நிகழும் மாசி மாதம் ஒரு சுக்ரவாரத்தில், கிழக்கே சூலம் இருக்கையில், சுபயோகம் கூடிய சுபதினத்தில் சிகைத்திருத்தம் நடைபெற்றது. பதினாறு டாலர்களை க்ரெடிட் கார்டிலிருந்து பிதுக்கி எடுத்துக்கொண்டார்கள் என்பதைத் தவிர ஸ்வாரஸியமாக எதுவும் இல்லை. நவநாகரீக நங்கையர் நாவிதர்களாக நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
நம்ம ஊர் மாதிரி அரசியல் சினிமா எதுவும் பேச்சுக் கொடுக்கவில்லை. "ஒபாமா ஹெல்த்கேர் எல்லாம் எங்க ஊர் பே கமிஷன் மாதிரி உல்லுலாங்காட்டி போல ஆயிடும் போல இருக்கே !" என்று பேச்சு கொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கு முடி வெட்டுக்கொண்டிருந்த டீனா, "ஓ ! வுட் யூ லுக் அட் தட் ?" என்று டி.வியை காட்டினார். மைக் டைசனுக்கும் ஹோலிஃபீல்டுக்கும் சண்டை நடக்குமா நடக்காதா என்று ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. "வாட் டூ யூ திங்க் ?" என்று திமிர்ந்த ஞானச்செருக்கோடு கேட்டாள்.
"தீஸ் பீப்பிள் ஆர் க்ரேஸி !" என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னேன். "யூ ஆர் ரைட் !" என்றாள். அந்தப் பாராட்டில் சிலிர்த்தெழுந்த என் கழுத்து ரோமங்களை கத்திரிக்கோல் வெட்டிச் சாய்த்தது.
நான்கு நிமிடத்தில் நான்கு மாத சாகுபடி அறுவடையானது. காதுக்கும் கழுத்துக்குமிடையே மூடப்பட்டிருந்த தென்றல் நெடுஞ்சாலை திறக்கப்பட்டு போக்குவரத்து ஜிலீரென்று ஆரம்பமானது. பெரும்பாரம் தலையிலிருந்து இறக்கிவைக்கப்பட்டது போன்றதொரு புத்துணர்வு.
பகை இழந்தானும் - நெடு நாள் வளர்த்த
சிகை இழந்தானும் - பாரம் குறைந்து புத்
தகை கொள்வார்.. என்றும் எதிலும்
மிகை என்பது நன்றன்றன்றோ !
எப்புடி ?