்கு இடுக்கில் அதிகமாக காற்று வீசுவதுபோல இருக்கும்.. எங்கோ வலிப்பது போல இருக்கும்... சட்டையில் முடி பிசுபிசுப்பாய் ஒட்டி இருக்கும்.. முடிவெட்டிக்கொண்டு வீடு திரும்பும் நாட்கள் மட்டுமே, அழுக்காய் தெருவில் நடமாடும் உரிமை கொண்டவை. You have a right to remain dirty.
அப்படி ஒரு நாளில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, எதிர்த்தவீட்டு மாமா எட்டிப்பார்த்துக் கேட்டார் - "என்னப்பா.. பட்டாபிஷேகமா ?" என்று.. வினோதமாக இருந்தது.. சலூனுக்குப் போய் வந்த சர்வ லட்சண அடையாளங்களைப் பார்த்துப் புரிந்துதான் கேட்டார் என்பதால், .. " ஹெ ஹெ ! ஆமாம் மாமா !" என்றேன்.. "அமாவாசையாச்சே ! அம்மா சொல்லலையா ?" என்று கலாச்சாரக் கேள்வி கேட்டார்.. அதற்கு என்ன சொல்லி மழுப்பினேன் என்று நினைவில்லை.. ஆனால், முடிவெட்டிக்கொள்ள செல்வதற்கு இன்னுமொரு நிக் நேம் கிடைத்தது அங்கேதான்.
மறுபடி, விட்ட இடத்துக்கு வருவோம். ஷேவிங் எல்லாம் செய்து முடித்தபின் அவரை விடுதலை செய்துவிட்டு, அவர்மேல் போர்த்தப்பட்ட துணியை உதறுவார்.. இந்த சமயத்தில்தான், பெஞ்சில் இருப்பவர்கள், அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் பார்ப்பார்கள்.. யார் அடுத்து, என்று.. அடுத்து நாம்தான் என்றால், thats the moment of truth ! பேப்பரை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு மஹாராஜா அரியணையை நோக்கி நடக்கும் கம்பீரத்தில் நடந்து எந்தக்காலை வைத்து ஏறுவது என்று தயங்கி, ஒரு மாதிரியாக ஏறி, கொஞ்சம் வளைந்து நெளிந்து சிம்மாசனத்தில் அமர்ந்தபின் எதிரே தெரியும் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.. என்னதான் நல்லதாக கண்ணாடி வாங்கி வீட்டில் வைத்தாலும், அந்த சலூன் கண்ணாடியில் தெரியும் முகம், அந்தப் பொலிவு, வீட்டில் நிச்சயமாக இருக்காது. மஹாராஜவின் அங்கியை போர்த்திவிட்டு மந்திரியின் பணிவுடன் "ஷார்ட்டா, மீடியமா ?" என்று கேட்பார்.
கிட்டத்தட்ட புதிதாக ஒரு மன்னனுக்கு முடிசூட்டு விழா நடந்து முடிந்தது போல இருக்கும்.. நல்ல பொருத்தமான பெயர்தான் - பட்டாபிஷேகம்.
மீடியம் என்று சொன்னால், முடி வெட்டியதே தெரியாது.. சும்மா காதுக்கு அருகில் கத்திரிக்கோலால் சப்தம் எழுப்பிவிட்டு, "போதுமா சார் !" என்று கேட்டால், நிஜம்மாக மீடியமாக வெட்டியது போல்தான் தோன்றும்.. ஒருதடவை அப்படி ஏமாந்தபின், எப்பொழுதுமே "ஷார்ட்" அல்லது "நல்லா ஷார்ட்" அல்லது "சம்மர் கட்".
கொஞ்ச நேரத்துக்குத்தான் மஹாராஜோபசாரம் எல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை தேய்ந்து மோவாய்க்கட்டையில் கைவைக்கப்படும்.. அதற்கப்புறம் சலூன்காரரின் கைப்பாவையாக மாறியாகவேண்டும்.. அஃதே நலம்.
ரொம்ப நேரம் நம்மை கண்ணாடியில் தோன்றும் நம் சுந்தர வதனத்தைப் பார்க்க விட மாட்டார்.. கன்னத்தில் கைவைத்து இடது மூலையைப் பார்க்கவைத்துவிட்டு வலது பக்க ரோமங்களை வெட்டிக்கொண்டிருப்பார்.. இப்பொழுதுதான் ஸ்ரீதேவிக்கும் மாதுரி தீக்ஷித்துக்கும் வேலை.. சலூன் கடையில் மட்டும் பெண்களின் படங்களை வெறித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்கப்போவதில்லை.. ஆனால் அச்சிற்றின்பமும் சொற்ப நேரத்துக்குத்தான்.. இடதுபக்கம் வெட்ட வருகையில் வலது பக்கம் திருப்பினால், பார்ப்பதற்கு எதுவுமே இருக்காது.. வெறுமென கத்திரிக்கோலின் வீச்சை காதில் வாங்கியபடி உட்காரவேண்டியதுதான்..
உங்கள் வயதையும், அந்த சலூனில் அனுபவத்தையும் பொறுத்து, உரையாடல் ஆரம்பமாகும்.. "ஜாப்ல இருக்கீங்களா ?".. "ஆமாம்... !" .. "கம்ப்யூட்டரா.. ?" .. "ஆஹ்.. ஆமாம்.. !".. "எம் மச்சான் பொண்ணுகூட அதுல தான் வேல செய்யுது.. காலேல போனா.. ராத்திரிக்குதான் வருது.. புழியறானுங்கல்ல ?" என்று உரையாடல் நீளும்.. கொஞ்சம் வயதானவராக இருந்தால் அரசியல்.. "பே கமிஷன் எல்லாம் ஐவாஷ் சார்.. சொம்மனாங்காட்டிக்கு வோட்டு வாங்க.. ".. வட சென்னை சலூன் கடைக்காரர்கள் எல்லாரும் Politically active.
எல்லாம் முடிந்தபின் முகம் பேயறைந்தார்ப்போல் இருக்கும்.. இப்பொழுதுதான் பவுடர் போட்டு ஸ்பாஞ்சால் மூஞ்சியைத் துடைப்பார்.. பின்னர், நம்மைக் கட்டிப்போட்ட அந்த துணியிலிருந்து விடுதலை செய்வார்.. வேட்டி கட்டிக்கொண்டு செல்லும் சில நாட்களில், இந்த துணியை எடுக்கும்போது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இனிமேல் மஹாராஜா பதவி விலக வேண்டியதுதான்.. "போதுமா சார் ?".. மெதுவ்வாக இறங்கி முன்னும் பின்னும் பார்த்து.. நம்ம லட்சணம் அவ்வளவுதான் என உணர்ந்துகொண்டு, பாக்கெட்டில் கைவிட்டு இருபத்து ஐந்து ரூபாயை (1996) எடுத்து கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக்கொள்வார்.. நாவிதர் !
இங்கே !! ?
நாளைதான் செல்கிறேன்.. Wish me luck !
Saturday, January 23, 2010
Monday, January 18, 2010
ஐ ஹேவ் அ ட்ரீம்

இன்று அமெரிக்காவில் "மார்டின் லூதர் கிங் ஜூனியர் தினம்". விடுமுறை.
படத்தில் நீங்கள் காண்பது "ரோஸா பார்க்ஸ்" என்ற பெண்மணியின் முழு உருவச்சிலை. டேலஸ் டௌன்டௌனில் நிறுவப்பட்டிருக்கும் இந்தச் சிலைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
1955 வருடத்தில், நிறபேதங்களின் உச்சக்கட்ட நாட்களில், ரோஸா பார்க்ஸ் என்பவர் மான்ட்கோமரி என்ற அலபாமா நகரத்தில் ஒரு பஸ்ஸில் ஏறினார். அமர்ந்தார். அவர் அமர்ந்த இருக்கை, கறுப்பு நிற மக்களுக்கா ஒதுக்கப்பட்டது.. பேருந்தின் முன் பக்க இருக்கைகள் பத்து - வெள்ளை நிற மக்களுக்கானது.. அவர் ஏறியபின் பேருந்து நின்ற மூன்றாவது நிருத்தத்தில் சில வெள்ளை மக்கள் ஏறியதில் சிலருக்கு இருக்கை இல்லாமல் நிற்க நேர்ந்தது.. இதனால், அந்தப் பேருந்தின் நடத்துனர் ரோஸா அமர்ந்திருந்த இருக்கை வரிசை முழுவதையும் எழுந்திருக்கச் சொன்னார். மூன்று பேர் எழுந்துகொண்டனர். அந்த நொடியிலிருந்து வரலாற்றின் பக்கங்களிலிருந்தும், அந்த இருக்கையிலிருந்தும் பிரிய மறுத்தார் - ரோஸா பார்க்ஸ்.
"When that white driver stepped back toward us, when he waved his hand and ordered us up and out of our seats, I felt a determination cover my body like a quilt on a winter night."
அந்த நிகழ்வின் பின்விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு முன்னால் பல கறுப்பு மக்கள் இதே போல கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த நிகழ்வு பெரிது படுத்தப்பட்ட அளவினால் வரலாறாகின்றது.
இந்தப் ப்ரச்சனைகளுக்கு குரல்கொடுக்கப் புதிதாக ஒரு எழுச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது - மான்ட்கோமெரி இம்ப்ரூவ்மென்ட் அசோசியேஷன் என்ற அந்த இயக்கத்துக்கு புதிதாக அங்கே குடிபெயர்ந்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க காலத்தின் பாதையில் இந்நிகழ்வுகள் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தன.
இந்த நிகழ்வின் எதிரொலியாக கறுப்பு மக்கள் பேருந்தில் பயணிப்பதை புறக்கணித்தனர். சும்மா ஒன்றிரண்டு நாட்களுக்கு இல்லை... முழுதாக முன்னூற்று எண்பத்தோரு நாட்கள். அதன் அதிர்வலையாக நடந்த பல சட்ட மாற்றங்கள், மன மாறுதல்கள், சமுதாய மாறுதல்கள் - இன்றைய அமெரிக்காவை செதுக்கின.
மார்டின் லூதர் கிங் - நம்ம ஊர் மஹாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதே மாதிரி சுதந்திர ய்த்தத்தை அமெரிக்காவில் அரங்கேற்றினார். Non-violent resistance !
இவரது சொற்பொழிவுகள் வரலாற்று சிறப்புவாய்ந்தவை. வாஷிங்டன்னில் இவர் அரங்கேற்றிய "I have a dream" என்ற உரை இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதில் எனக்குப் பிடித்த வரி - ""I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character.""
இவரது உரைகள் பிரபலமாக ஆரம்பித்தன.. இவர் உரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது.. ஊடகங்களின் கவனம் அதனால் கிடைத்தது.. அதன் மூலம், அமெரிக்க தேசத்தையே அவர் கருத்து சென்றடைந்தது. இந்த கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கியமான சட்ட சீரமைப்புக்கள் அமைய உதவின.. அந்த சட்ட மாற்றங்கள், கறுப்பு நிற மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தின..
இன்று பேரக் ஒபாமா என்ற கறுப்பர் அமெரிக்காவை ஆள்கிறார்.
இவர் தேர்தலுக்காக போட்டியிட்டபோது யாரோ ஒருவர் எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது.
Rosa Parks sat so Martin Luther King could walk
Martin Luther King walked so Obama could run
and Obama is running so our children can fly
சுபம்
Thursday, January 07, 2010
குளிர்
டேலஸ் நகரில் குளிர் வாட்டி எடுக்கிறது, குறைந்தபட்சம் என்னை. அவஸ்தை என்பதை விட, போர் அடிக்கிறது என்றே சொல்லவேண்டும். சுளீர் என்று வெய்யில் பார்த்து ரொம்ப நாளாகிறது. இதை டைப் செய்யும்போது வெளியே -14 டிகிரி... வெளியே சென்று லேப்டாப்பை வைத்தால், குளிரில் தானாக டைப் அடித்துக்கொள்ளும். இந்த ஊரில் எல்லாரும் ஃபாரன்ஹீட் கணக்கில் டிகிரியை குறிக்கிறார்கள். அப்படிச் சொன்னால் எனக்கு உறைக்க மாட்டேன் என்கிறது. 7 டிகிரி ஃபாரென்ஹீட் என்பதைவிட -14 டிகிரி செல்சியஸ் தான் உண்மை நிலையை குறிப்பதுபோல உணர்கிறேன்.
சும்மானாச்சும் வெளியே போய்விட்டுவந்தால், முகம் சில்லிட்டுக்கிடக்கிறது. சிரிக்க முடியவில்லை.. வாய் திறக்கமுடியவில்லை... இப்பொழுதெல்லாம் வெளியே பனியில் போய்விட்டுவந்தால், கண்ணாடிமுன் நின்று பார்த்து எல்லா ரியாக்ஷன்களும் வேலை செய்கின்றனவா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறேன்.
இந்த ஊர்க்காரர்களுக்கு இது பழக்கமான விஷயம் என்றாலும், இந்த வருடம் போல் எப்போதும் இருப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். "செ ! இந்த வருஷம் வெய்யில் பிளக்குது.. போன வருஷத்தைவிட இப்பொ ஜாஸ்தி" என்று மே மாதத்தின் வெகுஜன டையலாக் நினைவு வந்தது.
பனியன், ஜட்டி, சட்டை, பேன்ட், ஸ்வெட்டர், ஜெர்க்கின், ஸ்கார்ஃப், க்லவுஸ், குல்லா... எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல ரோட்டில் நடந்து செல்கிறேன். அந்த ரோட்டில் பெரும்பாலும் யாரும் நடந்து செல்வதில்லை.. இந்த ஊரிலேயே பொதுவாக நடப்பதில்லை... ஆபீஸ் வந்துவிட்டால் ப்ரச்சனையில்லை.. உள்ளே கதகதப்பாக இருக்க ஹீட்டர் முழுவீச்சில் ஓடும்.
எப்படியோ, இன்றைய சீதோஷ்ணத்திற்கு ரோட்டில் ஐஸ் தேங்கிக் கிடக்கிறது என்பதால் அலுவலகம் செல்லப்போவதில்லை. இன்னுமொரு போரிங் டே !
சும்மானாச்சும் வெளியே போய்விட்டுவந்தால், முகம் சில்லிட்டுக்கிடக்கிறது. சிரிக்க முடியவில்லை.. வாய் திறக்கமுடியவில்லை... இப்பொழுதெல்லாம் வெளியே பனியில் போய்விட்டுவந்தால், கண்ணாடிமுன் நின்று பார்த்து எல்லா ரியாக்ஷன்களும் வேலை செய்கின்றனவா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறேன்.
இந்த ஊர்க்காரர்களுக்கு இது பழக்கமான விஷயம் என்றாலும், இந்த வருடம் போல் எப்போதும் இருப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். "செ ! இந்த வருஷம் வெய்யில் பிளக்குது.. போன வருஷத்தைவிட இப்பொ ஜாஸ்தி" என்று மே மாதத்தின் வெகுஜன டையலாக் நினைவு வந்தது.
பனியன், ஜட்டி, சட்டை, பேன்ட், ஸ்வெட்டர், ஜெர்க்கின், ஸ்கார்ஃப், க்லவுஸ், குல்லா... எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல ரோட்டில் நடந்து செல்கிறேன். அந்த ரோட்டில் பெரும்பாலும் யாரும் நடந்து செல்வதில்லை.. இந்த ஊரிலேயே பொதுவாக நடப்பதில்லை... ஆபீஸ் வந்துவிட்டால் ப்ரச்சனையில்லை.. உள்ளே கதகதப்பாக இருக்க ஹீட்டர் முழுவீச்சில் ஓடும்.
எப்படியோ, இன்றைய சீதோஷ்ணத்திற்கு ரோட்டில் ஐஸ் தேங்கிக் கிடக்கிறது என்பதால் அலுவலகம் செல்லப்போவதில்லை. இன்னுமொரு போரிங் டே !
Monday, January 04, 2010
ஏரோப்ளேன்

சனிக்கிழமையன்று டேலஸ் விமான நிலையத்துக்கு அருகே (கிட்டத்தட்ட உள்ளே) அமைந்துள்ள ஏர்போர்ட் அப்ஸர்வேஷன் ஏரியாவிற்குச் சென்றிருந்தோம். விமானங்கள் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்குள் நுழைவது போல இருக்கும் லேண்டிங் காட்சிகளை வெகு அருகில் இருந்து பார்க்க முடிந்தது.
எவ்வளவு அருகில் என்று இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.
Sunday, January 03, 2010
Friday, January 01, 2010
களி & சாம்பார்

ஜனவரி ஒன்று - ஆருத்ரா தரிசனம் என்று அம்மா சொன்னவுடன், களி & சாம்பார் ஞாபகம் வந்தது. ஞாபகம் வரும்போதெல்லாம் பெருமூச்சு வருகிறது, இங்கே அமெரிக்காவில் (அமெரிக்காவில் இருந்து ப்ளாக் எழுதினால், குறைந்தபட்சம் மூன்று முறை அமெரிக்கா என்ற வார்த்தை இடம்பெற வேண்டும் என்பது சட்டம்).
புது வருடத்தை ஒரு விஷப்பரிட்சையுடன் (சரியாகச் சொல்வதானால், பலகாரப் பரீட்சை) ஆரம்பிக்க தீர்மானித்தேன். அம்மா ஸ்கைப்பில் சொல்லச் சொல்ல டேலஸ் நகரத்தின் ஒரு மூலையில் திருவாதிரை களி தயார் ஆனது. அக்டோபர் மாதக் கடைசியில் அமெரிக்கா (அப்பாடா, மூன்று முடிந்தது) வந்ததிலிருந்துதான் என் சமையல் ப்ரதாபங்கள் ஆரம்பம். ஆனால், அது ஒரு இனிமையான + வெற்றிகரமான நிகழ்வாகிக்கொண்டிருப்பதை நினைத்தால் மகிழ்வாக இருக்கிறது.
நியூ யார்க் ஏர்போர்ட்டில் ஆரம்பித்தது அதிர்ச்சி... சென்னையில் ஹோட்டலுக்குள் மெனு கார்டை படிக்கும் பழக்கம் அவ்வளவாக எனக்கு இல்லை. உத்தேசமாக "தோசை" என்று சொன்னால், "சாதா தோசையா ?" என்று கேட்பார். "வேற என்ன தோசை இருக்கு" என்று புத்திசாலித்தனமாக கேட்டால், தமிழ் நாட்டின் ஜாதி எண்ணிக்கையை விட அதிகமான வகைகளை பட்டியலிடுவார். அவர் ஒப்பிக்கும் வேகத்தில் மனதிலேயே தோசை வார்த்துப் பார்ப்பேன்.. மனம் அலைபாய ஆரம்பிக்கும்... எதை எடுப்பது, எதை விடுவது... நூற்றுக்கு எண்பது தடவை, வெயிட்டர் கடைசியாகச் சொன்ன தோசை ஜாதியைத் தான் ஆர்டர் செய்வேன்.. "இந்த ஹோட்டல்ல கோபி மசாலா தோசை நல்லா இருக்கும்" என்று சொல்லிக்கொள்வேன்.
நியூ யார்க்கிலிருந்து டேலஸுக்கு போகக் காத்திருந்த வேளையில், பசித்தது. அங்கே இருந்த ஒரு கடைக்குள் நுழைகையில், என்ன வாங்கலாம் என்று யோசித்தேன். அந்த நிமிடத்தில் இருந்து "வெஜிடேரியன்" என்பது எனது முக்கியமான அடையாளம் ஆனது. நம்ம ஊரில், எந்த மாமிச உணவாக இருந்தாலும் , அதற்கு ஈக்குவெலண்ட் காய்கறி உணவு வகை உண்டு.. என் நண்பன் சிக்கன் 65 வாங்கினால், நான் கோபி 65 வாங்குவேன். ட்ரேகன் சிக்கனுக்கு ட்ரேகன் பொட்டேட்டோ... என்று போட்டிக்குப் போட்டி ஐட்டம் இருக்கும்.. இங்கேயும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, மேலே பட்டியலிட்டிருந்த உணவு வகைகளின் பெயர்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். "பேக்கன், பீஃப், சிக்கன், ஸ்டீக், பெப்பரோனி, போர்க், ஷ்ரிம்ப்" இவை இல்லாத உணவுவகைகளே காணோம். ஒன்று இரண்டு இருந்தது.. அவைகளை நம்ப மனம் மறுத்தது. ஒரு ஹெர்ஷீஸ் சாக்லேட் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "இனிமேல் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்".
என் நண்பன் நன்றாகச் சமைப்பதால், ஒரு தமிழனின் அடிப்படைத் தேவைகளான சாம்பார், ரசம், கூட்டு , கறி எல்லாம் நிம்மதியாகக் கிடைத்தன. அவனிடம் குருகுல வாசம்.. காய்கறி நறுக்கிக் கொடுப்பது.. சாதம் வடிப்பது... காப்பி போடுவது என்று ஒத்தாசையாக செய்து கொண்டிருக்கிறேன்.
திடீரென்று ஒரு நாள், பெரும் விஞ்ஞானிகளுக்குத் தோன்றும் ஒளிக்கீற்று எனக்குள் தோன்றியது.. ஐஸக் நியூட்டன் ஒரு ஆப்பிளைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்தாரோ, அதே மாதிரி. என் விஷயத்தில் அது ஒரு பீட்ரூட். இதை வைத்து அல்வா செய்யலாமே, என்று எண்ணம் - சபலம் - ஆசை - பேராசை - திட்டம் - முடிவு போன்ற பல கட்டங்களைத் தாண்டி செயலில் இறங்கினேன். இரண்டு மணி நேர முதலீட்டில் என் வாழ் நாளின் முதல் அல்வா "பொளுக்" என்று இனிப்பாக சத்தம் போட்டது. அட்டகாசம்.
அன்றிலிருந்து இன்றுவரை என் சமையலறை சகாப்தத்தில் வெளிவந்த சக்ஸஸ்ஃபுல் ஐட்டங்கள்
- ரவா உப்மா
- பீட்ரூட் அல்வா
- ரவா கேசரி
- பால் பாயசம்
- பயத்தம் பருப்பு பாயசம்
- சர்க்கரைப் பொங்கல்
- வெண் பொங்கல்
- புளி கொஸ்து
- வெஜிடபிள் மேகி
- குடமிளகாய் / கேரட் / உருளைக்கிழங்கு கறி
இப்பொழுது, களி & சாம்பார்.
தனி ஒருவனுக்கு உணவில்லையேல், ஜகத்தில் சமைத்திடுவோம் !
நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த புதிய ஆண்டு, மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்.
Subscribe to:
Posts (Atom)